ஞாயிறு, 27 மார்ச், 2011

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! – பாக்யராஜ் பேச்சு


நாகர்கோயில்: இந்தத் தேர்தலுக்குப் பின், வைகோவின் நிலைதான் விஜயகாந்துக்கும் ஏற்படும் என்றார் இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ்.
குமரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் நேற்று பிரசாரம் செய்தார். நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலையிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.மகேசை ஆதரித்து பேசினார்.

அவர் பேசுகையில், “இந்தியாவில் படித்தவர்கள் நிறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் படித்தவர்கள் நிறைந்த பகுதிகளாக உள்ளன.
ஆகவே தி.மு.க. சார்பில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், எதிர் அணியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை யும் நீங்கள் படித்து இருப்பீர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டதும், எதிர் அணியினர் என்ன தேர்தல் அறிக்கை கொடுப்பது என்று கூட யோசிக்கவில்லை.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளனர். ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். உடனே அந்த அம்மா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.
கருணாநிதி கிரைண்டர், மிக்சி கொடுப்போம் என்றதும், கிரைண்டர், மிக்சியுடன், மின்விசிறி கொடுப்போம் என்றார். திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவரே இந்த அம்மையார்தான். திருமண நிதி உதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்.
அவர் திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தருவோம் என்று கூறி உள்ளார். கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிறிது மாற்றி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
வைகோ 5 ஆண்டுகளாக உடன் இருந்தவர், அவரையே கழற்றி விட்டார். அதனால் வைகோ தேர்தலில் நிற்கவில்லை என்று போய் விட்டார். அந்த கூட்டணியில் சேர்ந்துள்ள விஜயகாந்துக்கும் அதே நிலைதான் வரும்.
அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா அதை மட்டுமே கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஞ2006-ம் ஆண்டு ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு கொடுப்போம், டி.வி. வழங்குவோம் என்று அறிவித்தார். இது எப்படி செய்ய முடியும் என்று கேட்டனர். ஆனால் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு வழங்கப்படுகிறது.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே தலைவர் கருணாநிதி தான். எப்போதும் மக்களை பற்றியே நினைப்பவர் அவர். அதனால்தான் தன் தேர்தல் அறிக்கையில் முதியோர்கள், இளைஞர்கள், பெண்களை எண்ணி தயாரித்துள்ளார்.
ஆனால் சிலருக்கு தேர்தல் வரும் போதுதான் மக்கள் மீது பாசம் வருகிறது. ஆகவே இந்த தேர்தலில் தி.மு.க. கூட்ட ணியினரை வெற்றி பெறச் செய்து கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க வேண்டும். அதற்கு நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மகேஷை வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்றார்.

கருத்துகள் இல்லை: