சனி, 13 ஏப்ரல், 2024

மு.க.ஸ்டாலின் எனது அண்ணன். நான் வேறு எந்த அரசியல் தலைவரையும் இப்படி அழைப்பதில்லை” என ராகுல் காந்தி

கலைஞர் செய்திகள் - Prem Kumar : மு.க.ஸ்டாலின் எனது அண்ணன். நான் வேறு எந்த அரசியல் தலைவரையும் இப்படி அழைப்பதில்லை” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று (12-04-2024) கோவை மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எழுச்சியுரை ஆற்றினார்.

ராகுல் காந்தி ஆற்றிய உரை பின்வருமாறு; “இந்தியாவில் சிந்தாந்தப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. அதனால் மோடி அரசு இப்போது வீட்டிற்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோடி அரசு என்று சொன்னாலும், உண்மையில் இது அதானியின் அரசு. காரணம் மோடி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு தந்துவிட்டார்.

அதானி விரும்பியதால் மும்பை விமான நிலையத்தை வேறு ஒருவரிடம் இருந்து பறித்து அதானிக்கு கொடுத்துவிட்டார். அதானி எதை விரும்பினாலும், மோடி அவருக்கு அதை எளிதாக வாங்கி கொடுத்துவிடுவார்.
“மு.க.ஸ்டாலின் எனது அண்ணன், நான் வேறு யாரையும் இப்படி அழைப்பதில்லை” : ராகுல் காந்தி நெகிழ்ச்சி பேச்சு!

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எனது எம்.பி பதவி, நான் தங்கி இருந்த வீடு என அனைத்தையும் பறித்தார்கள். அந்த வீடு போனது பற்றிக் கவலை இல்லை. காரணம், நாடு முழுவதும் எனக்கு உங்கள் இதயங்களில் இடம் இருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் எனக்காக வீட்டுக் கதவை திறந்து வைப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவாகும்.

ஏன் தமிழ் மொழி, பண்பாடு, வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவன் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள்.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற, பல நிறுவனங்களை ED, IT போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி, பணம் பெற்றுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மோடிதான் இதனை செய்கிறார். மேலும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஒப்பந்ததைக் கொடுத்து, ரூ.1,000 கோடி அளவிற்கு மிகப்பெரிய நன்கொடையை பாஜக பெறுகிறது. மோடி செய்த ஊழலில் இது சிறு பகுதிதான். இந்த ஊழலை செய்துவிட்டு மோடி தன்னை சுத்தமானவர் என்று அழைத்துக் கொள்கிறார்.
“மு.க.ஸ்டாலின் எனது அண்ணன், நான் வேறு யாரையும் இப்படி அழைப்பதில்லை” : ராகுல் காந்தி நெகிழ்ச்சி பேச்சு!

மோடி ஆட்சியில், 22 பெரும் பணக்காரர்கள் 70 கோடி மக்களின் பணத்தை வைத்திருக்கிறார்கள். கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த பணத்தை வைத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் விவசாயிகளுக்கு 24 ஆண்டுகளுக்கு ஊதியம் தந்திருக்கலாம்.

கல்வி வழங்கும் பல்கலைக்கழங்களில் வேந்தர்களாக, அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில், தேர்தல் ஆணையத்தில், நீதித்துறையில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று, மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனை உடனடியாக தடுத்தாக வேண்டும்.

சமூக நீதியை பொறுத்தவரை ஸ்டாலின் தெளிவாக கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்குவோம். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக எடுப்போம். இந்தியாவில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அந்த பணியிடங்களை நிரப்பி, வேலைவாய்ப்பின்மையை முற்றிலும் நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொள்வோம்! கோவையில் வீசும் காற்று, விரைவில் புயலாக மாறும். அந்தபுயல் அதானிகளை, மோடிகளை அதிகாரித்தில் இருந்து தூக்கி எரியும்!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னதாக “எனது மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலின். அரசியலில் ஸ்டாலின் அவர்களை தவிர வேறு யாரையும் நான் சகோதரர் என்று குறிப்பிடுவதில்லை.” என்றார் ராகுல் காந்தி.

கருத்துகள் இல்லை: