வியாழன், 11 ஏப்ரல், 2024

: எ.வ.வேலு : அதிமுக எப்படியாவது 2ஆவது இடத்துக்கு வந்துருங்க... பிஜேபிய விட்றாதீங்க...

 மின்னம்பலம் -Kavi  :  “மக்களவைத் தேர்தலில் அதிமுகவினர் எப்படியாவது இரண்டாவது இடத்திற்கு வந்துவிடுங்கள், பாஜகவை இரண்டாவது இடத்துக்கு விட்டுவிடாதீர்கள்” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் எம்.கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன், திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், பிரதமர் மோடியிடம் சொல்லி திருவண்ணாமலையில் ஏர்போர்ட் அமைக்கப்படும். கிரிவலப்பாதை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரயில் பாதை, மாதம் ஒருமுறை இலவச வேலைவாய்ப்பு முகாம், திருவண்ணாமலை கோயிலை மத்திய அரசின் கீழ் கொண்டுசெல்வேன்  உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.


இந்நிலையில், திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில்  பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தில் பேசிய எ.வ.வேலு, “விமான நிலையத்தை கொண்டு வருவோம் என்று அவர் சொல்கிறார். நான் ஒன்று சொல்கிறேன்… தமிழ்நாட்டில் இல்லை, இந்தியாவில் எங்கு சென்று விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதாக இருந்தாலும் அல்லது புதிய விமான நிலையத்தை உருவாக்குவதாக இருந்தாலும் அதற்கு பணத்தை போட்டு, இடத்தை கையகப்படுத்தும் பணி தமிழ்நாட்டு அரசுக்கும், மாநில அரசுக்குதான் உண்டு.

நாம் நிலத்தை வாங்கி கொடுத்து எல்லாம் செய்து கொடுத்தால், அவர்கள் வந்து ரோட்டை போட்டு, இரண்டு காம்பவுண்ட் சுவற்றை கட்டிவிட்டு, அதானியிடமோ, அம்பானியிடமோ ஒப்படைத்துவிடுவார்கள்.

8 பேர், புல்லாங்குழல் மற்றும் கோவில் இன் படமாக இருக்கக்கூடும்

விமான நிலையம் கட்டப்படவேண்டுமானால் அது திமுக ஆட்சியால்தான் செய்ய முடியும்.

தேர்தலில் வெற்றி பெற்றால், திருவண்ணாமலை கோயிலை மத்திய சுற்றுலாத் துறையிடம் ஒப்படைப்பேன் என்று அவர் சொல்கிறார்.

இவரது அப்பாவும் இப்படிதான் செய்தார். திருவண்ணாமலை கோயிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க அத்தனை முயற்சியையும் எடுத்தார்.

நாமெல்லாம் போராடினோம். அப்போது கலைஞர் திருவண்ணாமலை வந்து அண்ணா சிலைக்கு முன் பேசினார்,  “இந்த கோயிலை மக்களிடம் ஒப்படைப்பேன்” என்று சொன்னார்.

பின்னர் மன்மோகன் சிங் ஆட்சி வந்ததும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி இந்த கோயிலை மீண்டும் திருவண்ணாமலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி.

இப்போது சுற்றுலாத்துறையிடம் ஒப்படைப்போம் என்று இவர் சொல்கிறார். நாங்கள் விட்டுவிடுவோமா… அது நடக்காது.

இப்போது அதிமுகவிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். எப்படியாவது தயவு செய்து இரண்டாவது இடத்துக்கு வந்துவிடுங்கள். பிஜேபியை வர விட்டுவிடாதீர்கள். எப்படியாவது முயற்சி செய்து அதிமுக நண்பர்கள் இரண்டாவது இடத்துக்கு வந்துவிடுங்கள் என்று வாழ்த்துகிறேன்” என கூறினார் எ.வ.வேலு.
பிரியா

கருத்துகள் இல்லை: