திங்கள், 11 மார்ச், 2024

பொன்முடி தண்டனை நிறுத்தி வைப்பு- எம் எல் ஏ .. அமைச்சர் பதவிகளை தொடரலாம் - உச்சநீதிமன்றம்

 தினமலர் :புதுடில்லி: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
தற்போதைய திமுக அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் கடந்த 2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 2011ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்தது.



இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

இதனால் பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்தார். ஜனவரி 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். அப்போது, இவ்வழக்கில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது.

இந்த நிலையில் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளித்ததை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

நிறுத்தி வைப்பு
இந்த மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 11) நீதிபதி அபய் எஸ்.ஓஹா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவரது திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை நிறுத்திவைப்பால், பொன்முடி எம்எல்ஏ.,வாகவும், அமைச்சராகவும் தொடர்வதில் சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: