திங்கள், 11 மார்ச், 2024

சிறைக்குள் இருந்து வேட்பாளர் செலக்ட் செய்யும் செந்தில்பாலாஜி... அண்ணாமலைக்கு காத்திருக்கும் ஸ்டாலின்

 minnambalam.com  - Aara  :  வைஃபை ஆன் செய்ததும் திமுக நேர்காணல் வீடியோக்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவில் விருப்ப மனு கொடுத்த வேட்பாளர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது குறித்த நேர்காணல் இன்று (மார்ச் 10) ஒரே நாளில் நடந்து முடிந்திருக்கிறது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி, முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு ஆகியோர் நேர்காணலை நடத்தினார்கள். ஒவ்வொரு தொகுதியாக அழைத்து அமர வைத்து நேர்காணலை ஒருங்கிணைத்தார் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை.
ஒவ்வொரு தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்தவர்களை மொத்தமாக அமரவைத்து அவர்களோடு அந்தத் தொகுதிக்கு உட்பட்ட மாசெக்களை வைத்துக் கொண்டு ஐந்தாறு நிமிடங்களில் நேர்காணல்களை முடித்தார் ஸ்டாலின்.

வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளான உங்கள் கல்வித் தகுதி, சமுதாயம், வெற்றி வாய்ப்பு பற்றியெல்லாம் கேட்டார் ஸ்டாலின். ஆனால் இம்முறை நேர்காணலில், ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்படவில்லை. இதுவே திமுகவினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

10 பேர் மற்றும் மேடை இன் படமாக இருக்கக்கூடும்

கரூர் தொகுதிக்கான நேர்காணலில் கலந்துகொண்டவர்கள், ‘இப்போது காங்கிரஸ் வசம் இருக்கும் கரூரில் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும். மாசெ.வான செந்தில்பாலாஜியின் விருப்பமும் இதுவே’ என்று கூறியிருக்கிறார்கள் நிர்வாகிகள். செந்தில்பாலாஜி ஏற்கனவே இதுகுறித்து திமுக தலைமைக்கு தகவல் அனுப்பிவிட்டார். தேர்தலுக்கு முன் செந்தில்பாலாஜியை வெளியே விடக் கூடாது என்பதில் அமலாக்கத்துறை தீவிரமாக இருக்கிறது. தேர்தல் வரைக்கும் சிறையில் இருந்தால் கூட, சிறையில் இருந்தபடியே கரூரில் திமுகவை நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தன்னை சந்தித்தவர்கள் மூலமாக சொல்லியனுப்பியிருக்கிறார் செந்தில்பாலாஜி. அந்த வகையில் கரூரில் காங்கிரஸ் இம்முறை போட்டியிடாது என்கிறார்கள் நேர்காணலுக்கு வந்த கரூர் நிர்வாகிகள்.

ஈரோடு தொகுதிக்கு நேர்காணலுக்கு சென்றவர்களும், ‘இம்முறை ஈரோட்டில் திமுகவே நிற்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள். ஈரோடு தொகுதியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரான பிரகாஷை நிறுத்த உதயநிதி முடிவு செய்து,  இதுகுறித்து முதல்வரிடமும் பேசியிருக்கிறார்.  பிரகாஷோடு இளைஞரணியின் நிர்வாகிகள் எல்லோரும் திரண்டு போய் விருப்ப மனு அளிக்குமாறும் உதயநிதிதான் தெரிவித்திருந்தார். ஆனால் ஈரோடு மாசெவும் அமைச்சருமான முத்துசாமி, தொகுதியை எப்படியாவது காங்கிரசுக்கு தள்ளிவிட வேண்டும் என்பதில் இன்று வரை குறியாக இருக்கிறார்.

கரூர் நேர்காணலில் நடந்தது பற்றி அறிந்த ஈரோடு திமுக நிர்வாகிகள், ‘செந்தில்பாலாஜி சிறைக்குள்ள இருந்தாலும் தன் தொகுதியில காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடக் கூடாது, திமுகதான் போட்டியிடணும்னு காய் நகர்த்துறாரு. ஆனா நம்ம முத்துசாமியோ திமுகவுக்கு வர்ற தொகுதிய காங்கிரஸுக்கு தள்ளிவிடப் பாக்குறாரு’ என்று அறிவாலய வளாகத்திலேயே பேசிக் கொண்டனர்.

இதேபோல கோவை தொகுதியில் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஆர். நடராஜன் எம்.பி.யாக இருக்கிறார். கோவை தொகுதியில் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் வற்புறுத்தியிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது  அண்ணாமலையிடம் தேர்தலில் போட்டியிடுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு அண்ணாமலை, ‘ஆளும் திமுகவின் அமைச்சர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் அதிக அளவு பணத்தோடு தமிழகம் முழுதும் களமிறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஈடுகொடுத்து தமிழகம் முழுதும் பாஜகவின் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த நான் மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்வதே சிறந்தது என்று கருதுகிறேன். அதேநேரம் தலைமை சொன்னால் நான் தேர்தலில் போட்டியிடவும் தயாராக இருக்கிறேன்’ என்று மோடியிடமே சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. இந்த கருத்துக்கு, ‘சரி… முடிவு செய்வோம்’ என்று சொல்லிச் சென்றிருக்கிறார் மோடி. அதன் அடிப்படையில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்புகள் இருப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த சூழலில் ஒருவேளை கோவையில் அண்ணாமலை போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி முதல் பலரும் களமிறங்குவார்கள். அந்த நிலையில் திமுக அங்கே போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறார் முதல்வர் ஸ்டாலின். எனவே அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பதை பொறுத்தே திமுக கோவையில் போட்டியிடுகிறதா இல்லையா என்று தெரியவரும்”  என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: