புதன், 26 ஏப்ரல், 2023

தங்கராஜு சுப்பையா: விடிந்தால் தூக்கு – சிங்கப்பூர் தமிழருக்கு எதிரான கஞ்சா வழக்கில் என்ன நடந்தது?

BBC : சிங்கப்பூரில் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் மரண தண்டனை, நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு நிறைவேற்றப்பட உள்ளது.
அவரை காப்பாற்ற கடைசி கட்ட முயற்சியாக கருதப்படும் கருணை மனு மறுஆய்வு சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அந்த மனு நிராகரிக்கப் பட்டுள்ளதால் தங்கராஜு சுப்பையா என்ற அந்த தமிழரின் தண்டனை நிறைவேற்றம் உறுதியாகியிருக்கிறது.
மரணத்தின் கடைசி நேரத்தை அந்த நபர் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், பலவீனமான சாட்சியங்கள் அடிப்படையில் தங்கராஜு சுப்பையா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.


ஆனால், அரசு அதிகாரிகளோ தண்டனை விதித்தலுக்கு முந்தைய அனைத்து நடைமுறை மற்றும் வாய்ப்புகளை தங்கராஜு பெற்றதாகவும், புதன்கிழமை அவரது மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விளம்பரம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் அறிவுசார் குறைபாடுள்ள ஒருவருக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த தண்டனை நிறைவேற்றப்பட்ட ஓராண்டுக்குள் மற்றொரு மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு சிங்கப்பூர் அரசு தயாராகி வருகிறது.

சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம் என்று வாதிடுகிறது அந்நாட்டு அரசு.

தங்கராஜு சுப்பையாவின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் சமீபத்திய நாட்களில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு மரண தண்டனை மன்னிப்பு வழங்கக் கோரும் மனுக்களை கடைசி கட்ட முயற்சியாக அளித்திருந்தனர்.

இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பவரான பிரிட்டிஷ் பெரும் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சன் தங்கராஜுவின் மரண தண்டனையை நிறுத்தவும் அவர் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளார்.

தங்கராஜுவின் சகோதரி லீலா சுப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது சகோதரர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். அவரது வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

என்ன வழக்கு?
தங்கராஜு சுப்பையாவின் சகோதரி லீலாவதி சுப்பையா (மனுவுடன் இருப்பவர்), ஏப்ரல் 23ஆம் தேதி சிங்கப்பூரில் கருணை மனுவுடன் அதிபர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை டெலிவரி செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

டெலிவரி செய்யும் போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் தங்கராஜுவுக்காக டெலிவரி செய்த நபர் பயன்படுத்திய இரண்டு செல்பேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தாம் இல்லை என்று தங்கராஜு வாதிட்டார். தமது ஒரு செல்பேசி தொலைந்து போய் விட்டதாகவும் போலீஸார் கண்டுபிடித்த மற்றொரு செல்பேசி தன்னுடையது இல்லை என்றும் தங்கராஜு மறுத்தார்.

சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது. அதை விநியோகிக்கும் நபர்களுக்கு குறைவான தண்டனைகள் விதிக்கப்படும்.
இந்த வழக்கில் தங்கராஜுவின் கடைசி மேல்முறையீட்டில், கஞ்சா டெலிவரியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தது தங்கராஜு தான் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறினார்.

இதனால் மென்மையான தண்டனைக்கு தங்கராஜு தகுதியற்றவர் ஆகிறார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

செயல்பாட்டாளர்கள் கவலை
தங்கராஜுவுக்கு மொழிபெயர்ப்பாளருக்கான போதிய அணுகல் வழங்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வழக்கறிஞரைப் பெற முடியாமல் போனதால் தனது கடைசி மேல்முறையீட்டை தங்கராஜுவே வாதிட வேண்டியிருந்தது என்றும் செயல்பாட்டாளர்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

ஆனால், இந்த வழக்கு விசாரணையின்போது தான் தங்கராஜு மொழிபெயர்ப்பாளரைக் கோரினார் என்றும் அதற்கு முன்பாக அவர் அதை கோரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றபடி வழக்கின் அனைத்து விசாரணை நடைமுறைகளின் போதும் அவருக்கு சட்ட உதவி கிடைத்தது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

2022 ஆம் ஆண்டு அறிவுத்திறன் குறைபாடு உடைய நாகேந்திரன் தர்மலிங்கம் வேறொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார். அந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த சர் ரிச்சர்ட் பிரான்சன், தங்கராஜுவின் வழக்கு “பல நிலைகளில் அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறுகிறார்.

ஒரு வலைப்பதிவு இடுகையில், சிங்கப்பூர் “சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளின் ‘பின்னணியில்’ ஒரு நிரபராதியை கொல்லப் போகிறது” என்று ரிச்சர்ட் கூறியுள்ளார்.

“சிங்கப்பூரின் நற்பெயருக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கும் வழக்கம், ஒரு அழியாத கறையாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற தண்டனையை (மரண தண்டனை) நிறைவேற்றுவது பிரச்னையை மேலும் மோசமாக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ரிச்சர்ட்டின் குற்றச்சாட்டுகளை மறுத்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், அவரது கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் “சிங்கப்பூர் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பை அவர் அவமதிக்கிறார்” என்றும் குற்றம்சாட்டியது.

சிங்கப்பூரை பாதுகாப்பாக்கும் அரசின் பல்நோக்கு அணுகுமுறையில் மரணதண்டனை “ஒரு முக்கிய அங்கம்” என்றும் உள்துறை கூறுகிறது.
சிங்கப்பூர் மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞர் குழுவான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) செய்தித் தொடர்பாளர் கிர்ஸ்டன் ஹான், இந்த விஷயத்தில் அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

“சர்வதேச அரங்கிலும் ஐ.நா.விலும் சிங்கப்பூர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், குடிமக்களின் பெயரால் மக்களைக் கொல்லும் உரிமையைப் பாதுகாப்பது சிறப்பானது என்பதற்காக அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டியதில்லை,” என்று அவர் கூறினார்.

அண்டை நாடுகளில் என்ன நிலைமை?
சிங்கப்பூரின் கடுமையான விதிகள் அதன் அண்டை நாடுகளின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு முரணாக உள்ளன.
தாய்லாந்து அரசாங்கம், கஞ்சா வர்த்தகத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. அதே நேரத்தில் மலேசியா கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை விதித்தலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தங்கராஜுவின் குடும்பத்தினர், தூக்கிலிடப்படும் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானதையடுத்து, சாங்கி சிறையில் கண்ணாடி கூண்டுக்கு பின்னால் இருந்து தங்கராஜுவை சந்திக்க முடிந்தது,” என்று தெரிவித்தனர்.

“அவர் என் அம்மா உடைந்து விடுவதை விரும்பாததால், துணிச்சலுடன் இருப்பதாக காட்டிக் கொண்டார்,” என்று தங்கராஜுவின் மருமகள் சுபாஷினி இளங்கோ கூறினார்.
“இந்த நாள் வருவதற்கு அவர் மனதளவில் தயாராகிவிட்டார். இந்த வழக்கில் தனக்கு பெரிய அநீதி இழைக்கப்படுவதை அவர் உணர்கிறார். செய்யாத காரியத்துக்காக அவர் தூக்கிலிடப்படுவார்,” என்று அவர் தெரிவித்தார்.

தங்கராஜுவின் மரணம், தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
“என் அண்ணனுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கலாம். அது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதனால் தொடர்ந்து போராடுவேன், என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.

கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து தங்கராஜுவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா என்ற ஏக்கத்தில் அவர்கள் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: