ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

நெடுந்தீவில் 5 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

 வீரகேசரி :  யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், 3 பெண்களும் 2 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெடுந்தீவு, மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இன்று ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படுகொலை இடம்பெற்ற வீடு கடற்படை முகாம் முன்பாகவே அமைத்துள்ளதாகவும், கடற்படை முகாம் முன்பாகவே படுகொலை எனின் அம்முகாம் எதற்கு? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் கடற்படையினர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

நெடுந்தீவில் இன்று நடைபெற்ற கோரப்படுகொலை தொடர்பில் நேர்மையான விசாரணை நடாத்தப்படவேண்டும். நெடுந்தீவு மாவிலி இறங்குறையினை அண்மித்தவாறு அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவு – இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இச்சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேற்படி வீட்டின் உரிமையாளரான பெண்ணின் கணவர் 1985 ல் சிறீலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குமுதினி படகு படுகொலையில் கொல்லப்பட்டவர் ஆவார்.

வருடாந்தம் நாங்கள் நெடுந்தீவு மாவிலி இறங்குறையில் முன்னெடுக்கின்ற குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளில் குறித்த பெண்மணி தவறாது கலந்துகொள்வார்.

நெடுந்தீவு தனிநாயகம் அடிகளாரின் ஞாபகார்த்த சிலையின் பின்புறமாகவும் நெடுந்தீவின் பிரதான கடற்படை முகாமாகிய வசப முகாமின் எதிர்ப்பக்கமாவும் இவ்வீடு அமைந்திருக்கின்றது.

கடற்படைமுகாமுக்கும் இவ்வீட்டிற்கும் சில மீற்றர் இடைவெளியே காணப்படுகின்றது . நூற்றுக்கணக்கான கடற்படையினர் காணப்படுகின்ற இம்முகாமின் முன்னாலுள்ள வீட்டின் மீது இவ்வாறான தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்செல்வதென்பது எண்ணிப்பார்க்கமுடியாத சம்பவமே.

சாதாரணமாக நெடுந்தீவுக்குள் நுழையும்போதே ஆள் அடையாள அட்டை பதிவு செய்தல், குறுக்கு விசாரணைகள் போன்ற நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இவ்வாறான கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு இலகுவாக தப்பிச்செல்லமுடியுமெனின் பாரியதொகையிலான மக்களின் வரிப்பணத்தில் அந்த முகாம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


Post Views: 33

கருத்துகள் இல்லை: