ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

12 மணி நேர வேலைச் சட்டம்: தனி மனித வாழ்க்கையில் ஆடும் ஆட்டம்

 மின்னம்பலம் : தனியார் தொழில் நிறுவனங்களில் 12 மணிநேர வேலையை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவை நேற்று (ஏப்ரல் 21) சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது திமுக அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் போன்ற திமுகவின் கூட்டணிக் கட்சிகளே வெளிநடப்பு செய்தன.
இந்த நிலையில் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல்… மக்களும் இந்த சட்டத்துக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறார்கள்.
இதுகுறித்து பல்வேறு கோணங்களில் சமூக தளப் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
அவற்றில் திருப்பூரைச் சேர்ந்த சம்சுதீன் ஹீராவின் பதிவு இந்த சட்டம் ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்தை எப்படி சிதைக்கும் என்பதை தத்ரூபமாக எடுத்துக் காட்டுகிறது.
இதோ அந்த பதிவு…
”12 மணிநேர வேலைன்னா 9.00 – 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல.
திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா?
9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்டுக்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும்.



8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.30க்கு ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் என்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும்.

8.30 க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.20 க்கு பஸ்சிலிருந்து இறங்கியிருக்கனும். அதுக்கு அவன் 8.00 மணிக்கு பஸ் ஏறியிருக்கனும்.

8 மணி பஸ் ஏற அவன் 7.50 க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30 க்கு வீட்டிலிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30 க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்திருக்கனும்.

நைட் 9 மணிக்கு மெஷின் ஆஃப் பண்ண பிறகு எடுத்து வெச்சிட்டு 9.15க்கு யூனிட்லர்ந்து வெளியே வந்து, எக்சிட் ரெஜிஸ்டர் பண்ணி ஃபாக்டரிக்கு வெளியே வரும்போது 9.30 ஆகியிருக்கும்.

பஸ்ச பிடிச்சு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு ஓடி அப்பாடான்னு உக்காரும்போது 10.30 ஆகியிருக்கும். சாப்பிட்டு முடிச்சு பெட்டுக்கு போறப்ப மணி 11 ஆகியிருக்கும். ஆகமொத்தம் தூங்கறதுக்கு கிடைக்கிற மிச்ச நேரம் 7 மணிநேரம்.

பொண்டாட்டி பிள்ளைகளோட ரெண்டு வார்த்த பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பாக்கவோ, பக்கத்து வீட்டு மனுஷங்கள எட்டிப் பாக்கவோ, புத்தகம் வாசிக்கவோ நேரம் ஒதுக்கனும்னா மிச்சம் இருக்கிற அந்த ஏழு மணிநேரத்துலதான் கழிக்கனும்.

இதுல வேலைக்கு போற பெண்கள் நிலைமைய யோசிச்சு பாருங்க. காலைல சமைக்கனும், புள்ளைகளுக்கு ஊட்டனும், ஸ்கூல்க்கு கிளப்பனும், புருஷங்கார புடுங்கிக்கு பணிவிடைகள் செய்யனும். இதெல்லாம் முடிச்சிட்டுதான் வேலைக்கு கிளம்பனும்.

அப்படினா அவ எத்தன மணிக்கு எந்திரிக்கனும்?

இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா?

மனுஷங்கள உணர்வுகளற்ற மெசின்களா மாத்தப்போகுற இந்த இரக்கமில்லாத சட்டத்த உசுரக்குடுத்தாவது முறியடிக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சம்சுதீன் ஹீரா.
–வேந்தன்

கருத்துகள் இல்லை: