வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

 மின்னம்பலம் -Kavi  : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்குமாறு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நேற்று, தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில்,
“உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை” என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி , ரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை நாங்கள் ஏற்கிறோம்.
அதிமுக வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலை இருக்கிறது.


கட்சியின் சின்னம் குறித்து எந்த பிரச்சினையும் எழுப்பப்படவில்லை. பொதுக்குழுவின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஒரு தரப்பை மட்டும் அங்கீகரிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பன்னீர் செல்வம் தரப்பில், “அதிமுக சார்பில், அதாவது இருவரும் சேர்ந்து நிறுத்தும் வேட்பாளருடைய வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார். எடப்பாடி பழனிசாமி தேர்தல் படிவங்களில் கையெழுத்திட தயாரா.

அப்படியானால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்ப பெறுகிறோம். பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது” என்று வாதிடப்பட்டது.

இதற்கு முடியவே முடியாது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில், நாங்கள் அறிவிக்கும் வேட்பாளரை தான் ஓபிஎஸ் ஏற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, இல்லை இல்லை பொது வேட்பாளரை தான் ஏற்க முடியும் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் சரி இருவரும் கையெழுத்து போட வேண்டாம். எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உத்தரவை பிறப்பிக்கிறோம். இரு தரப்பினருமே முரண்டு பிடிக்கிறீர்கள். நாங்கள் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

பிரியா

கருத்துகள் இல்லை: