வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

சென்னை ரோகினி திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் சடலம்; போலீசார் விசாரணை

 nakkheeran.in  சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் உள்ள தண்ணீர் தொட்டியில் திரையரங்கில் வேலை பார்த்து வந்த எலக்ட்ரீசியன் சடலமாக மிதந்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பார்க்கிங் பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக லாரி வந்திருந்தது.
அப்பொழுது தண்ணீர் தொட்டியில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தெரிந்தது.


உடனடியாக லாரி ஓட்டுநர் ராமலிங்கம் திரையரங்க உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். சடலமானது அழுகிய நிலையிலிருந்தது தெரியவந்தது.
 தண்ணீர் தொட்டிக்குள் சடலமாகக் கிடந்தவர் திரையரங்கில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த வெங்கடேச பெருமாள் என்பது தெரியவந்தது.

கடந்த 26ம் தேதி வேலைக்கு வந்த வெங்கடேச பெருமாள் தண்ணீர் தொட்டியை பராமரித்த பொழுது மதுபோதையில் உள்ளே விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. யாரும் கவனிக்காததால் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலானது கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: