சனி, 4 பிப்ரவரி, 2023

வாணி ஜெயராம் அவர்கள் காலமானார்..

 nakkheeran.in  வங்கி வேலையை உதறித் தள்ளிய இசை ஆர்வம்; வரலாற்றில் வாணியும் இசையும்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அவரின் இசைப் பயணம் குறித்த முகநூல் பதிவொன்று அவரது வாழ்க்கையின் முழுத்தொகுப்பை  வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
 அந்த பதிவானது,
'1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. குறிப்பாக இவருடைய தாயார் இசையில் ஆர்வம் கொண்டவர்.
கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைப் பயின்று வந்த சிறுமி கலைவாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.


சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகு பணி மாறுதல் வாங்கிக்கொண்டு மும்பையில் வசித்தார். வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கணவராக ஜெயராம் அமைந்ததால் அவரே உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். வாணிஜெயராம் முதலில் பாடியது மராத்தி மொழியில். மராத்தியில் இவர் பாடிய பாடல் பல விருதுகளை இவர் குரலுக்கு பரிசாக கொடுத்தது.

இவரது இசை பயணம் 2 வயதிலேயே தொடங்கிவிட்டது என்றால் மிகையாகாது. அந்தப் பிஞ்சு வயதில் ராகங்களையும், இசைக் குறிப்புகளையும் இவரால் இனம் கண்டுகொள்ள முடிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 'கலைவாணியின்' பரிபூரண ஆசியும், முறையான சங்கீதப் பயிற்சியும் இவரது திறமையை மெருகேற்றின. திருமணத்துக்குப் பிறகு மும்பை சென்றவர், உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி மெல்லிசைப் பயிற்சியும் பெற்றார்.

தினமும் 18 மணிநேர அசுர சாதகம்...தும்ரி பஜன் மற்றும் கஜல் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் வாணி. 1969, மார்ச் 1ம் தேதி அரங்கேற்றத்தில் பொழிந்த இசை மழையில் நனைந்த ரசிகர் கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது. மும்பையின் அத்தனை சபாக்களும் வாணியிடம் தேதி கேட்டு வாசலில் தவம் கிடந்தனர். இந்தி இசையமைப்பாளர் வசந்த் தேசாயிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அடுத்த நாளே பாடல் பதிவு. இதைத் தொடர்ந்து மராத்தி பாடல் வாய்ப்புகள் குவிந்தன.

இசையமைப்பாளர் வசந்த தேசாய் தான் இசையமைத்த குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில்,  ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாட வாய்ப்பளித்தார். அந்த படத்தில் பாடிய  'போல் ரே பபி ஹரா' 5 விருதுகளை பெற்றுத்தந்தது. தான்சேன் விருது உட்பட.

பின்னர் வட நாட்டில் மராத்தி உட்பட குஜராத்தி,மர்வாரி, போஜ்புரி என அனைத்து மொழிகளிலும் தென் நாட்டில் தமிழ் ,மலையாளம்,, கன்னடம் ,தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பாடிய தமிழ் பாடகி என்ற் புகழைப் பெற்றார். இசையே முக்கியம் என்று நினைத்ததால் வங்கிவேலையை விட்டு விலகி கச்சேரிகளில் பாடி துவங்கினார்.

இப்படி  திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்தது. ரசிகர்கள் வரவேற்பால் அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது.

இந்தி மொழியில் கிடைத்த வரவேற்பு, புகழ், இவருக்கு தமிழிலும் பாட வாய்ப்புஏற்படுத்தி தந்தது. நாட்டின் பிரபலமான அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இந்தியாவின் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார். வாணிஜெயராம் அவர்கள் இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வட நாட்டில்தான்.

முதல் முயற்சியிலேயே அவரது இந்திப் பாடல் பெரிய  வெற்றி பெற்றுவிட்டதால். அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமைகூட வந்ததாகவும்.  எந்த இசையமைப்பாளராவது வாணிஜெயராமை  பாடவைத்தால், அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் பிரச்சனை செய்ததாக செய்தி உண்டு.

ஒரு கட்டத்தில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்தார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

ஒரிஸாவிலும், வங்காளியிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு திராவிட மொழிகளிலும் வாணி ஜெயராம் புகழ் கொடி கட்டிப் பறக்கிறது.

அழகான இவர் முகமும் அழகான இவர் குரலும் அழகாக பின்னப்பட்ட காவியம் ஆகும். வாணி ஜெயராம், இந்திய இசை உலக மகுடத்தில் மின்னும் வைரம். கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக ரசிக நெஞ்சங்களில் இசைமழை பொழிந்துவரும் மேகம். 'வர்ண'ஜாலம் காட்டிவரும் வானம்பாடி. 10000 பாடல்களை கடந்த  இவரது இசைப்பயணம் தொடர்கிறது.

"மனம் போல் சிரிப்பது பதினாறு" என்ற பாடல் மூலம் தமிழகத்தில் பிரபலமானார்.

இவர் சென்னையில் பஜன் சம்மேளனில் கலந்து கொண்ட போது, MSV தலைமை தாங்கினார். இவர் குரலை கேட்டதும்,  பாட வாய்ப்பளித்தார்.

"மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ..'
என்ற பாடல் மூலம் தமிழகத்தில்
புகழ் பெற்றார்.

vani

1976... 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒலித்த 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.
தேசிய விருதும் தேடி வந்தது.

அழகே உன்னை ஆராதிக்கிறேன்,

மீரா,
சங்கராபரணம், ஸ்வாதிகிரணம்.. என்று இந்த இசைக் குயிலின் தேவராகத்தில் பிறந்த பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களைகொள்ளையடித்தது, தேசியவிருதுகளைத் தேடித் தந்தது.
 

அபூர்வ ராகங்களில்

"ஏழு ஸ்வரங்களுக்குள் " என்ற பாடலும்

"கேள்வியின் நாயகனே" என்ற பாடலும்,
புகழ் பெற்ற பாடல்கள்.

"ஆடி வெள்ளி தேடி உன்னை,"

"வசந்த கால நதிகளிலே"

என்ற பாடல்களில் இவரது இனிமையான குரலை இன்றும் ரசிக்கலாம்.

ஜானகியுடன் இணைந்து பாடிய,
"பொன்னே பூமியடி ,
இரண்டும் தாய்மையடி"என்ற பாடல் மிகவும் அழகு!

ஏழு ஸ்வரங்களுக்குள்’,

‘மழைக்கால மேகம்,

 மகராஜன் வாழ்க’,

‘முத்தமிழில் பாடவந்தேன்’
என அவர் ஆரம்ப காலத்தில் தமிழில் பாடிய பாடல்களில் நயமும் இனிமையும் சேர்ந்து தெய்வீக தன்மையும், கைகோர்த்து
நல்ல வரவேற்பைப் பெற்றது.

"நானே நானா யாரோ தானா."

"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது."

போன்ற பாடல்களை ஹிந்துஸ்தானி ராகத்தில் அழகாக பாடி இருப்பார்.

அவரது இனிமையான பாடல்களில் மேலும் குறிப்பிடும் வகையில் அமைந்தது,

"நாதமெனும் கோவிலிலே."
'நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா"
"இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே."
"பொங்கும் கடலோசை"

இவையெல்லாம் காலத்தால்அழியாத பாடல்கள்.

பாலை வனச் சோலை திரைப்படத்தில் வரும்
"மேகமே..மேகமே...பால் நிலா தேயுதே."
ஒரு கஜல் பாடலாக அமைந்தது.

"யாரது.. சொல்லாமல் நெஞ்சள்ளி போவது".
"என்னுள்ளில் ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது".
அப்படியே பெண்களின் ஏக்கத்தை குரலில் கொண்டு வந்திருப்பார்.

புனித அந்தோனியார் திரைப்படத்தில் இடம்பெற்ற
"விண்ணில் தோன்றும் தாரகை
எல்லாம் தேவதையாகும்
மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்"

மதங்களை கடந்து புகழ் பெற்ற பாடல்.

பி. சுசீலாவுடன் இணைந்துபாடிய
‘பாத பூஜை’ திரைப்படத்தில் இடம்பெற்ற
‘கண்ணாடி அம்மா உன் இதயம்’, ‘அந்தமான் காதலி’யில் இடம்பெற்ற
 நினைவாலே சிலை செய்து’,
‘சினிமாப் பைத்தியம்’ திரைப்படத்தில்
 ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘தங்கப்பதக்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற
‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு,"
‘பாலாபிஷேகம்’திரைப்படத்தில் ‘ஆலமரத்துக் கிளி’ எனஅவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார்.

பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்
அவர் பாடிய
ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற
‘என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஏக்கம்"
அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற
 ‘நானே நானா யாரோ தானா’,
‘சிறை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அதேபோல் ஏமாற்றத்திற்குள்ளான பெண்ணின் ஆற்றாமையை தனது
குரலில் வெளிப்படுத்தும் வகையில் அவர் பாடிய
‘சவால்’ படத்தின்
‘நாடினேன்.. நம்பினேன்’
,சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தின்
‘கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா ‘
மயங்குகிறாள் ஒரு மாது’ திரைப்படத்தில் இடம்பெற்ற
 ‘ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற
"‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.

தாய்மை அடைந்த பெண்ணின் பல்வேறு உணர்வு நிலைகளை வெளிப்படுத்தியதில்
'திக்கற்ற பார்வதி’
திரைப்படத்தில் இடம்பெற்ற
 ‘ஆகாயம் மழை பொழிஞ்சா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற
‘மலர்போல் சிரிப்பது பதினாறு’ ‘சாவித்திரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற
‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’ ஆகிய பாடல்கள் சிறந்த உதாரணங்கள்.

காதல் பாடல்களாக
 ‘மீனவ நண்பன்’திரைப் படத்தில் இடம்பெற்ற
‘பொங்கும் கடலோசை’.
‘அவன்தான் மனிதன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற
‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’
இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் இடம்பெற்ற
‘ஒரே நாள் உனை நான்’ என்ற பாடல்
குறிப்பிடத்தக்க பாடல்கள்.

இவருக்கு மாற்று யாருமில்லை என்று எண்ணத்தக்க வகையில் அனைத்து பாடல்களிலும் அவர் வெளிப்படுத்தும் சஞ்சாரங்கள் பிரமிக்க வைப்பவை. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும்.

தெலுங்கில் எண்ணற்ற பாடல் பாடியுள்ளார்.

"என்னென்னோ ஜென்மல பந்தம்"
 என்ற பாடலும்,
மரோசரித்ரா திரைப்படத்தில் இடம்பெற்ற
"விதி சேயு விந்தலன்னி " பாடலும்  இவருடைய இனிமையான குரலுக்கு சாட்சி.

சங்கராபரணம் படத்தில் அவரின் குரலில் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.  இரண்டாம் முறையாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

"புரோச்சே வாரெவுரா,
மானஸ சஞ்சரரே ப்ரஹம்மணீ,"
"ஏ தீருக நனு தய ஜூசே,"
"பலுகே பங்கார"
"தொரகுணா இட்டுவண்ட்டி ஸேவா." என்ற இந்த பாடல்கள்  இன்றளவும் ரசிக்கவைக்கும் பாடல்கள்.

மூன்றாவது முறையாக, அவருக்கு "சுவாதி கிரணம்" திரைப்படத்தின்
"ஆனந்தி நீயாரா"
என்ற சாஸ்திரிய இசைப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

நௌஷாத்,
மதன் மோகன்,
ரவிசங்கர்,
ஓ.பி.நையர்,
ஆர்.டி.பர்மன்,
கல்யாண்ஜி ஆன்ந்த்ஜி,

லஷ்மிகாந்த் ப்யாரேலால்,

கே.வி. மகாதேவன்,

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி,

இளையராஜா..
சங்கர் கணேஷ்,

ரஹ்மான் என்று இவர் பாடாத இசையமைப்பாளர்களே இல்லை.

பண்டிட் ரவி சங்கர் இவரின் ஹிந்துஸ்தானி திறமையை வியந்து, மீரா படத்தின் அனைத்து பாடல்களையும் பாட வைத்தார். தும்ரி என்பது ஹிந்துஸ்தானி கலைஞர்கள் பாடும் ஒரு வித பக்தியும் பஜனையும் கொண்ட பாணி பாடல்.  ராதே கிருஷ்ணா மேல் கொண்ட அன்பால் பாடப்படும் செமி கிளாசிக் பாடல்கள்.

கடுமையான, நுட்பமான வட இந்திய ஹிந்துஸ்தானி பாணி. குறிப்பாக உத்திர பிரதேச கலைஞர்கள் பின்பற்றுவது. இதில் நல்ல பரிச்சயமும், பாடும் திறனும் கொண்டவர் வாணி.  கடினமான, ஈடுபாடும், பயிற்சியும் தேவை. இதில் வெகு சிலரே ஈடுபடுவார்கள். நமது வாணி ஜெயராம் தும்ரி பஜன் கலைஞரும் ஆவார். கர்நாடக, ஹிந்துஸ்தானி, கஜல், பஜனை, தும்ரி, பக்தி. நாட்டுபுற பாடல் என எல்லாவற்றையும் அருமையாக பாடக் கூடிய ஒரு உன்னத கலைஞர்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’
‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’,
‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’
ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்
அனைத்து மொழிகளிலும் அவற்றினுடைய தனித்தன்மை
தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஜெயராம்
"ஒரு ஆயுட்கால பாடகியே" - என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

குஜராத், ஒடிசா, தமிழகம், ஆந்திர மாநில அரசுகளும் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன. பத்தாயிரம் பாடல்களைக் கடந்தும் இவரது இன்னிசைப் பயணம் தொய்வின்றி தொடர்கிறது.

இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள், பக்ரைன், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ்...என்று இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள நாடுகளின் பட்டியல் நீள்கிறது.

குடியரசுத் தலைவரின் தேசிய விருது அபூர்வ ராகங்கள் (தமிழ், 1976),
சங்கராபரணம் (தெலுங்கு, 1980), ஸ்வாதிகிரணம் (தெலுங்கு, 1992).
போன்ற படங்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான
மியான்தான்சேன் விருது,
 இந்தி, போல் ரே பபி ஹரா படத்தில் பாடியதற்கு 1971 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணிப் பாடகி
குஜராத் அரசு விருது ,
1972 ம் ஆண்டு குஜராத்தி, மொழி 'குங்கத் படத்தில் பாடியதற்கு வழங்கப்பட்டது.

தமிழக அரசு  சிறந்த பின்னணிப் பாடகி விருது 1980 (தமிழ், அழகே உன்னை ஆராதிக்கிறேன்).

பிலிம்பேர் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (மீரா)

ஆந்திர அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்).

ஒரிசா அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').

தமிழக அரசின் கலைமாமணி விருது 1991 ஆண்டு வழங்கப்பட்டது.

மும்பை 'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட விருது 1992 1972 (குஜராத்தி, 'குங்கத்').

தமிழக அரசு வழங்கும் 'எம்.கே. தியாகராஜ பாகவதர் - வாழ்நாள் சாதனையாளர்' விருது
என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவருடைய சிறந்த  பாடல்கள் குறிப்பிடதக்கது
சில

"மல்லிகை என் மன்னன் மயங்கும்,
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
ஏபிசி நீ வாசி,
பாரதி கண்ணம்மா,
ஹே ஐ லவ் யூ,
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே,
ஒரே நாள் உனை நான்,
ஒரு வானவில் போலே,
நானே நானா,
பூ மேலே வீசும்,
என் கல்யாண் வைபோகம்,
பூவான ஏட்ட தொட்டு,
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஏக்கம்,
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே,
இங்கே நான்
வா வா பக்கம் வா",
உள்ளிட பல பாடல்கள்
பட்டியலிட முடியாது.
காற்றோடு கலந்துவிட்ட மேகம்...!

ஆழ்ந்த இரங்கல்கள்!

Shivakumar TD முகநூல் பதிவிலிருந்து..

மாலை மலர்  சென்னை: இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு 'பத்மபூஷண்' விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.

பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: