வியாழன், 23 பிப்ரவரி, 2023

அமெரிக்காவில் ஜாதீய பாகுபாட்டுக்கு தடை .. சியாட்டல் நகர சபை இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது

 Thesam Jeyabalan : சாதியப் பாகுபாட்டிற்கு அமெரிக்காவின் சியட்டல் நகர சபை தடைவிதித்துள்ளது!
சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று (February 21, 2023) நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது.
6 : 1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.


சியாட்டில் நகர சபையில் (சிட்டி கவுன்சில்) இந்து பிரதிநிதி ஒருவரால் ஒரு முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டது, இது இந்திய வம்சாவளி மக்களிடையே விவாதத்தைத் தூண்டியது. இந்த முன்மொழிவு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பானது.
பிரதிநிதி ஷமா சாவந்த் கொண்டுவந்த முன்மொழிவு தொடர்பாக செவ்வாயன்று வாக்களிப்பு நடந்தது. அதன் பிறகு சாதி பாகுபாடு சட்டவிரோதமாக மாறிய அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் ஆனது.
பிரித்தானியாவிலும் இவ்வாறான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி 2010 ஈக்குவாலிற்றி அக்ற் (Equality Act 2010) வருகின்ற போது முயற்சிக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி 1. வயது, 2. பால் 3. மதம், 4. இனம் 5. ஊனம், 6. திருமணபந்தமும் சேர்ந்து வாழ்தலும், 7. தாய்மையும் மகப்பேறும், 8. பாலினமாற்றம் 9. பாலினச் சேர்க்கைமுறை ஆகிய இயல்புகளின் அடிப்படையில் ஒருவரை பாரபட்சமாக நடத்துவது குற்றமாக்கப்பட்டது. இந்த ஒன்பது இயல்புகளோடு சாதிய ரீதியாக ஒருவரைப் பாரபட்சமாக நடத்துவதும் குற்றமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. ஆனால் தற்போது சியாட்டல் நகரம் முன்ணுதாரணமாக மேற்கொண்டுள்ள இம்முயற்சி, எதிர்காலத்தில் பிரித்தானியாவிலும் சாதிய பாரபட்சம் காட்டப்படுவது குற்றமாக்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் சியாட்டல் நகரின் முன்ணுதாரணமான நிகழ்ச்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சியாட்டல் நகரை முன்ணுதாரணமாகக் கொண்டு ஏனைய நகரங்களும் இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கலாம் என்ற அச்சத்தினால் இந்து அமைப்புகள் இந்த சாதியபாகுபாட்டுத் தடைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக தெற்காசிய சமூகத்தினரிடையே மாறுபட்ட கருத்து காணப்படுகின்றது. இந்த சமூகம் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் செல்வாக்கு மிக்க குழுவாக காணப்படுகிறார்கள். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கொண்டு வருவதற்கு இது ஒரு முக்கியமான படி என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான மக்கள் அதை எதிர்க்கின்றனர். தெற்காசிய மக்களை குறிப்பாக இந்திய அமெரிக்கர்களை குறிவைப்பதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஷமா சாவந்த் ஒரு ஒடுக்கும் சாதிய சமூகத்தைச் சேர்ந்தவர். தெற்காசியாவில் எங்கு பார்த்தாலும் நிலவும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அமெரிக்காவில் பரவலாக காணப்படாவிட்டாலும், இங்கும் பாகுபாடு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
சாதியை சட்டத்தின் ஒரு அங்கமாக்குவதன் மூலம், அமெரிக்காவில் ´இந்துவெறி´ சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல அமெரிக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் 10 இந்து கோவில்கள் மற்றும் ஐந்து சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி மற்றும் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகளும் இதில் அடங்கும். இந்த சம்பவங்களை சிலர் இந்து சமூகத்தை அச்சுறுத்தும் முயற்சியாக பார்க்கின்றனர்.
அமெரிக்காவில் குடியேறியவர்களில் இந்திய வம்சாவளி மக்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 42 லட்சம் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று 2018 ஆம் ஆண்டின் அமெரிக்க சமூக ஆய்வின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
சியாட்டல் சிட்டி கவுன்சிலின் இந்த சட்டம், 2021 இல் சாண்டா கிளாரா மனித உரிமைகள் ஆணையத்தில் ஈக்வாலிட்டி லேப் கொண்டு வர முயற்சித்ததைப் போன்றது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எதிர்ப்பைத்தொடர்ந்து இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.
சியாட்டிலில் கொண்டுவரப்பட்ட முன்மொழிவில் ஈக்வாலிட்டி லேபின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
அம்பேத்கர் ஃபுலே நெட்வொர்க் ஆஃப் அமெரிக்கன் தலித்ஸ் அண்ட் பகுஜன்ஸ் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட பிரிவில் சாதியைச் சேர்ப்பது, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த எல்லா மக்களையும் நியாயமற்ற முறையில் ஒதுக்கி வைக்கும். இதில் தலித் மற்றும் பகுஜன் சமாஜூம் அடங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
“இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சியாட்டில் முதலாளிகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைப்பார்கள். இது தலித்துகள் மற்றும் பகுஜன்கள் உட்பட தெற்காசிய வம்சாவளியினர் அனைவருக்கும் வேலை மற்றும் பிற வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கும்” என்று அந்த அறிக்கை கூறியது.
உரிமைகளுக்காக குரல் எழுப்பும் முக்கியமான அமைப்பான ஈக்வாலிட்டி லேப், திங்களன்று நகர சபை உறுப்பினர்களை ´ஆம்´ என்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வலியுறுத்தியது.
“அமெரிக்காவின் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் இனப் பாகுபாடு நிலவுகிறது என்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். இருப்பினும் அது ஒரு மறைக்கப்பட்ட பிரச்னையாகவே உள்ளது, “என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
“வெறுப்பு குழுக்களின் தவறான தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத கூற்றுக்கள் மூலம் ஒரு சிறுபான்மை சமூகம் வெளிப்படையாக தனிமைப்படுத்தப்படுவதைப் பார்ப்பது திகைப்பூட்டுகிறது,” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் புஷ்பிதா பிரசாத் கூறுகிறார்.
புஷ்பிதா பிரசாத்தின் குழு அமெரிக்கா முழுவதும் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.
“முன்மொழியப்பட்ட அவசரச் சட்டம் சிறுபான்மை சமூகத்தின் (தெற்காசிய மக்கள்) சிவில் உரிமைகளை மீறும். ஏனெனில் முதலில் அது அவர்களை ஓரங்கட்டுகிறது. இரண்டாவதாக, மற்ற சமூகங்களை ஒப்பிடும்போது தெற்காசிய மக்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்று இது கருதுகிறது. மூன்றாவதாக வெறுப்புக் குழுக்கள் அளிக்கும் தவறான தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.
அரசாணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பொதுப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.
அதன் ஆதரவாளர்கள் அமெரிக்க செய்தித்தாள்களில் பத்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.
வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டமைப்பு, நகர கவுன்சிலர்கள் மற்றும் தெற்காசிய மக்களுக்கு ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதை ´ஒரு மோசமான யோசனை´ என்று கூறவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சுமார் 100 நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் குழு இந்த வாரம் சியாட்டில் நகர சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. இந்த முன்மொழிவுக்கு எதிராக “இல்லை” என்று வாக்களிக்குமாறு அது வலியுறுத்தியது.
“உத்தேச அவசரச் சட்டம் அமலுக்கு வந்தால், இந்த ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், தங்களை அப்பாவிகள் என்று நிரூபிக்காதவரை சாதி அடிப்படையிலான பாகுபாடுகளின் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள். இது அமெரிக்க கலாச்சாரம் அல்ல. அது தவறு” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் தலைவர் நிகுஞ்ச் திரிவேதி கூறினார்.
மறுபுறம், யோசனையை முன்வைத்த பிரதிநிதியான ஷமா சாவந்தும் வாக்களிப்பிற்கு முன் தனது பிரச்சாரத்தை விரைவுபடுத்துவதில் மும்முரமாக இருந்தார்.
இரண்டு இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரோ கண்ணா மற்றும் பிரமீளா ஜெயபால் ஆகியோருக்கு கடிதம் எழுதி அவர் ஆதரவு கோரினார்.
இந்தியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு 1948 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டது மற்றும் 1950 இல் இந்தக் கொள்கை அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டது.
இலங்கையில் இந்தியா அளவுக்கு சாதிய ஒடுக்குமறை மோசமானதாக இல்லாவிட்டாலும் வாளாந்த வாழ்வில் சாதியப் பாகுபாடு என்பது மிக நுண்ணியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ்ப்பாணம் சாதியத்தில் ஊறிய ஒரு பிரதேசமாக உள்ளது. 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் பின்னரும் சாதிய ஒடுக்குமுறையை ஒரு ஒடுக்குமறை அம்சமாக எண்ணாத ஒரு சுழலே அங்கு காணப்படுகிறது. புரட்சிகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டிய யாழ் பல்கலைக்கழகத்தில் கூட சாதியம் ஆழமாக வேரூன்றியுள்ள. அங்கு காதல் கூட சாதிய அடிப்படையிலேயே மலர முடியும் என்ற நிலையுள்ளது. பல்கலைக்கழகத்தின் நியமனங்கள் கூட திறமையின் அடிப்படையில் அல்லாமல் பால், மதம், சாதியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தப் பின்னணியிலேயே அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றக் கூடிய பிரதான கட்சியான எஸ்ஜேபி இன் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளராக சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைப் பெண்களை துஸ்பிரயோகம் செய்கின்ற ஜெயந்தன் வெற்றிவேலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இக்கட்சிக்கு பல்வேறு வழிகளிலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் பிரான்ஸில் உள்ள சிவன் கோவிலின் உரிமையாளரான இவரின் பண பலத்திற்காக குறித்தகட்சி அவரை பிரதான அமைப்பாளராக இன்னமும் வைத்துள்ளது. சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களை அனுபவிப்பது தங்களுடையதும் தனது தந்தையான பொன்னையா வெற்றிவேலுவினதும் பரம்பரை இயல்பு என் அவர் தன் வாயாலேயே கூறிய ஒலிப்பதிவை தேசம்நெற் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சியாட்டலில் சட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் சட்டங்கள் இருந்தும் அவை எதுவும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவில்லை.

கருத்துகள் இல்லை: