வியாழன், 7 ஏப்ரல், 2022

ஜெய்சங்கருடன் ஸ்டாலின் பேச்சு!

 மின்னம்பலம் : இலங்கையில்  கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,
அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்படும் பொருட்களை இந்திய தூதரகம் மூலம் அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று ஏப்ரல் 7ஆம் தேதி இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியை தான் சந்தித்த போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவி சென்றடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதை நினைவுபடுத்தினார்.


இந்த அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அரிசி, பருப்பு, உயிர்காக்கும் மருந்து பொருட்கள் ஆகியவற்றோடு கப்பல் தயாராக இருப்பதாகவும், இந்த உதவி பொருட்களை இலங்கையிலுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கும், கொழும்பு நகரில் உள்ள தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக கொண்டு சேர்க்க உதவுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த தொலைபேசி உரையாடலின்போது தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை மூலம் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார் தமிழக முதல்வர்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: