வெள்ளி, 8 ஏப்ரல், 2022

7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கர்நாடக பள்ளிகளில் போலிஸார் தீவிர சோதனை

 கலைஞர் செய்திகள் : கர்நாடகா மாநிலம் பெங்களூர் புறநகர் பகுதிகளில் உள்ள 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் புறநகர் பகுதியில் சுலகுண்டேயில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, மகாதேவபுராவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல் பள்ளி, மாரத்தஹள்ளியில் உள்ள நியூ அகாடமி பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள எபினேசர் இன்டர்நேஷனல் பள்ளி, ஹென்னூரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பலோட்டி பள்ளி மற்றும் கோவிந்தபுராவில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சலில், உங்கள் பள்ளியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. இது விளையாட்டல்ல, உடனடியாக போலிஸாரை அழைத்து வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யவில்லை என்றால் பல உயிர்கள் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளிகளின் நிர்வாகம் சார்பில் பெங்களூர் போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் குழுவினர் விரைந்து வந்து பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை உள்ளிட்டவற்றை இந்துத்வா கும்பல் கிளப்பி வரும் நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: