சனி, 5 பிப்ரவரி, 2022

ஆங்கிலம் தெரிந்திருந்தும் தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் பதிலளித்த . ஜோதிராதித்ய சிந்தியா பிஜேபி எம்பி

hindutamil.in : புதுடெல்லி:  மக்களவையில் நேற்று தமிழக எம்.பி.க்கள் எழுப்பியிருந்த துணைக் கேள்விக்கு இந்தியில் பதிலளித்த பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியாவை சசி தரூர் கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்பத்தின் வாரிசு இந்த ஜோதிராதித்ய சிந்தியா. இளம் வயதிலிருந்தே காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்ட அவருக்கு 2018ல் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டது.
அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் பதவியை எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கமல்நாத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் காங்கிரஸிலிருந்து விலகினார். ஆட்சியைக் கவிழ்த்தார். பாஜக ஆட்சியைப் பிடிக்க அதற்குக் கைமாறாக மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்த சிந்தியாவை சசி தரூர் நேற்று சாடினார்.
தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளித்த சிந்தியா இந்தியிலேயே பேசினார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ''அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியும் அவர் இந்தியில் பேசுவது தமிழக எம்.பி.க்களை அவமதிக்கும் செயல்'' என்றார். சற்றே அதிர்ந்துபோன சிந்தியா உறுப்பினர், ''இவ்வாறு பேசுவது விநோதமாக இருக்கிறது'' என்றார். உடனே குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ''இதில் எந்த அவமதிப்பும் இல்லை'' என பிரச்சினையை முடித்து வைத்தார்.

நேற்று முன் தினம், மக்களவையில் ராகுல் காந்தி, ''தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு அவையில் மதிப்பில்லை. இங்குள்ள அரசர் (பிரதமர் மோடி) அந்தக் குரலைக் கேட்பதில்லை'' எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் நேற்று எம்.பி.க்கள் எழுப்பியிருந்த துணைக் கேள்விக்கு இந்தியில் பதிலளித்த பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியாவை சசி தரூர் கண்டித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் பாதி மார்ச் 14 தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளது

கருத்துகள் இல்லை: