சனி, 8 செப்டம்பர், 2018

மிரட்டல்: ‘புல்லட்’ நாகராஜனைப் பிடிக்க தனிப்படை!

மிரட்டல்: ‘புல்லட்’ நாகராஜனைப் பிடிக்க தனிப்படை! மின்னம்பலம் : மதுரை மத்திய சிறை பெண் எஸ்பிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி 'புல்லட்' நாகராஜனைப் பிடிக்க தனிப்படை போலீசார் தேனிக்கு விரைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் 'புல்லட்' நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது சகோதரர், 2006ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நிலையின் காரணமாக, இவர் தூக்க மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் சிறையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குவந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் தனக்கு தூக்க மாத்திரைகள் அதிகமாகத் தரும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த மருத்துவர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர், அந்த மருத்துவரைத் தாக்க முற்பட்டார். இது குறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில், மதுரை மத்தியச் சிறைத்துறை எஸ்பியான ஊர்மிளா, சிறை கமாண்டோக்களை அனுப்பி அவரை அடித்து உதைத்தாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நன்னடத்தை விதியின் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்தவர் தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த விஷயம் தொடர்பாகப் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மதுரை மத்திய சிறை எஸ்பியான ஊர்மிளா மற்றும் குறிப்பிட்டமருத்துவருக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் ஆடியோ வைரலாக பரவியது.
அந்த ஆடியோவில் புல்லட் நாகராஜன் பேசியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயிலே கிடையாது. இனிமே புதுசா கட்டினாத்தான் உண்டு. மதுரை ஜெயிலைப் பொறுத்தவரை உனக்கு நிர்வாகத் திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா...? உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கா?
உன்ன விட பெரிய ஆபிசர எல்லாம் நான் பாத்துருக்கேன். நீயெல்லாம் டிஎன்பிஎஸ்சி எழுதி நேத்து வந்தவ. என் ஜெயில் அனுபவம் உன் வயசு. யாரா இருந்தாலும் ஜெயில் கேட்ட விட்டு வெளிய வந்துதானே ஆகணும். நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா பசங்க ஏதாச்சும் பண்ணுனா, அதுக்கு நான் பொறுப்பு இல்ல. பொம்பளையாக இருக்கீங்க, திருந்துங்க” என்று அந்த மிரட்டல் ஆடியோவில் பேசியுள்ளார் புல்லட் நாகராஜன்.
பெண் எஸ்பி புகார்
தனக்கு மிரட்டல் விடுத்த ’புல்லட்’ நாகராஜன் மீது பெண் எஸ்பி ஊர்மிளா, சிறைத்துறை அலுவலர் ஜெயராமன், மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.
தனிப்படை விரைவு
தலைமறைவாக உள்ள புல்லட் நாகராஜனைக் கைது செய்வதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புல்லட் நாகராஜன் தற்போது தேனியில் இருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். விரைவில் நாகராஜன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரவுடி புல்லட் நாகராஜன் எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: