திங்கள், 3 செப்டம்பர், 2018

குஷ்பூ : நான் திமுகவில் இருந்த அந்த 4 வருடங்கள் ... எத்தனை பிறவி எடுத்தாலும் மீண்டும் மீண்டும் வாழ ஆசைப்படும் ...


நான் திராவிட முன்னேற்ற கழக மேடையில் பேசுவது மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தது போன்று உள்ளது.. எனக்கு அரசியல் நாகரிகம் கற்றுக்கொடுத்தவர் கலைஞர்  காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தாலும், அரசியல் ரீதியாக நான் தலைவர் என்று ஏற்றுக்கொண்டது கலைஞரை மட்டும் தான். .தமிழகம் இன்று என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதற்கு கலைஞர்தான் காரணம்.. அவர் செய்த ஒவ்வொரு காரியங்களும் மக்களுக்கு நன்மை செய்தது . நான் திமுகவில் இருந்த அந்த நான்கு வருடங்களும் நான் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மீண்டும் மீண்டும் வாழ ஆசைப்படும் அற்புதமான காலங்கள் .... 
கருத்துரிமை போராளிகளுக்கு கருணாநிதியின் கொள்கை துணை நிற்கும் கவிஞர் வைரமுத்து பேச்சுகலைஞரின்  கொள்கைகள் கருத்துரிமை போராளிகளுக்கு என்றும் துணை நிற்கும் என புகழ் வணக்க கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார். மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு  கருணாநிதிக்கு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புகழ் வணக்க கூட்டம் சென்னை சாந்தோம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின்  உருவ படத்துக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன், கவிஞர் வைரமுத்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராஜேந்திரன், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் புகழ் வணக்க உரையாற்றினர்.  விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:


திரைவசனம் என்ற கலைவடிவத்தை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். கருணாநிதியின் பேனா களங்கண்ட பிறகுதான் கவிதையின் சலங்கையை, உரைநடை கட்டிக்கொண்டு ஒயிலாட்டம் போட்டது. இளங்கோவனும், அறிஞர் அண்ணாவும் திரைத்தமிழை நடைமாற்றம் செய்தவர்கள் என்ற போதிலும் அதை முற்றிலும் மடைமாற்றம் செய்த பெருமை கருணாநிதியையே சேரும்.

தி.மு.க. தொடங்கப்பட்ட போது ஐம்பெரும் தலைவர்களின் பட்டியலில் இளமை காரணமாக அவர் இல்லை. ஆனால் அந்த தலைவர்களையும் தன் தோளில் சுமந்தே சிகரந்தொட்ட செயல் புயல் கருணாநிதி. புருவத்துக்கு பிறகு பிறக்கும் மீசை புருவத்தைவிடப் பெருமை பெறுவது மாதிரி, இளைஞராக இருந்தே தலைவரானவர் கருணாநிதி.

நகைச்சுவை அவரது கூடப்பிறந்த குணம். நடிகர் எம்.ஆர்.ராதா ஒருமுறை ‘சேர்த்த காசெல்லாம் மண்ணாப் போச்சப்பா’ என்று புலம்பினாராம். உடனே கருணாநிதி ‘ஏன் நில புலமா வாங்கிப்போட்டுட்டீங்களா?’ என்று நகையாடினாராம்.

அதேபோன்று, காவல்துறை கருத்தரங்கத்தில் டி.ஜி.பி. ராஜ்மோகன் முதல்-அமைச்சர் முன்னிலையில் பதற்றமானாராம். ‘நான் முதல்-அமைச்சருக்கு அஞ்சவில்லை; ஏ.சி.யின் குளிரால் நடுங்குகிறேன்’ என்றாராம். உடனே கருணாநிதி ‘ஒரு டி.ஜி.பி., ஏ.சி.க்கு நடுங்கலாமா?’ என்று எதிர்வினை புரிந்தாராம். இந்த நகைச்சுவை உணர்வுதான் அவரது புயல்போன்ற வாழ்க்கையைப் பூப்போல வைத்திருந்தது.

கலைநோக்கு மட்டுமல்ல தொலைநோக்கும் கொண்டவர் கருணாநிதி. ‘எம்.ஜி.ஆர். பிரிந்ததற்காக அல்லது பிரிக்கப்பட்டதற்காக என்றாவது நீங்கள் வருந்தியதுண்டா?’ என்று நாங்கள் இருவர் மட்டும் இருந்த தனிமையில் அவரை கேட்டேன். ‘அது ஒரு வகையில் நல்லதாயிற்று. இல்லை என்றால் திராவிட அடையாளம் இல்லாத ஒரு கட்சி அந்த இடத்தில் தோன்றி இருக்கக்கூடும்’ என்றார் கருணாநிதி.

அவர் தன் கொள்கையில் சற்று வளைந்ததுண்டு; ஒருபோதும் ஒடிந்ததில்லை. அவரை இழந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்புதான். என் அதிகாலைத் தொலைபேசி ஊமையாகிவிட்டது. என் தலைக்கு மேல் பறக்கும் புல்வெளிப் பறவைகள் சோககீதமே பாடுகின்றன. கருணாநிதி இல்லை என்ற வெறுமையில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை.

ஜூலை 11 அன்று அவரது பேனாவை நான் பரிசாக பெற்றேன். அந்த பேனா தன் உயரத்தில் ஒன்று என்று நின்று காட்டியது, “இன்னும் ஒருமாதம்தான் தம்பி உயிரோடு இருப்பேன் என்று அந்த பேனாவின் மூலம் சொன்னாரோ” என்று இன்று கன்றுபோல் கதறுகிறேன்.

கருத்துரிமைக்காக போராடியவர் கருணாநிதி. கருத்துரிமை போராளிகள் மீது அடக்குமுறைகள் ஆகாது. விடுதலை சிறுத்தைகள் ரவிகுமார், திருமுருகன் காந்தி போன்ற போராளிகள் மீது திணிக்கப்படும் அச்சுறுத்தலை, அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள இயலாது. கருத்துரிமை போராளிகளுக்கு கருணாநிதியின் கொள்கைகள் என்றென்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் பேசியதாவது:-
திருக்குவளையில் சாதாரண குடியில் பிறந்து தமிழகத்தையே ஆட்சி செய்ததன் மூலம் கருணாநிதி ஒரு காவியம் படைத்துள்ளார். நாவன்மையால் உலகை ஆள முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துள்ளார். பைந்தமிழ் பேசிய கருணாநிதி இல்லாதது தமிழுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் பேரிழப்பு. அவரது வசனங்களை திரைப்படங்களில் பார்க்கும் போது, சங்க இலக்கிய வகுப்பில் இருந்தது போன்று இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு பேசியதாவது:-

நீண்ட இடைவெளிக்கு பின் தி.மு.க. மேடையில் பேசுவது மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தது போன்று உள்ளது. நான் தி.மு.க.வில் இணையும் போது, உறுப்பினர் கட்டணம் ரூ.500 கொண்டு போகவில்லை. அப்போது, மு.க.ஸ்டாலின் தான் எனக்கு 500 ரூபாயை வழங்கினார். கையெழுத்து போடுவதற்கு பேனா தர கருணாநிதி மறுத்துவிட, பேனாவும் மு.க.ஸ்டாலினே தந்தார்.

எனக்கு அரசியல் நாகரிகம் கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தாலும், அரசியல் ரீதியாக நான் தலைவர் என்று ஏற்றுக்கொண்டது கருணாநிதியை மட்டும் தான்.இவ்வாறு அவர் பேசினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் பேசுகையில், கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கும் என்றார். புகழ்வணக்க கூட்டத்தில் கருணாநிதியின் உதவியாளர் பல்லாவரம் நித்தியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தினத்தந்தி

கருத்துகள் இல்லை: