சனி, 8 செப்டம்பர், 2018

தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்" - ஷோபியா வழக்கறிஞர்

``தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்
தமிழிசை.vikatan.com இ.கார்த்திகேயன் : "பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? இதற்காகவே நாங்கள் நீதிமன்றம் செல்வோம்'' என மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.
விமானத்தில், `பாசிச பி.ஜே.பி. ஒழிக' என கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார், ஹென்றி டிபேன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஷோபியாவின் வழக்கறிஞர் என்கிற முறையில் சில விளக்கங்களை நான் சொல்ல விரும்புகிறேன். கடந்த 3-ம் தேதி காலை, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து வெவ்வேறு விதமான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கோஷம் போட்டதாகவும், கையை உயர்த்தி கோஷம் போட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதை மறுக்கிறோம். தமிழிசை 3-ம் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஷோபியா 8-ம் இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானம் தரை இறங்கிய பின், 3-ம் இருக்கையிலிருந்து 8-ம் இருக்கையைத் தமிழிசை கடந்துசெல்லும் போதுதான் ஷோபியா, அந்த வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்.

தன் குரலை உயர்த்தி கோஷம் போடும் அளவில் அவர் சொல்லவில்லை. மெதுவாகத்தான் கூறியுள்ளார். ஆனால், கையை உயர்த்தி கோஷம் போட்டதாகத் திரித்து புகார் கூறுகிறார் தமிழிசை. அவர் சொல்வதுபோலவே, விமானத்தில் கோஷம் எழுப்பினால், விமானப் பணியாளர்கள் கேப்டனுக்கும், கேப்டன் விமான நிலைய அதிகாரிக்கும் புகார் அளித்திருப்பார்கள். விமானம் இறங்கியதும் தமிழிசை வேகமாக இறங்கிச் சென்றுவிட்டார். ஷோபியாவின் தாய் மனோகரிக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்திருந்ததால் சற்று மெதுவாகவே நடந்துவந்தார். தமிழிசையை வரவேற்பதற்காக பி.ஜே.பி-யினர் வாசலில் திரண்டிருந்தனர். ஷோபியா பெற்றோருடன் வரவேற்பறைக்கு வந்த பிறகு, தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பி.ஜே.பி-யினர் ஷோபியாவைத் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியபடியே செல்போனில் போட்டோ எடுத்தனர்.
தன்னிடம் ஷோபியா மன்னிப்பு கேட்காததுதான் தமிழிசைக்குக் கூடுதல் டென்சனை உண்டாக்கியது. அதனை ஈகோ பிரச்னையாகவும் எடுத்துக்கொண்டார். அவரது புகாரின் படி, `உங்களை விசாரிக்க வேண்டும்' எனக்கூறி, ஷோபியாவை போலீஸார் கைதுசெய்து புதுக்கோட்டை (தூத்துக்குடியில் உள்ள) காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், கைதுசெய்வதற்கான எந்த அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. விசாரிப்பதற்கான சம்மனும் கொடுக்கப்படவில்லை.

விசாரணைக்காக மதியம் 1.30 மணிக்கு ஷோபியாவை அழைத்துச் சென்ற போலீஸார், இரவு 7.30 மணிவரை தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை செய்த ஏழு அதிகாரிகளில் ஒருவர் மட்டும்தான் பெண். இவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளால் துளைத்தெடுக்கும் அளவுக்கு ஷோபியா என்ன தவறு செய்தார். மாலை 5.30 மணி அளவில், 290, 75 ஆகிய இரண்டு பிரிவுகளில்தான் வழக்குப்பதிவு செய்ததாகக் குறிப்பிட்டு, ஷோபியாவிடம் மாலை 7.30 மணிக்குக் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. பிரின்ட் எடுக்கப்பட்ட எஃப்.ஐ.ஆரில்., இந்த இரண்டு பிரிவுகளுடன் 505 பிரிவினை, பேனாவால் எழுதி திருத்தம் செய்துள்ளார்கள். ஷோபியாவிடம் கையெழுத்து பெறப்பட்ட பிறகுதான், இந்தப் பிரிவு எண் 505 சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி திருத்தம் செய்த பிரிவினை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஷோபியா
தீர்ப்புக்குப் பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஷோபியா, கனடா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி மாணவி மட்டுமல்ல... அவர் ஓர் எழுத்தாளரும்கூட. இந்தப் பிரச்னையை மேலும் வளர்க்க வேண்டாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் தமிழிசை மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ஏன் இன்னும் எஃப்.ஐ.ஆர். போடவில்லை. இதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்வோம். தற்போது அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைக்கப் பார்க்கிறார்கள். தமிழிசை இந்த வழக்கினை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வாபஸ் பெற்றால், தமிழிசை மீது ஷோபியாவின் தந்தை அளித்த புகார் மனுவை வாபஸ் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கிறோம். இல்லாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.
ஷோபியாவிடம் பேச முயன்றபோது, ``ஷோபியா துணிச்சலாகத்தான் இருக்கிறார். அவரிடம் எந்தச் சோர்வும், கலக்கமும் இல்லை. குடும்பத்தினர்தான் கலக்கத்தில் உள்ளனர். அவருடைய கல்வி, எதிர்காலம் கருதி தற்போதைய சூழலில் ஷோபியாவின் கருத்துகள் எதையும் பதிவுசெய்ய வேண்டாம்” என உறுதியாகக் கூறிவிட்டார் ஹென்றி டிபேன்.
மாணவி ஷோபியாவின் எதிர்காலம் பாதிக்காதவண்ணம் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு

கருத்துகள் இல்லை: