வெள்ளி, 10 நவம்பர், 2017

ஜிஎஸ்டி: 177 பொருட்களின் வரி குறைப்பு!

மின்னம்பலம் :ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டக் கலந்தாய்வின் முடிவில் 177 பொருட்களின் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் முக்கியக் கூட்டம் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 28 சதவிகித வரி விகிதாச்சாரத்தில் இருந்த 227 பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சாக்லேட், ஷாம்பூ, சூயிங் கம், குளிர்பானங்கள், மார்பிள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
"இதுவரை 227 பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அது 50 பொருட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்களின் வரி விலக்கு பரிசீலனையில் உள்ளது.
தற்போது சாக்லேட், ஷாம்பூ, சூயிங் கம், குளிர்பானங்கள், மார்பிள், அழகு சாதனப் பொருட்கள், கிரானைட் உள்ளிட்ட பொருட்களின் வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர், " இன்று ஜிஎஸ்டி குழு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதன்படி பெயிண்ட், சிமெண்ட் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி விதிக்கப்படும். ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 28 சதவிகித வரி வசூலிக்கப்படும் பொருட்கள், விரைவில் படிப்படியாக 18 சதவிகிதமாகக் குறைக்கப்படும். அது நாட்டின் வருவாயைப் பெருமளவு பாதிக்கும் என்பதால் அதற்குச் சில நாட்கள் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஜிஎஸ்டி குழுவின் இந்த முடிவால் அரசுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: