வெள்ளி, 10 நவம்பர், 2017

பூஜ்யங்களை நூறுகளாக கொண்டாடும் அயோக்கியர்கள்

க.கனகராஜ் : வெற்றி என தம்பட்டம் அடிப்பதற்கு எல்லாவற்றையும் உதிர்த்து விட்ட ஒரு மனோ நிலை தேவை. அது மோடி வகையறாவிற்கு இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர ஒரு தம்பிடி காசு கருப்பு பணம் கூட அரசின் கஜானாவிற்கு வந்து சேரவில்லை. பூஜ்ஜியங்களை நூறுகளாக கொண்டாடும் மனநிலையை என்னவென்பது.
வழக்கம் போலவே ஆர்.எஸ்.எஸ். -பாஜக பரிவாரத்தின் ‘சாதனைகள்’ என்று போலியான சிலவற்றை பட்டியலிட்டு, நவம்பர் 8அன்று பல பத்திரிகைகளில் முழுப்பக்கம் விளம்பரங்களை கொடுத்திருந்தது மோடி தலைமையிலான பாஜக அரசு. பணமதிப்பு நீக்க துயரங்களை முன்வைத்து நாடுமுழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், திமுக. காங்கிரஸ், விசிக உள்ளிட்டகட்சிகளும் அமைப்புகளும் நவம்பர் 8 கறுப்பு நாளாககடைபிடித்தனர். போராடினர். இதற்கு போட்டியாக பிடிவாதமும் மூர்க்கத்தனமும் கொண்ட மோடி வகையறாக்கள், ஜனநாயக உணர்வுகளை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், பணமதிப்புநீக்கத்தின் ஓராண்டு நிறைவைகொண்டாடினார்கள். அரசுப்பணத்தில் - ஏழை, எளிய மக்களின் பணத்தில் விளம்பரம் செய்தார்கள். அது அரசு விளம்பரம் என்ற சிந்தனையே இல்லாமல் காவிக்கலரில் வடிவமைத்திருந்தார்கள். அந்த விளம்பரங்களில் தங்களது சாதனைபோல சித்தரித்துள்ள ஒவ்வொரு அம்சமும், அவர்களை வெட்கம் கெட்டவர்களாக வெளிச்சம் போட்டு காட்டியது.

#சந்தேகமே_சாதனையாகும்
1 கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் இந்தியாவில் மிகப்பெரிய நடவடிக்கை என்று கொட்டைஎழுத்துக்களில் அறிவித்து அதற்கு கீழே நான்குவிபரங்கள் இதற்கு உதாரணமாக கொடுத்துள்ளனர்.முதல் விபரம இந்தியாவில் 1375 பேர் மட்டும் மொத்தரொக்கப் பணத்தில் 33 சதவிகிதத்தை வங்கியில் செலுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத்தான் ஆரம்பம் தொட்டு நாங்களும் குறிப்பிட்டோம். பல பொருளாதார நிபுணர்களும் இதை குறிப்பிட்டார்கள். சராசரியாக 336 கோடி ரூபாய்.இந்த ரூபாய் 1375 பேரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவை அத்தனையும் கருப்பு பணம் என்று குறிப்பிடவில்லை. இனிமேல் தான் இது குறித்த வழக்குகள், கால்நூற்றாண்டுகளுக்கு நடந்து முடிவுக்கு வரும். பிரச்சனை என்னவென்றால் 125 கோடி மக்களின் 1375பேர் தான் இத்தகைய அதிகமான தொகை செலுத்தியுள்ளனர் எனும் போது அவர்களைத் தானே குறி வைத்திருக்கவேண்டும். எதற்காக 125 கோடி மக்களையும் துயரப்படுத்தினார்கள். இதில் எங்கே வெற்றி இருக்கிறது?.
2 வரி செலுத்துதலுக்கு பொருந்தாத வகையில் 17.731லட்சம் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளனவாம். இதே போன்று 23.22 லட்சம் வங்கிகணக்குகளில் 3.68 லட்சம் கோடி பணம் சந்தேகத்திற்குரியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஓராண்டு முடிந்த பிறகும் இவையெல்லாம் சந்தேகம் என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்கள். அதைத் தவிர வேறு எதுவும் நடந்து விடவில்லை. ஆனால் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி இதுவெல்லாம் மாபெரும் வெற்றி என தம்பட்டம் அடிப்பதற்குஎல்லாவற்றையும் உதிர்த்து விட்ட ஒரு மனோ நிலை தேவை. அது மோடி வகையறாவிற்கு இருக்கிறது என்பதுமீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர ஒரு தம்பிடி காசு கருப்பு பணம் கூட அரசின் கஜானாவிற்கு வந்து சேரவில்லை. பூஜ்ஜியங்களை நூறுகளாக கொண்டாடும் மனநிலையை என்னவென்பது.
#எண்ணத்_தெரியாத_குற்றமில்லை
3 உயர்மதிப்பு நோட்டுகள் ரூ. 6 லட்சம் கோடி அளவிற்குகுறைக்கப்பட்டதாகவும், அதுவும் ஒரு சாதனை என்றும் அவர்கள் பீற்றித் திரிகிறார்கள். இப்படிகுறைத்ததால் லாபம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதேசமயம் இந்த ரூ. 6 லட்சம் கோடிஅளவிற்கு குறைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும்அப்பட்டமான புளுகு. ஜூலை 26ஆம் தேதியிட்ட லைவ்மின்ட் பத்திரிகை கீழ்க்கண்டவாறு மத்திய ரிசர்வ் வங்கியின்அதிகாரிகளிடம் பெற்றதாக சொல்லி விபரங்களை வெளியிட்டுள்ளது. அந்த விபரங்களின்படி 2000 ரூபாய் நோட்டுகள்ரூ.370 கோடி நோட்டுகள்அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக 7.4 லட்சம் கோடி ரூபாய்மதிப்பிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.இதே போன்று ரூ.1570 கோடி 500 ரூபாய்நோட்டுகள் ரூ.7.85 லட்சம் கோடி மதிப்பிற்குஅச்சடிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் கூட்டினால் ரூ.15.25 லட்சம் கோடி. பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதுஅவற்றின் மொத்த தொகை 15.44 லட்சம் கோடி. அதில்15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் திரும்ப ரிசர்வ்வங்கிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, புதிதாகஅடிக்கப்பட்ட நோட்டுக்கள் முன்பு புழக்கத்தில் இருந்த நோட்டுகளை விட வெறும் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே குறைந்துள்ளது. ஆனால், கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்மதிப்புநோட்டுக்கள் குறைத்து அடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
#கல்லெறி_பயங்கரவாதமா?
4 அடுத்ததாக, பயங்கரவாதம், நக்சல் தீவிரவாதம் ஆகியவற்றின் மீது இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக அவர்கள் சொல்லி இருக்கும் விஷயம்,கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் காஷ்மீரில் கல் எறியும் சம்பவங்கள் 75 சதவிகிதம் குறைந்துள்ளது என்பதாகும். பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதற்கு பாஜக அரசு வரையறைசெய்துள்ளது கல்லெறி சம்பவங்களைத் தான் என்றுகேட்கும்போது எள்ளி நகையாடுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். இவர்களால் வேறு எப்படியும்சொல்ல முடியாது. ஏனெனில், இந்த காலத்தில்தான், 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகமான அளவில் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே, கல்லெறிந்தது குறைந்து விட்டது, கேலி செய்வதுகுறைந்து விட்டது, எனவே, பயங்கரவாதமும், தீவிரவாதமும் குறைந்து விட்டது என்று இவர்கள் தம்பட்டம் அடித்துத் திரிகிறார்கள்.இதேபோன்று கள்ளப்பணம் - அதாவது போலிநோட்டுக்கள் 7.62 லட்சம் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது மிகப்பெரிய சாதனை என்றும் சொல்லியிருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், கள்ள நோட்டுக்கள் கடந்த காலத்தில் இதை விட அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2013ஆம் ஆண்டில் 8 லட்சத்து 46 ஆயிரம் நோட்டுக்களும், 2014ஆம் ஆண்டு8 லட்சத்து ஆயிரம் நோட்டுகளும், 2015ஆம் ஆண்டு 8லட்சத்து 86 ஆயிரம் நோட்களும், 2016ஆம் அண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் 5 லட்சத்து 74 ஆயிரம் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக 2016ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ரேக்கா வர்மா மற்றும் பங்கஜ் சவுதாரி என்கிற 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த 7.62 லட்சம் நோட்டுகள் ஏதோ பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்வது மிக மலினமான- உண்மைக்கு மாறான, சுயதம்பட்டம், ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
#சொல்வதெல்லாம்_பொய்
5 நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக ஏழைகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்து விட்டதாக அந்த விளம்பரம் தன் முதுகில் தானே தட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதற்கு கீழே உள்ள எந்த ஒரு அம்சத்திலும் சிறந்த வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டதாக எதுவும் சொல்லப்படவில்லை. மாறாக, தொழிலாளர் ஈட்டுறுதிநிதியில் நிறுவனத்தில் புதிதாக 1.01 கோடி ஊழியர்கள்இணைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. முதலாவதாக, இந்த 1 கோடி உயர்வு என்பது புதிய விஷயமல்ல.இதற்கு முன்பு 2010-11ம் ஆண்டில் 6 கோடியே 15 லட்சமாக இருந்த தொழிலாளர் ஈட்டுறுதி அமைப்பில் 2011-12ஆம் ஆண்டில் 8.554 கோடியாக உயர்ந்திருந்தது. அதாவது ஒரே ஆண்டில் 2 கோடியே 40 லட்சம் பேர் கூடுதலாகஇணைக்கப்பட்டிருந்தனர். அப்படி எனில் புதிதாக 1 கோடி, அதற்கு காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்று கூறுவது எவ்வளவு மோசடித்தனமானது என்பதை யாரும் உணர்ந்து கொள்ள முடியும். இதை விட கூடுதலான மோசடி என்னவெனில் இந்தக்காலத்தில் புதிதாக இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 1-4-2013 முதல் 31-12-2016 வரை நிர்வாகத்தின் பங்குத்தொகையை கட்டவேண்டியதில்லை என்று பெருமுதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரும் சலுகையை மறைத்து விட்டு ஏதோஇப்பொழுதுதான் புதிதாக இவர்கள் சாதித்து விட்டதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஒரு துரோகத்தை சாதனையாக சொல்லும் மனநிலை அவமானகரமானது.
6 இன்னொரு பக்கம் இந்த பணமதிப்புநீக்க நடவடிக்கையின் காரணமாக வரி கட்டுவோர் எண்ணிக்கை2015-16ல் 66.53 லட்சமாக இருந்தது 2016-2017ல் 84.2லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இது சாதனை எனவும்26.6 சதவிகித உயர்வு என்று இந்தியர்களை பெருமைப்பட சொல்கிறது அந்த விளம்பரம். ஆனால், 2013-14ம் ஆண்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-15ல் இது 12.2 சதவிகிதம். 2015-16ல் 29.9 சதவிகிதம். 2016-17ல் 24.3 சதவிகிதம். எனவே இநத் அரசின்பெருமிதம் எத்தனை கீழ்த்தரமானது என்பதை எவரும் உணர்ந்து கொள்ள முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்போது இவர்கள் சொல்கிற புதிதாகசேர்ந்தவர்களில் 69.4 சதவிகிதம் பேர் 5 லட்சத்துக்கும் குறைவான வருமானமுடையவர்கள். அதாவது இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 2.7 லட்சம். இதன்பொருள் என்னவெனில் இவர்கள் யாரும் வருமானவரி கட்டப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இதன்மூலமாக அரசின் வருமானமும் கூடப்போவதில்லை.
7 இதை போன்று டிஜிட்டல் பரிவர்த்தனை சம்பந்தமாகஅவர்கள் விளம்பரத்தில் கூறியுள்ள விஷயங்களும் உண்மையல்ல என்பதை சமீபத்திய பல்வேறு புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன. உதாரணமாக,நவம்பர் 2016ல்20.55 கோடிப் பேர் 35,240 கோடிரூபாய்அளவிற்குடிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 2017ல் 20.92 கோடிப்பேர் 45,193 கோடிரூபாய் அளவிற்குடிஜிட்டல் பரிவர்த்தனை செய்துள்ளனர்.இது இவர்கள் சொல்வதுபோல ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் அல்ல. இதை எல்லாம் கவனத்தில் கொண்டால் இது சங் பரிவார் அமைப்புகளை போலவே அவர்கள் தலைமை தாங்கும் அரசிடமிருந்து மற்றொரு புளுகுமூட்டை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.மக்களை ஏமாற்ற மக்கள் கொடுத்த வரிப்பணத்தையே பயன்படுத்தியிருக்கிறது காவிகள் அரசாங்கம். அரசு நிறுவனங்களை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் அரசு விளம்பரம் என்றால் அது உண்மை என்று நம்புவதும் தவறு என்று நம்பகத் தன்மையையும் சிதைத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: