வியாழன், 9 நவம்பர், 2017

உழவர்களே எச்சரிக்கை! திருப்பூர் தெற்கு பகுதிகளில்.. சாயப்பட்டறைகள் ..

ஏர்முனை இளைஞர் அணி : உழவர்களே எச்சரிக்கை!
திருப்பூர் தெற்கு பகுதிகளில் பேராபத்து காத்திருக்கிறது! நொய்யல் கரையில் இருந்து மெல்ல நகர்ந்து பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சாயப்பட்டறைகள் சத்தம் இல்லாமல் இயங்கிக் கொண்டு இருந்தது.
அதன் சாயம் தற்போது மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பித்து விட்டது.ஆம் கரைப்புதூர் மற்றும் கணபதிபாளையம் சுற்று வட்டாரப் பகுதி உழவர்கள் தமது வேளாண் நிலத்தில் உள்ள கிணறுகள் , ஆழ்த்துழை கிணறுகளில் உள்ள தண்ணீர் வேளாண்மை செய்ய தகுதியற்றதாக மாறிவிட்டது என வேளாண் அதிகாரிகள் பரிசோதித்து சொல்லி விட்டதாகவும் இங்கு இயங்கும் 15க்கும் மேற்பட்ட சாய ஆலைகளில் உள்ள கிணறுகள்,ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட வேண்டும் என்று சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அவர்கள் கூறும் காரணம் சில சாய ஆலைகள் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் விட்டுவிடுவதாகவும் அதனால்தான் தங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதித்துள்ளதாகவும் கருதுகின்றனர், மேலும் வேளாண் நிலங்களில் பயிர் செய்ய முடியாமல் போய்விட்டதாக கூறுகிறார்கள்.
உழவர்களே மறக்க முடியுமா நொய்யலை கதற கதற கற்பழித்து, ஒரத்துப்பாளைய அணையை பாழாக்கியதை ? அந்த பகுதி உழவர்கள் பட்ட துன்பம் ஒன்றா இரண்டா ...
நம் உழவர் காவலர் அய்யா திரு.N.S.பழனிச்சாமிEX M.A MLA அவர்கள் இருக்கும் வரை பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் சாய ஆலைகள் அமைய எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினார் அதன் காரணமாகதான் நமது பகுதி பாதிப்பில் இருந்து தப்பியது. நாம் இதற்கு நிரந்தர தீர்வுகாணாவிடில் நம்மை எவராலும் காக்க முடியாது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி உழவரின் உரிமையை மீட்கும் வரை உழவர்களுடன் இணைந்து களம் காணும் .
இவண்
மு.சுரேஷ்.
மாநில துணை தலைவர்.
ஏர்முனை இளைஞர் அணி

கருத்துகள் இல்லை: