திங்கள், 28 டிசம்பர், 2015

அதிகாரிகள் தேர்தலுக்காக இடமாற்றம்......ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல்....தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.

சென்னை, தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 2016–ம் ஆண்டு மே மாதம் 22–ந் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தல் கமிஷன் உத்தரவு எனவே சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அதிகாரிகள் இடமாற்றம் மாநிலத்தில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் சட்டசபை தேர்தலை நடத்தும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் கமிஷன் இறங்கி உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்த ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற கூடாது. நீண்ட காலமாக பணியாற்றும் இடங்களில் அவர்கள் நீடிக்கக் கூடாது. மேலும், தேர்தல் பணியில் நேரடி தொடர்பில் உள்ள அதிகாரிகள், தற்போது அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
கண்காணிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் பணியை சொந்த மாவட்டத்தில் முடித்துள்ள அதிகாரிகள் மற்றும் மே 31–ந் தேதிக்குள் 3 ஆண்டு கால பணியை நிறைவு செய்யும் அதிகாரிகள் அங்கு தொடரக் கூடாது.
தேர்தலுடன் மறைமுக தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் குறித்து வரும் புகார்களின் முகாந்திரத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்கும். தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் பகுதி அலுவலர்கள் யாருக்கும் இடமாற்றம் தொடர்பான அறிவுரை பொருந்தாது.
களப்பணியில் ஈடுபடுத்தப்படும் அவர்களுக்கு அந்த பகுதியை பற்றிய விஷயங்கள் தெரிந்திருப்பதால், நன்றாக பணியை செய்யும் வகையில் அவர்கள் அந்த இடங்களில் பணியை தொடர்வது அவசியமாகும். எனவே அவர்கள் அந்தந்த இடங்களில் தொடர்ந்து பணியாற்ற நியமிக்கப்படலாம். ஆனாலும் அவர்களின் பணி பாரபட்சமின்றி இருப்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.
3 ஆண்டுகள் பணி தேர்தல் கமிஷன் அறிவிக்கும் இதுபோன்ற ‘கட்–ஆப்’ தேதிகளை சில மாநிலங்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே மூன்று ஆண்டு பணி காலத்தை மாநில அரசுகள் கண்டிப்பாக கணக்கிட வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் வலியுறுத்துகிறது. அந்த வகையில் வருகிற மே 31–ந் தேதியில் இருந்து பின்னோக்கி அந்த 3 ஆண்டுகள் கணக்கிடப்பட வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரி, துணை மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி ஆகியோர் மட்டுமல்ல, கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், துணை வட்டார மாஜிஸ்திரேட்டுகள், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோருக்கும் தேர்தல் கமிஷனின் இந்த அறிவுரைகள் பொருந்தும்.
போலீஸ் அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் போலீஸ் படையை நியமிக்கும் பொறுப்பில் உள்ள சரக ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஆயுதப்படை கமாண்டண்ட், சிறப்பு போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை மண்டல போலீஸ் உயர் அதிகாரி, இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு சமமான அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷனின் அறிவுரைகள் பொருந்தும்.
கம்ப்யூட்டர் பணி, சிறப்புப் பிரிவு, பயிற்சி போன்ற நிர்வாகப் பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த அறிவுரைகள் பொருந்தாது. இதுதவிர, சப்–இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள யாரும் சொந்த சட்டமன்ற தொகுதியில் பணியில் தொடரக் கூடாது.
கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் பணியை சொந்த மாவட்டத்தில் முடித்துள்ள சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் மே 31–ந் தேதிக்குள் 3 ஆண்டு கால பணியை நிறைவு செய்யும் சப்–இன்ஸ்பெக்டர் அவர்களின் துணை மண்டலத்தில் இருந்து மட்டுமல்ல, அவர்களின் சொந்த சட்டசபை தொகுதியில் இருந்தே மாற்றப்பட வேண்டும்.
விரிவான ஆய்வு எனவே இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். மேற்கூறப்பட்ட பணி காலத்துக்கு உட்பட்ட அதிகாரிகள் அனைவரும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்போது, அது அவர்களின் சொந்த மாவட்டம்தானா என்பதை சரிபார்க்க வேண்டும். 3 ஆண்டுகளை கணக்கிடும்போது, அந்த மாவட்டத்துக்குள்ளே கிடைக்கும் பதவி உயர்வும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த அறிவுரைகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளும்போது, அந்தந்த துறைகளின் மாநில தலைமையகத்தில் பணியாற்றுபவர்களுக்கு அது பொருந்தாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
விடுமுறையில் சென்றால்... ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட, தேர்தல் தொடர்பான பணியில் கடமை தவறிய எந்தவொரு அதிகாரியும், இனி தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் நியமிக்கப்படக்கூடாது. குற்ற வழக்கு நிலுவையில் உள்ள எந்த அதிகாரியும், தேர்தல் பணி அல்லது தேர்தல் தொடர்புடைய பணியில் நியமிக்கப்படக்கூடாது.
தேர்தல் கமிஷன் உத்தரவிட்ட பிறகு, பணியிடமாற்றம் செய்யப்படும் அதுபோன்ற அலுவலர்கள் விடுப்பில் செல்வது, அந்த மாவட்டத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே நீடிப்பது போன்றவை குறித்து ஏற்கனவே புகார்கள் வந்து உள்ளன. இதை தேர்தல் கமிஷன் கண்டிப்புடன் பார்க்கும். இடமாற்ற உத்தரவு வந்த உடனே அந்த மாவட்டத்தை விட்டு அவர்கள் வெளியேறிவிட வேண்டும்.
கலந்தாலோசனை தேர்தல் கமிஷனின் இந்த அறிவுரைகளை அமல்படுத்தும் போது மாநில தலைமை தேர்தல் அதிகாரியை கலந்தாலோசிக்க வேண்டும். அதற்கான இடமாற்ற உத்தரவுகள் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் உள்ள அதிகாரிகளை, இறுதிப் பட்டியல் வெளியான பின்னரே, தலைமை தேர்தல் அதிகாரியை ஆலோசித்துவிட்டு இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: