செவ்வாய், 29 டிசம்பர், 2015

அவுரங்கபாத்தில் இலவச ரொட்டி வங்கி....யாரும் ரொட்டி தானம் செய்யலாம்....பின் இலவசமாக...

அவுரங்காபாத்,: மஹாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத் நகரம், அஜந்தா, எல்லோரா குகைக் கோவில்களுக்குப் பிரசித்தி பெற்றது. இப்போது, 'ரொட்டி வங்கி' என்ற நுாதன திட்டம் மூலம், மேலும் புகழ் பெற்றுள்ளது. 'பசி வந்தால், பத்தும் பறந்து போகும்' என்பது முதுமொழி. அத்தகைய கொடிய பசியைப் போக்க உதவுகிறது, இந்த ரொட்டி வங்கி. அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் யூசுப் முகதி. ஹாரூன் முகதி இஸ்லாமிக் சென்டர் என்ற அமைப்பின் நிறுவனர்; துணிக் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவர் தான், ரொட்டி வங்கியை நிறுவியவர்.


இந்த வங்கி பற்றி அவர் கூறியதாவது:பல ஏழை முஸ்லிம் குடும்பங்கள், ஒரு வேளை உணவிற்கே போராடுவதை நான் கண்டிருக்கிறேன். ஒருவரின் உழைப்பில், மொத்த குடும்பமும் உண்ண வேண்டிய நிலையில், அனைவரும், வயிறார உணவு உண்ண முடியாது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் பலர், மற்றவர்களிடம் கையேந்துவதை கவுரவக் குறைவாக எண்ணுவர். அத்தகையோருக்கு நாம் ஏன் உதவக் கூடாது என, எண்ணினேன்; ரொட்டி வங்கி உதயமானது. இத்திட்டம் குறித்து, என் மனைவி கவுசர் மற்றும் சகோதரிகளிடம் விவாதித்தேன். அவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 5ம் தேதி, ரொட்டி வங்கியை திறந்தேன்.

இந்த வங்கியின் விதிமுறைகள்:

*அன்னதானம் செய்ய வேண்டும் என்று விரும்புவோர், இந்த வங்கியில் உறுப்பினராகச் சேரலாம். அவர்களுக்கு பிரத்யேக குறியீடு கொண்ட, 'பாஸ்புக்' வழங்கப்படும்
* அவர்கள், தினமும், குறைந்தபட்சம், இரண்டு ரொட்டி, ஒரு தட்டு சைவம் அல்லது அசைவ உணவை வழங்கினால் போதும்
* அந்த உணவை, 'டிபாசிட்'டாக ஏற்று, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்
* தானமாக பெறப்படும் உணவின் தரம் ஆராயப்படும். அதன் பின், அந்த உணவு, வங்கி வாடிக்கையாளரான, ஏழை, எளிய, முதியோர்களுக்கு வழங்கப்படும்
* யார் யாருக்கு உணவு தேவையோ, அவர்கள் நேரடியாக வந்து, ரொட்டியுடன், தங்களுக்கு விருப்பமான, சைவம் அல்லது அசைவ உணவை பெற்றுச் செல்லலாம். ஏழைகள், நடுத்தர வகுப்பினர், முதியோர், வேலையற்றோர் என, யார் வேண்டுமானாலும், வங்கிக்குவந்து இலவசமாக உணவு பெற்றுச் செல்லலாம்; பிச்சைக்காரர்களுக்கு மட்டும் அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த வங்கி, 250 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்டது; இரண்டே வாரங்களில், 375 உறுப்பினர்களாக வளர்ச்சி கண்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இதில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், ரொட்டி வங்கி உறுப்பினர் எண்ணிக்கை விரைவில், பல மடங்காக உயரும் என, யூசுப் முகதி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அவுரங்காபாத்தில், 11.70 லட்சம் பேர் வசிக்கின்றனர். அதில், முஸ்லிம்கள், 31 சதவீதம் பேர் உள்ளனர். அனைவருக்கும், எந்த நேரத்திலும் உணவு கிடைக்க வேண்டும். ஒரு பருக்கை சோறு கூட, வீணாக, குப்பையில் விழக் கூடாது; இதுவே என் கொள்கை.
யூசுப் முகதி

ஏழை முஸ்லிம் குடும்பங்களில், படிக்காத அல்லது ஓரளவு படித்த பெண்களை, இளம் வயதிலேயே, முதியோருக்கு மணம் முடிக்கும் கொடுமை நிகழ்கிறது. அதனால், அவர்கள் இளமையிலேயே விதவைகளாகும் நிலையும் ஏற்படுகிறது; அல்லது, அவர்கள் விரைவாக விவாகரத்து செய்யப்படுகின்றனர். இத்தகைய அபலைப் பெண்களுக்கு, சமூகத்திலும் பாதுகாப்பு இல்லை. உணவு வழங்கவோ, வேலைவாய்ப்பை அளிக்கவோ பெரும்பாலானோர் முன்வருவதில்லை. அத்தகையோருக்கு இந்த வங்கி ஆதரவாக உள்ளது.
கவுசர்,
யூசுப் முகதியின் மனைவி


வங்கியின் நேர அட்டவணை:
காலை, 11:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை வங்கி இயங்கும். உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், ரொட்டி வழங்கலாம். அதுபோல, எந்த நேரத்திலும், ஏழைகள், உணவை பெற்றுச் செல்லலாம். தற்போது, தினமும், 500 பேர், இலவச உணவை வாங்கிச் செல்கின்றனர்.அன்னதானம் செய்வோர் மற்றும் உணவு பெறுவோரில், மூன்றில் ஒரு பங்கினர், முஸ்லிம் அல்லாதவர்கள். ஒருவரின் மதம், நிதி நிலை உள்ளிட்டவற்றை பார்க்காமல், வரும் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது.இந்த வங்கி பற்றி கேள்விப்பட்டதும், பணக்காரர்கள் வீடுகளில் இருந்து, அவர்கள் இல்லத்தில் தயாரிக்கப்படும் உணவில் ஒரு பகுதி, ரொட்டி வங்கிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்து, முஸ்லிம் வேறுபாடின்றி, அனைவரும் உணவுகளை தானமாக வழங்கி வருகின்றனர்.

உணவு மட்டுமின்றி, வீடுகளில் பயன்படுத்தப்படும் பிற பொருட்களையும், ரொட்டி வங்கி போல, புதிய வங்கிகளாக பயன்படுத்தி, ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் உதவலாம்.
என்னென்ன வங்கிகள் துவக்கலாம்:
* மருந்து, மாத்திரை
* ஆடை
* மொபைல் போன்
* கம்ப்யூட்டர், மின் சாதன பொருட்கள்
* பேனா, பென்சில், பாடப் புத்தகம், நோட்டு புத்தகம்
* விளையாட்டுப் பொருட்கள்
* மரச் சாமான்கள்
* சமையல் பாத்திரங்கள்
* மளிகை பொருட்கள் பாதுகாக்கப்படும் உணவு:
ரொட்டி வங்கியில் டிபாசிட் செய்யப்படும் உணவை, பாக்கெட்டுகளில் அடைத்து, குளிர்பதன பெட்டிகளில் வைத்து விடுகின்றனர். என்னென்ன உணவு, எவ்வளவு உள்ளது என்ற விவரம், குறிப்பேடுகளில் தெளிவாக தயாரிக்கப்பட்டு, அனைவரும் அறியும் வகையில் எழுதி வைக்கப்படுகிறது.வங்கியில் பணத்தை டிபாசிட் செய்தால், வட்டி கிடைக்கும்; ரொட்டி வங்கியில் உணவை டிபாசிட் செய்தால், புண்ணியம் கிடைக்கும் என்பதால், ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தினமலர்.com

கருத்துகள் இல்லை: