திங்கள், 28 டிசம்பர், 2015

காவிமயமாகும் சட்டம்/நீதிமன்றம் – பாசிசமயமாகும் அரசு – மதுரை உரைகள்

வினவு.com மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை 12-ஆம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கம் 19.12.2015 மாலை 5 மணிக்கு மதுரை மடிசியா அரங்கத்தில் மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தலைமையில் நடைபெற்றது. கிளைப் பொருளாளர் சங்கையா அனைவரையும் வரவேற்றார். “காவிமயமாகும் நீதித்துறை! பாசிசமயமாகும் அரசு! தீர்வின் திசை என்ன?” என்பது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் இந்தக் கூட்டம் கம்யூனிஸ்ட்களுக்கோ, புரட்சியாளர்களுக்கோ இல்லை. இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை எல்லாம் இருக்கிறது, இது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு என்று நம்புகிறவர்களுக்குத்தான் இந்தக்கூட்டம். இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 51 அறிவியல் பூர்வமான விஷயங்களை சமூகத்திலே முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகன் உச்சநீதிமன்றத்திலே ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். 17 இலட்சம் வருடத்திற்கு முன்பாக இங்கே இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டப்பட்டது.
இது இராமன் பாலம். இந்தப் பாலம் தொடர்பான செய்தி வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாசர் இராமாயணத்திலும் இருக்கிறது. அந்த இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வரப்போகிறார்கள். அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்கிறார். உடனடியாக உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதிக்கிறது.மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்
ஒரே அரசியல் சட்டம்தான். இந்துக்களுக்கு தனி, முஸ்லீம்களுக்குத் தனி, கிறிஸ்துவர்களுக்குத் தனி, சீக்கியர்களுக்குத் தனி என்று கிடையாது. ஆனால் வெவ்வேறு வகையான தீர்ப்புகள் இருக்கிறது. சல்மான் கான் வழக்கில் நீதிமன்றத்திலே சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் அதே சாட்சியத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. ஜெயலலிதாவை நீதிபதி குன்ஹா அவர் முன் வந்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கிறார். நீதிபதி குமாரசுவாமி அதே சாட்சியத்தின் அடிப்படையில் அவரை விடுவிக்கிறார். ஒரே சட்டம்தான்.
ஏராளமான இஸ்லாமியர்கள். கிறிஸ்துவர்கள் இந்து மத வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பார்ப்பன, வைதீக, இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சார்ந்த எந்த ஒரு நபரும் இன்றுவரை தூக்கு மேடை ஏறியதில்லை, இதன் எதிரொலியாகக் குண்டு வைத்த இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கூட தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். அஜ்மல் கசாப்பிலிருந்து, யாகூப் மேமன் வரை. ஒரே சட்டம்தான். குண்டு யார் வைத்தாலும் வெடிக்கும். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும் வைக்கிறார்கள், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வைக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாகவும், இந்துக்கள் பிரதமராகவும், உயர்பதவிகளிலும் அலங்கரிக்கிறார்கள். ஒரே அரசியல் சட்டத்திலே இரண்டு விதமான தீர்வுகள் சொல்லப்படுகின்றன.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. 1969-ல் தந்தை பெரியார் கருவறைத் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை அறிவிக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது. இந்துக் கோயில்களில் அது வரை இருந்த பரம்பரை வழி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்படுகிறது. இதற்கு எதிராகப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்.அந்த வழக்கில் ஆகம முறைப்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது நீதிமன்றம். இருப்பினும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசு கொண்டுவந்திருந்த சட்டத்திருத்தத்தையும் தடைசெய்யவில்லை இதைத்தான் பெரியார், ”ஆபரேசன் வெற்றி ஆனால் நோயாளி மரணம்” என்று குறிப்பிட்டார்.
prpc-madurai-annual-day-conference-3இப்போதைய தீர்ப்பின் மூலமும் கருவறைத் தீண்டாமை சட்டப்படி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகமம் என்பது என்ன? கோவில்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும், கருவறை எப்படி அமைந்திருக்க வேண்டும், கடவுளுக்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்பன பற்றித்தான் ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறதே ஒழிய குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகராக வேண்டும் என்று எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் காலங்காலமாக இந்தக் கோயில்களில் அர்ச்சகராக இருக்கிறோம் என்ற காரணத்தை மட்டுமே சொல்லி அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இது மட்டுமா காலம்காலமாக இருந்தது? தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணத்திற்குத் தடை ஒழிக்கப்பட்டது. இப்பொழுது கூட கர்நாடகாவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருண்டால் புண்ணியம் கிடைக்கும் என்ற வழக்கத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே நாடார் ஜாதிப் பெண்கள் மார்பகத்தை மறைத்து சேலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது., ”அவர்கள் மார்பில் சேலைஅணிவது எங்கள் மத உணர்வைப் புண்படுத்துகிறது” என்று பார்ப்பனர்கள் அவர்களின் மார்பகத்தை அறுத்து எறிந்தனர்.
இவற்றையெல்லாம் பழக்க வழக்கங்கள் என்று இன்று ஏற்றுக் கொள்ள முடியுமா? அயோத்தி இராமன் வழக்கையே எடுத்துக் கொள்வோம். இராமன் அங்குதான் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்கிறார்கள் பார்ப்பனர்கள். 17 இலட்சம் வருடத்திற்கு முன் இராமன் பிறந்தான், புஷ்பக விமானம் இருந்தது, இராமேசுவரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் அணிலையும், குரங்கையும் வைத்து பாலம் கட்டினான் என்று புளுகுகிறார்கள் பார்ப்பனர்கள்.
அனைத்தையும் நம்பிக்கை என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமா? அனைத்து மதத்தினருக்கும் நம்பிக்கை என்பது தனிப்பட்ட முறையில் உண்டு. ஆனால் அவற்றைப் பொதுவான கருத்தாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் வரலாற்று ரீதியிலான மற்றும் அறிவியல் ரீதியிலான சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். நம் நாட்டின் அரசியல் சட்டம் எப்படி இருக்கிறது? நீதிபதிகள் எப்படிப்பட்டவர்கள்? இரண்டுமே காவிமயமாக்கத்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் மதச்சார்பற்ற என்ற வார்த்தை எங்கும் கிடையாது. 1976-ம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில்தான் மதச்சார்பற்ற என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது. 1948-ல் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்று ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், சரத்து 25,26,27 ஆகியவைதான் இப்போது பிரச்சினையாக உள்ளன. அவை மத நிறுவனங்களின் உரிமையைக் கூறுகின்றன. அதே அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 16 அனைவரும் சமம் என்று கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் பசுவதை தடை செய்யப்பட்டால் இந்தியாவில் எங்கும் நம்மால் மாட்டுக்கறியை உண்ண முடியாது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறுகிறார் ”எனக்கு மட்டும் சர்வ அதிகாரமும் இருந்தால் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிப்பேன்” என்று. இந்திய அரசியல் சட்டத்தின் மீது ஆணையெடுத்துக் கொண்டு பதவியேற்ற ஒரு நீதிபதி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பேசக் கூடாது. எனினும் அவரது பேச்சு நமக்கு உணர்த்துவது எது? நீதித்துறை காவிமயமானதைத்தான், குஜராத்தில் ஒரு நீதிபதி ஒரு வழக்கிலே கூறியிருக்கிறார், ”நமது நாட்டை 2 விசயங்கள் தான் கெடுக்கிறது, ஒன்று ஊழல். மற்றொன்று இட ஒதுக்கீடு” என்று. இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச்சட்டப்படி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை மறுத்து ஒரு நீதிபதி பேசலாமா? ஒரு வழக்கில் ஒரு நீதிபதி அடுத்த ஆண்டு முதல் டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதற்கு எந்த அமைப்பினருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று தீர்ப்புக் கூறுகிறார். அந்த நீதிபதி ஒரு பார்ப்பனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த உடனே கொண்டு வரப்பட்ட முதல் சட்டம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம். அனைத்துத் துறைகளிலும் நாம் காலூன்றிவிட்டோம். மீதமுள்ள ஒரே துறை நீதித்துறை. அதிலும் நமது ஆட்களைக் கொண்டுவந்துவிட்டால் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துக்களின் இராஜ்ஜியமே இந்தியா முழுவதும் இருக்கும் என்று முடிவுகட்டுகின்றது பி.ஜே.பி. அரசு. இந்தியாவில் உள்ள 940 நீதிபதிகளில் 20 பேர்தான் தாழ்த்தப்பட்டவர்கள், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் சேர்த்துக் கூட்டிப்பார்த்தால் 100 பேர் தான் இருப்பார்கள். மீதி அனைவரும் பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினர்தான். இதுதான் இந்திய சமூகத்தில் நீதித்துறையின் இலட்சணம்.
“சகிப்புத்தன்மை – பன்முகத்தன்மை ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கையா?” என்பது பற்றி பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்

பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்
பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்
சென்ற வாஜ்பாய் அரசு, பி.ஜே.பி யின் அரசு. இப்போ இருக்கும் அரசு ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசு. அடுத்த இலக்கு இந்துத்துவா அரசு. இப்போது இருக்கிற அரசு பாசிச அரசு அல்ல. பாசிசமாக இருந்தால் மைக்செட் போட முடியாது; கூட்டம் நடத்த முடியாது. ஆனால் அரசை பாசிஸ்டுகள் கைப்பற்றிக் கொண்டார்கள். அப்போ பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? ஹிட்லர் 1931-ல் வரலாறுகளைத் திரித்து இதுதான் வரலாறு என்றான். இப்போது இவர்களும் அதேதான் செய்கிறார்கள். நீங்கெல்லாம் ஒரு விளம்பரம் பாத்திருப்பிங்க. அதுல புளு கலர் லைட் விட்டு விட்டு எரியும். அப்போது கொக்….. கொக் கோலா, கொக் கொக் கோலா னு சவுண்ட் வரும். அது மாதிரி பலலாயிரம் கோடி செலவு பண்ணி மம்…..மம் மோதி… மம்…மம் மோதி அப்படினு விளம்பரம் பண்ணி ஆட்சிக்கு வந்தாரு மோடி.
பிளாஸ்டிக் சர்ஜெரியை நாங்க முன்னாடியே கண்டுபிடிச்சுட்டோம். 17 லட்ச வருசத்துக்கு முன்னாடியே விமானத்தக் கண்டுபிடிச்சுட்டோம், கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணை. அதே மாதிரி பேசுனது பிரதமர் ஆச்சே. அது என்னய்யா பிளாஸ்டிக் சர்ஜெரினு கேட்டா யானை தலையை வெட்டி மனுசத் தலையில வைச்சா பிள்ளையார். அதான் பிளாஸ்டிக் சர்ஜெரி அப்படினு விளக்கி சொல்றாரு. சும்மாவா மம்….மம் மோதியாச்சே. இத யாரு மத்தியில பேசுறாரு? ஆயிரக்கணக்கான அறிஞர்கள் விஞ்ஞானிகள் கூடியிருக்கிற அரங்கத்துல. வெட்டி உறுப்பு மாத்துறது பிளாஸ்டிக் சர்ஜெரி இல்ல டிரான்ஸ்பிளான்டேஷனானு கேக்காதீங்க கொன்னுடுவார். அடுத்து விமானத்தை நாங்கதான் கணடுபிடிச்சோம். என்னடானு கேட்டா. பதினேழு லட்சம் வருசத்துக்கு முன்னாடி அயோத்தியில இருந்து கிளம்பி ராமேஸ்வரத்துக்கு புஷ்பக விமானத்துல பறந்து வந்து இறங்குனாங்க இராமனும், சீதையும். விமானத்துக்கு பைலட் யாருடா,? டீசல்ல ஓடுச்சா, பெட்ரோல்ல ஓடுச்சா, தண்ணில ஓடுச்சா? அதெல்லாம் கேட்டா கொன்னுடுவோம். ஏன்னா இதெல்லாம் எங்க நம்பிக்கை. வேட்டையாடிக்கிட்டிருந்த மனுஷன் நாகரிகமா மாறி முதல்ல கண்டுபிடிச்சது சக்கரம். அப்புறம் வண்டி. வண்டியும் சக்கரமும் மட்டும் இருந்தா போகுமா? அதுக்குத்தான் மாட்டையோ, குதிரையோ பூட்டி ஓட்டுனாத்தான் வண்டி போகும்னு கண்டுபிடிச்சான். 17-ம் நூற்றாண்டிலேதான் மெசின் கண்டுபிடிச்சான், ரைட் பிரதர்ஸ் தான் பல ஆண்டு ஆய்வு நடத்தி விமானத்தக் கண்டுபிடிச்சாங்க. அது முதல்ல 12 செகண்டுதான் வானத்தில் பறந்ததது. அப்புறந்தான் அது ஆகாய விமானமா பறந்தது. இதுதான் நம் 2000 ஆண்டு சரித்திரம்.
prpc-madurai-annual-day-conference-2நம்ப முடியாத கதைகளாகத்தான் இராமன், லட்சுமணன், பரதன் ஆகியோரின் பிறப்பு இருக்கிறது. இப்படி கதைகளை வச்சுக்கிட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, சுஷ்மா சிவராஜ் பகவத் கீதையை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பகவத் கீதை என்ன சொல்லுது? அது ஒரு 18 அத்தியாயம் கொண்ட தொகுப்பு.
ரௌடி, பொறுக்கி, மொள்ளமாரி, அவங்களுக்கெல்லாம் வழிகாட்டி மாதிரி.முதல் அத்தியாயம் போரில் கொலை செய்யப்பட்டவர்கள் உடலைத்தான் அழிக்கிறாய் உயிரை அழிக்க முடியாது என்று கூறுகிறது. அதற்கு பெரியார் மனுசனுக்குத்தான் உயிர் இருக்கிறதா? இல்லை புழு, பூச்சி, ஆடு, மாடுகளுக்கெல்லாம் உயிர் இருக்கிறதா என்று வினா எழுப்பினார். அதற்கு இன்னமும் பதில் வரவில்லை. மூன்றாவது அத்தியாயத்தில் நான்கு வர்ணங்களையும் படைத்தவன் நானே என்று கூறுகிறார், 18-வது அத்தியாயம் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கூறுகிறது. அதைத்தான் மோதி சொல்கிறார். காண்ட்ராக்ட் தொழிலாளர்களை வேலையைச் செய் கூலியை எதிர்பார்க்காதே என்று கூறுகிறார் மோதி. சத்ரியனக் கூட செத்துப்போகச் சொல்கிறது கீதை. ஆனா பிராமணர்களைப் போரில் தொடவே கூடாது என்கிறது. இதைத்தான் மோதியும் சொல்கிறார். இன்னமும் நாட்டில் பலபேருக்கு சோறு இல்ல, வீடு இல்ல, மருத்துவ வசதி இல்ல. மழை பேஞ்சா அடிச்சுக்கிட்டு போகுது. இதெல்லாம் ஏன்னு கேட்டா இதெல்லாம் முன் ஜென்மத்தில் பண்ண பாவம் என்று (கர்ண பகவான் சொன்னதாக) சொல்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர் 1931-ல் இந்துக்கள் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடி உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்துப் போராட அணி சேருங்கள் என்று சொன்னார். இவ்வாறு வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து கொண்டு தேசதுரோகம் செய்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் வரலாறு. பிரிட்டிஸ்காரர்களிடம் காட்டிக்கொடுத்த இந்த ஏவல் நாய்கள்தான் ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த சித்பவன் பிராமணர்கள்.
இப்ப மோடி உருவாக்கியிருப்பது (மேக் இன் இண்டியா) வாங்க வாங்க வாங்க…. அமெரிக்கர்களிடம் போய் வாங்க வாங்க. என்னடானா வளர்ச்சியாம். கால் கீழ ஒரு கட்டி, வயத்துல ஒரு கட்டி, இது எப்படி வளர்ச்சியாகும்? இது வீக்கம், கேன்சர் (Cancer) அம்பானி வளர்ந்துட்டான் நாடு வளர்ந்துடுச்சு, அதானி வளர்ந்துட்டான் நாடு வளர்ந்துடுச்சு, சாதாரண மக்களுக்கென்ன வளர்ச்சி? மிகப்பெரிய சர்வாதிகாரி முசோலினி என்ன சொன்னார். அரசும் மூலதனமும் இணையும் போதுதான் பாசிசம் உருவாகும் என்று முசோலினி சொல்கிறார். நம் நாட்டில் அரசும், மூலதனமும் அதாவது அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா, மோடி, ஜெட்லி எல்லாம் சேர்ந்தது தான் பாசிச அரசு. அடுத்த நிகழ்வு இந்துத்துவா அரசு.
சகிப்புத்தன்மையை மீறி ஆர்.எஸ்.எஸ் மிரட்டி வருகிறது.
இதனடிப்படையில் தபோல்க்கர கொன்னுட்டான். தபோல்க்கர் என்ன சொன்னாரு? பெண் தெய்வங்களான சரஸ்வதி, லட்சுமி, சக்தி, இவங்கெல்லாம் உடை அலங்காரம், வைரத்தோடு, மூக்குத்தி, காசு மாலை, பட்டுச் சேலை, இப்படி எல்லாம் அணிஞ்ச மாதிரி காட்டுறதெல்லாம் பொய். பழைய கோவில்கள்ள உள்ள சிலைகளெல்லாம் உடை அலங்காரம் இல்லாமதான் உள்ளது. திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்த ரவி வர்மன் என்ற ஒவியன்தான் இந்த சிலைகளுக்கு உடை அலங்காரம் வரைந்தான் இந்த விஷயத்ததான் தபோல்கர் ஆதாரத்தோட சொன்னார். தபோல்க்கர கொன்னுட்டாங்க. அடுத்து பன்சாரே. அவரொரு கம்யூனிஸ்டு. 1681-ல் சிவாஜி இறந்துட்டாரு. அவர் உயிரோடு இருக்கும் போதுதான் வெள்ளைக்காரர்கள் நாட்ட பிடிச்சுட்டாங்க. இப்ப சிவாஜியும் வெள்ளைக்காராங்களோட கைக்கூலிதான் என்று ஆதாரத்தோட சொன்னாங்க. இந்த விஷயத்ததான் புத்தகமாக எழுதினார் பன்சாரே. பன்சாரேவ கொன்னுட்டாங்க. அடுத்து கல்புர்கி. அவர் நாத்திகர் அல்ல. அவரு சாதி தீண்டாமையை எதிர்க்கிற லிங்காயத்வாதி. லிங்காயதம் என்பது இந்து மதத்தின் ஒரு அங்கமல்ல. வீர சைவம் என்பது இந்து மதத்தின் ஒரு அங்கமல்ல. அப்படினு புத்தகம் எழுதினாரு.அவரையும் கொன்னுட்டாங்க. இப்ப விஷயம் என்ன? மூன்று பேரையும் கொன்னது ஒரே துப்பாக்கி ரவை. இந்தக் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப்படுத்தும் புத்தகம்தான் பகவத்கீதை.
இப்ப பெருமாள் முருகனை எழுத முடியாமல் செய்தது யார்? இந்த நாட்டுல புஷ்பக விமானம் இருந்ததற்கு ஆதாரம் இல்லைனு சொன்னா பன்சாரேவுக்கு நடந்ததுதான் உனக்கும். அப்ப இந்த சகிப்புத்தன்னையின்மையை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? போலீஸ் ஸ்டேசன்ல போய் புகார் கொடுத்தா நீதிமன்றத்துல நீதி கிடைக்குமா? மூன்று பேரும் கொலை செய்யப்பட்டு இன்னும் எப்.ஐ.ஆர்., எப்.ஐ.ஆராகவே இருக்கிறது. இன்னும் கொலை செய்தவனக்கூட கண்டுபிடிக்கவில்லை. எப்படி எதிர்கொள்வது?
பன்சாரேவைக் கொலை செய்தார்கள் கண்டனக் கூட்டம் நடத்தினோம். கல்புர்க்கியைக் கொலை செய்தார்கள் நாம் கண்டன கூட்டம் நடத்தினோம். இப்ப பிரச்சனை என்னான்னா அடுத்து கண்டனக் கூட்டம் நம்ம நடத்தப் போறோமா இல்லை அவங்க நடத்தப் போறாங்களா? வீதியில் இறங்கிப் போராட நம்மளத் தள்ளுறாங்க. 3000 ஆண்டுகளாக நம்மைக் கொன்று குவித்தவர்கள் இன்னும் நம்மைக் கொல்கிறார்கள், நீயும் நானும் இந்துன்னு சொல்றே. நீயும் நானும் இந்துன்னா அப்ப சாக்கடையை வந்து அள்ளு. நான் உன்னோட மணி ஆட்டுற வேலையைப் பாத்துக்கிறேன், சாக்கடைய அள்ளுறேன்னு ஐஸ்வர்யா ராயக் கூட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறதல்ல. சாக்கடையில் இறங்கனும். இறங்கி அள்ளனும். ஐஸ்வர்யா வந்து அள்ளுவியா, க்ளீன் இந்தியா அம்பாஸிடர் கமலஹாசன் வந்து அள்ளுவிய? இந்த 3000 ஆண்டு காலமாக நாங்க செய்ற அதே வேலையை செஞ்சுகிட்டு இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை உயரவில்லை. இதெல்லாம் மாற வேண்டுமென்றால் அடுத்த கண்டனக் கூட்டம் அவர்கள் நடத்த வேண்டும்
மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் நன்றி சொல்லி கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பேராசிரியர்கள்

கருத்துகள் இல்லை: