ஞாயிறு, 26 ஜூலை, 2015

தி.மு.க., கூட்டணியில் 50 'சீட்': ராகுல் ஓப்புதல்?

சட்டசபை தேர்தலில், ஆட்சியில் பங்கு வேண்டும்; 50 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, தி.மு.க., தரப்புக்கு, காங்கிரஸ் சார்பில், நிபந்தனை விதிக்கலாம் என்ற, கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஒப்புதல் அளித்து விட்டதாக இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது:'தமிழகத்தில், அ.தி.மு.க., அரசை அகற்ற, தி.மு.க., காங்கிரஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும்; இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றும்' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் மாறி, மாறி ஒரு நிகழ்ச்சியில் பேசினர். அடுத்ததாக நடந்த கூட்டம் ஒன்றில், பேராயர் எஸ்றா சற்குணம் பேசுகையில், 'மீண்டும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உருவாக வேண்டும்' என்றார். அதற்கு இளங்கோவன், 'எஸ்றா சற்குணம் விருப்பம் நிறைவேறினால், எனக்கு மகிழ்ச்சி' என்றார். இதையடுத்து, மதுரைக்கு சென்ற இளங்கோவன், தடாலடியாக, 'கூட்டணி ஆட்சி தேவை. முதல்வர் பதவி அவர்களுக்கு என்றால், துணை முதல்வர் பதவி எங்களுக்கு; நிதி அமைச்சர் பதவி அங்கே என்றால், உள்துறை அமைச்சர் பதவி எங்களுக்கு' என்றார்.
 

பின், சென்னை, புரசை வாக்கத்தில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பேசுகையில், '1980 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் பாதிக்கு பாதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை; தமிழக மக்கள், கூட்டணி ஆட்சி தத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை' என்ற ரீதியில் பேசினார். இதே கருத்தை, தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் வலியுறுத்தி சொல்லி விட்டார்.இதனால், இரண்டு கட்சிகளுக்கும் இடையில், கூட்டணி அமைவதில் முரண்பட்ட நிலை ஏற்பட்டது. 
ஏற்றுக் கொள்கிறேன்:

இருந்தாலும், திருச்சிக்கு வந்த ராகுல், தன் பேச்சில், தி.மு.க.,வை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.இதனால், தி.மு.க., தரப்பு சந்தோஷமாக இருக்கிறது.இருந்தபோதும், திருச்சியில் கட்சிக்காரர்களிடம் பேசிய ராகுல், 'தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், 50 'சீட்'கள் வரை பெற வேண்டும்; அப்போதுதான் கூட்டணி சாத்தியம்; உங்களின் இந்த எண்ணத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்' என, சொல்லி விட்டு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, கட்சியினர் உற்சாகமாகி இருந்தாலும், இந்த தகவல் அறிந்து, தி.மு.க., கலக்கமடைந்துள்ளது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: