செவ்வாய், 5 மே, 2015

நடிகர் சல்மான்கான் HIT and Run வழக்கில் நாளை தீர்ப்பு ! சினிமாக்காரன் போதையில் காரை ஏற்றி கொன்றாலும் சட்டம்...Wait and see?

நடிகர் சல்மான்கான் மீது 2002–ம் ஆண்டு செப்டம்பர் 28–ந் தேதி,மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார்.மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக் மற்றும் முஸ்லிம் சேக் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, பின்னர் விசாரணையை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றியது. அதன்படி, செசன்சு கோர்ட்டில் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவின்கீழ் மறுவிசாரணை தொடங்கியது.12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்த நிலையில், சல்மான்கான் தரப்பு வக்கீல் மற்றும் அரசு தரப்பு வக்கீல் ஆகிய இருவரது வாதமும் கடந்த மாதம் 21–ந் தேதி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, மே 6–ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் சரியாக காலை 11.15 மணிக்கு சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கின் தீர்ப்பு நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீர்ப்பு வெளியாவதையொட்டி நடிகர் சல்மான் கான் இன்று மும்பை சென்றடைந்தார். இந்த வழக்கை பொறுத்தவரையில், சல்மான்கான் மீதான குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தி பட உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: