ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஆந்திரச் சம்பவம்: 20 தமிழர்களில் வன்னியர்களின் 6 உடல்கள் மட்டும் மறு பிரேதப் பரிசோதனை! பாமகவின் கைங்கரியம்!

திருப்பதி அருகே சுட்டுக் கொல்லப்பட்ட 6 தமிழர்களின் உடல்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
இந்தப் பரிசோதனை விடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றபோது, இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, திருப்பதி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 20 பேரின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் கடந்த 8-ஆம் தேதி இரவு ஒப்படைக்கப்பட்டன.
மறுநாள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரில் 6 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
ஆனால், சந்தவாசலை அடுத்த வேட்டகிரிபாளையம், களம்பூரான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சசிகுமார் (35), மாணிக்கம் மகன் முருகன் (45) ஆகியோரது சடலங்களை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல, கண்ணமங்கலத்தை அடுத்த முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்த கொல்லைமேடு கோபால் மகன் முனுசாமி (35), முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் மூர்த்தி (38), காந்திநகர் கொல்லைமேடைச் சேர்ந்த சிவாஜி மகன் மகேந்திரன் (25), சந்தவாசலை அடுத்த வேட்டகிரிபாளையம் கிராமம், கிருஷ்ணன் மகன் பெருமாள் (37) ஆகியோரது சடலங்களையும் அடக்கம் செய்ய மறுத்து அவர்களது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு: இந்த நிலையில், 6 பேரின் உடல்களிலும் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் உள்ளதால் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநில மருத்துவர்களைக் கொண்டு 6 பேரின் சடலங்களையும் மறு பிரேதப் பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவக் குழு வருகை: இதையடுத்து, சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் தாக்கியூதீன் தலைமையில் மருத்துவர்கள் 12 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
விடியோவில் பதிவு: இதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.10 மணிக்கு விடியோ பதிவுடன் கூடிய மறு பிரேதப் பரிசோதனை தொடங்கி, இரவு 8.15 மணிக்கு நிறைவடைந்தது.
உடல்கள் ஒப்படைப்பு: உடல்கள் பரிசோதனை முடிந்தவுடன் உடனுக்குடன் மருத்துவமனையின் சவக் கிடங்குக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டன. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரின் உடல்களையும் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி ஆகியோர் அவரவர் உறவினர்களிடம் இரவு 9.30 மணிக்கு ஒப்படைத்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களில் இறந்தவர்களின் வீடுகளுக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அஞ்சலி செலுத்தப்பட்ட பின், இரவே 6 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன dinamani.com

கருத்துகள் இல்லை: