புதன், 17 டிசம்பர், 2014

Aircel Maxis சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்!

ரூ.3,500 கோடி மதிப்பிலான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு விதிகளை மீறி அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது குறித்து, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது சிதம்பரம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், ரூ.600 கோடிக்கும் குறைவான மதிப்புடைய ஒப்பந்தத்துக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரத்திடம் அண்மையில் விசாரிக்கப்பட்டது.

ரூ.600 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தத்துக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களைக் கையாளும் அமைச்சரவைக் குழுவால் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்.
அதனை மீறி, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை இன்னமும் முடிவடையவில்லை' என்று சிபிஐ வழக்குரைஞர் கே.கே. கோயல் தெரிவித்தார்.
ப.சிதம்பரம் விளக்கம்: சிபிஐ விசாரணை நடத்தியது குறித்து ப.சிதம்பரத்திடம் பிடிஐ செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், "வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது குறித்து எனது விளக்கத்தை விரிவாக சிபிஐ பதிவு செய்தது. ஏற்கெனவே நான் வெளியிட்ட அறிக்கையில் என்ன தெரிவித்திருந்தேனோ அதைத்தான் சிபிஐயிடமும் திரும்பத் தெரிவித்தேன். வேறு எதையும் புதிதாக தெரிவிக்கவில்லை' என்றார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் ப.சிதம்பரம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கேட்டு அதிகாரிகள் ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், பிற ஒப்பந்தங்களுக்கு அளிப்பது போல்தான் அதற்கும் ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
வழக்கு விவரம்: வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன் தனக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தை மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது கட்டாயப்படுத்தி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், இதையடுத்து, ஏர்செல் நிறுவனத்துக்கு பல தொலைத் தொடர்பு வட்டங்களில் தயாநிதி மாறன் உரிமங்களை வழங்கியதாகவும் சிபிஐயிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் உரிமையாளரும் மலேசியத் தொழிலதிபருமான அனந்த்கிருஷ்ணன், மலேசிய நாட்டினர் அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல், சன் டிடிஎச், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் பெர்கத், சவூத் ஆசியா எண்டெர்டெயின்ட்மெண்ட் ஹோல்டிங் லிமிடெட், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 120-பி பிரிவின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி, நீதிமன்றத்தில் இதுதொடர்பான விசாரணையின்போது தொழிலதிபர் சிவசங்கரனை கட்டாயப்படுத்தி, மேக்சிஸ் நிறுவனத்தின் 2 நிறுவனங்களுக்கு ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் விற்கச் செய்ததாக சிபிஐ தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, ஏர்செல் நிறுவனத்துக்கு புதிதாக பல வட்டங்களில் உரிமங்கள் அளித்ததாகவும் தெரிவித்திருந்தது.
72 பக்க குற்றப்பத்திரிகையில், 151 சிபிஐ தரப்பு சாட்சிகள் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான 655 ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன. dinamani.com

கருத்துகள் இல்லை: