திங்கள், 15 டிசம்பர், 2014

திருச்சியில் 40 லட்சம் லஞ்சம் கொடுத்து ஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பினார்

திருச்சி:போலீசுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்து ஆயுள் தண்டனை கைதி, மனைவியுடன் வெளிநாடு தப்பிச் சென்ற பகீர் தகவல் அம்பலமாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பத்திரக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தவமணி(30). கடலூரில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் நடந்த ஒரு கொலைச் சம்பவம், குரூப் 2 வினாத்தாள் வெளியான சம்பவம் ஆகியவை தொடர்பான வழக்குகள் தவமணி மீது நிலுவையில் உள்ளன. கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தவமணி கடந்த ஆண்டு சிறைக்கம்பியை அறுத்து தப்ப முயன்ற போது சிக்கினான். தவமணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். புனே கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக திருச்சி மாநகர ஆயுதப்படை எஸ்ஐ இளங்கோவன் உள்ளிட்ட 5 போலீசார் தவமணியை கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி புனேவிற்கு ரயிலில் அழைத்து சென்றனர். புனே அருகே சிக்னலுக்காக ரயில் நின்றிருந்த போது கழிவறைக்கு செல்வதாக கூறிய தவமணி தப்பி சென்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து ஆயுதப்படை எஸ்ஐ இளங்கோவன் உள்ளிட்ட 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதி தவமணி தப்பியோடிய சம்பவம் தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஆயுதப்படை எஸ்ஐ ஒருவர் தவமணியின் மனைவியுடன் செல்போனில் பல தடவைகள் பேசியிருப்பது தெரியவந்தது. தவமணி போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல உடந்தையாக இருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபல ரவுடி கிள்ளி பிரகாஷ்(32), மணிகண்டன்(30) ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம்:தவமணியை அழைத்து வர கடந்த 22ம் தேதி காரில் அவனது மனைவியுடன் சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டபடி 24ம் தேதி போலீசார் புனேவில் இருந்து திரும்பி வரும் போது குல்பர்கான் ரயில்நிலையத்தில் தவமணி தயாராக இருந்தார். நாங்கள் அவரை காரில் ஏற்றிக்கொண்டு ஐதராபாத் வந்தோம். அங்கு 2 நாட்கள் தங்கி விட்டு பின்னர் மைசூர் சென்றோம். பின்னர் பெங்களூர் போய்விட்டு கடந்த 7ம் தேதி மதுரை வந்தோம். அப்போது தவமணி, நானும் என் மனைவியும் இப்படியே வெளிநாடு போகிறோம். நீங்கள் பழனியில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட நபரிடம் சென்று ரூ.35 லட்சத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என கூறினான்.

இதை நம்பி நாங்கள் பழனி சென்றோம். ஆனால் அவன் குறிப்பிட்டபடி யாரும் அங்கு இல்லை. இந்நிலையில் மயிலாடுதுறைக்கு வந்த போது தான் போலீசில் சிக்கினோம். தவமணியிடம் ரூ.200 கோடி வரை பணம் உள்ளது. போலீசிடம் இருந்து தப்பியதாக கூறுவது நாடகம். உண்மையில் போலீசாரின் அனுமதியுடனேயே தவமணி தப்பியிருக்கிறான். எங்களிடம் அவன் பேசியதில் இருந்து கண்டுபிடித்தோம். தப்பி வருவதற்கு திருச்சி போலீசாருக்கு மட்டும் ரூ.40 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும் அவன் கூறினான் என்று இருவரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். தவமணியின் கூட்டாளிகள் போலீசாரிடம் அளித்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: