திங்கள், 17 நவம்பர், 2014

விஜய்: எனக்கு 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது? இசை படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

இசை' படத்தின் இசை வெளியீட்டு விழா வாழ்வா, சாவா என்கிற நிலையில் இருந்த என்னை தூக்கி விட்டவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா என்று நடிகர் விஜய் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'இசை'. இப்படத்தை இயக்கி நடித்தது மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய், தனுஷ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்ச்சியில் விஜய் பேசியது:
"எனக்கு 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப் படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் 'குஷி' என்கிற வெற்றிப் படம் கொடுத்து என்னைத் தூக்கிவிட்டவர் சூர்யா. இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன்.
'குஷி' ரீலிஸானவுடன் விக்ரமன் கேட்டார்... எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள்? கதை என்ன இருக்கு? கதையே இல்லையே? என்றார். நான் சொன்னேன்... சரிதான். ஆனால் எஸ்.ஜே..சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்கவேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். 'நண்பன்' சமயத்தில் 'இசை' படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார் விஜய்.
தனுஷ் பேசியது:
"நான் ப்ளஸ் ஒன் படித்தபோது 'குஷி' படம் ரோகினி தியேட்டரில் பார்த்தேன். இப்போது விஜய், சூர்யா உடன் நான் அமர்ந்திருப்பதில் பெருமையாக இருக்கிறது.
சூர்யா பேசுவதே பாடுவது மாதிரி இருக்கும், அவர் இசையமைப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவரது படங்களில் அவரது இசைஞானம் தெரியும். அவர் படப் பாடல்களைக் கேட்டால் கேட்டு வாங்கியது தெரியும். இன்றைக்கு ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் ஜெயிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார்" என்றார் தனுஷ்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியது:
"எஸ்.ஜே.சூர்யாவைப் பற்றிப் பேசும்போது சீரியல் அளவுக்குப் பேச முடியும். 17 ஆண்டு கால நட்பு எங்களுடையது. 'குஷி' படத்தில் அவருடனும் விஜய்யுடனும் வேலை பார்த்ததைக் கணக்கு பார்த்தால் 'கத்தி' எனக்கு விஜய் சாருடன் மூன்றாவது படம்.
கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யாவின் திறமை அபாரமானது. நான் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் போது அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் உருவாக்குவேன். அவரது இசை ஆர்வம் அளவிட முடியாதது. பிரபலமான பாடல்களை எல்லாம் பாடிக் காட்டுவார். பாடகர்களின் குரல்களை எடுத்துவிட்டு இசையை ஓடவிட்டு தானே பாடுவார்.
'முத்து' படத்தில் வரும் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலை எஸ்.பி.பி. குரலை எடுத்துவிட்டுப் அவர் பாடுவார். அவருக்கு தன் மீது அவ்வளவு நம்பிக்கை. ஹீரோ ஆன பின் 'சர்க்கர இனிக்கிற சக்கர' அதே எஸ்.பி.பி. இவருக்காக பாடியது பின்னர் நடந்தது.
'கத்தி' படப்பிடிப்பில் 'இசை' படம் பற்றி விஜய்யிடம் கூறினேன். அவர் 'சூர்யாவின் படம் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. எனக்கும் ஆவலாக இருக்கிறது' என்றார். அதுவும் சத்யராஜ் நடித்த காட்சிகளைப் பார்த்து படம் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது" என்றார்.
சத்யராஜ் பேசியது:
"நான் 2 படங்கள் நடிக்க மறுத்தது உண்டு. ஒன்று 'அமைதிப்படை' இன்னொன்று' இசை'. கதை கேட்டவுடன் என் முடிவை இரண்டு படங்களுமே மாற்றியது. 75 படங்கள் வில்லனாக நடித்து விட்டு பல அசவுகரியங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு கதாநாயகனான பின் மணிவண்ணன் 'அமைதிப்படை'யில் வில்லனாக நடிக்க அழைத்தார். மறுத்தேன். கதை. கேரக்டர் சொன்னபிறகு முடிவை மாற்றினேன்.
அதே போல 'இசை'யில் வில்லன் என்றதும் தட்டிக் கழித்தேன். தவிர்க்க நினைத்தேன். கதை, என் கேரக்டர் பற்றிச் சொன்னதும் என் முடிவு மாறியது.
வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே இவரே கதாநாயகனாக நடிக்கிறாரே என்று நினைத்தேன். நாலாவது நாள் அவருடன் நான் நடிக்கும் போது அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன்.
எவ்வளவோ படம் பார்த்துவிட்டு 'படம் சூப்பர்' என்று மனசாட்சியே இல்லாமல் பொய் சொன்னதுண்டு. இது நிஜமாகவே நல்ல படமாக வரும். முற்றிலும் புதுமையான கதை. புதுமையான காட்சிகள். கதை பிடித்தாலும் எனக்குள் ஒளிந்திருக்கும் திருடன் மூலம் நடிக்க சம்பளத்துக்கு பேரம் பேசினேன். அவரும் கொடுத்தார் ''என்றார்.
இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா பேசியது:
" 'வாலி'யாகட்டும் 'குஷி'யாகட்டும் என் படத்தில் கதாநாயகனுக்கு சமமாக கதாநாயகிக்கும் பங்கு இருக்கும். 'இசை'யிலும் அப்படித்தான். இதில் சாதாரண கதாநாயகியைத் தேடவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் நடிகையைத்தான் தேடினேன். பல மொழிகளில் 4 மாதம் தேடி 124 பேரில் தேர்வானவர் தான் இந்த சாவித்ரி. இவர் நடிகையர் திலகம் சாவித்ரியம்மா போல இருந்தார். சமகால சாவித்ரி போல தோன்றினார். நிச்சயம் அந்த சாவித்ரி போலவே புகழ் பெறுவார்.
இன்று ஒரு பிராந்திய மொழியில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ள விஜய் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி. சத்யராஜ் இல்லை என்றால் இந்தப்படம் முழுப்படமாக வந்திருக்காது. ரஜினி, சத்யராஜ், ஷாருக்கான் ஆகியோரிடம் உள்ளுக்குள் இருக்கும் தனித்துவம் வரும். இதிலும் வந்துள்ளது.
'இசை' படத்தில் இசையமைப்பளராக நடிக்க இசைப்பயிற்சி எடுக்க விரும்பினேன். அப்போது ஏஆர்.ரஹ்மான் 'நடிப்பது என்ன ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது?' என்று ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தார். நான் இசையமைப்பளராக அவர்தான் காரணம்" என்றார் எஸ்.ஜே.சூர்யா.tamil.hindu.com

கருத்துகள் இல்லை: