புதன், 19 நவம்பர், 2014

சேலம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி,தருமபுரி 12 குழந்தைகள் இறப்பை தொடர்ந்து....

தர்மபுரி அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் 5 நாட்களுக்குள் 12 சிசுக்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் ஒரு வாரத்தில் 8 குழந்தைகள் இறந்திருப்பது அம்பலமாகியுள்ளது. சுகாதாரத்துறையின் மெத்தன போக்குகளால் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் மீண்டும் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் தமிழக அரசின் அலட்சியப்போக்கை பல்வேறு தரப்பினர் கண்டித்தனர். இதையடுத்து நேற்று அவசர, அவசரமாக சிறப்பு மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். போதிய மருத்துவர்கள் இல்லாதது, இன்குபேட்டர் குறைபாட்டால் தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

குழந்தை இறப்பு சம்பவங்கள் தர்மபுரி மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நடந்து வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. தர்மபுரியை போல் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தொடர்ச்சியாக குழந்தை இறப்பு சம்பவங்கள் நடந்து வருவது தெரியவந்துள்ளது.  சேலத்தில் அரசு சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 குழந்தைகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இங்கு பச்சிளம் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 8 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. அதன்படி கடந்த 12ம் தேதி விழுப்புரம் மாவட் டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி அலமேலு தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதேபோல், 13ம் தேதி சேலம் ஜலகண்டாபுரம் சவுரியூரை சேர்ந்த பழனிபாப்பா ஆகியோரின் பெண் குழந்தை யும், அனுப்பூர் அன்பழகன்கலாவின் ஆண் குழந்தையும், 14ம் தேதி நாமக்கல் மாவட்டம் அத்தனூரைச் சேர்ந்த மாணிக்கம் சரோஜா அவர்களின் ஆண் குழந்தையும், 15ம் தேதி விழுப்புரம் மாவட் டம் சங்கராபுரத்தை சேர்ந்த குமார்செல்வியின் ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளது.

16ம் தேதி வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிகுட்டையை சேர்ந்த பொன்மலை -& மஞ்சு ஆகியோருக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையும், நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தை சேர்ந்த ரமேஷ் ராதா தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் நேற்று தர்மபுரி மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவக்குமார்தங்கமணி தம்பதியின் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளது. சேலம் மட்டுமின்றி தமிழகத்தில் பரவலாக சமீபகாலமாக பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 30க்கு மேல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 21 ஆக உள்ளது. தற்போது அதிகரிக்கும் மரணங்கள் உ.பி., ம.பியை விட மோசமான நிலைக்கு தமிழகமும் செல்லும் அபாயம் உள்ளது தினகரன் .com

கருத்துகள் இல்லை: