சனி, 13 செப்டம்பர், 2014

சென்னை விமான நிலையத்தில் திரவ பொருட்களை கொண்டு செல்ல தடை !பாகிஸ்தான் உளவாளி கைது எதிரொலி

சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் என்பவரை தேசிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் விமானத்தை கடத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் இடம், விமான நிலைய சுற்று பகுதிகளில் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலைய பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் விமானத்தில் செல்லும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.


நேற்று காலை சென்னையில் இருந்து கொழும்புக்கு செல்ல இலங்கையைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 40) என்பவர் வந்திருந்தார். அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஒரு பாட்டிலில் ‘பாதரசம்’ இருந்தது.

உடனே பாதுகாப்பு அதிகாரிகள், “பாதுகாப்பு நலன் கருதி, ‘பாதரசத்தை’ விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. நீங்கள் கொண்டு செல்லக்கூடாது” என்றனர்.

ஆனால் பாதரசம் விலை உயர்ந்தது என்பதால் அதை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என விக்னேஷ் கூறினார். அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டதால் விக்னேஷ், தனது விமான பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிச்சென்றார்.

மேலும் பயணிகள் கொண்டு சென்ற தங்கள் கைப்பைகளில் இருந்த திரவ பொருட்களை எடுத்துச் செல்லவும் அதிகாரிகள் தடை விதித்தனர். பயணிகள் கொண்டு வந்த திரவ பொருட்களை வீசி எறிந்து விட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: