செவ்வாய், 9 செப்டம்பர், 2014

டில்லியில் ஆட்சியை பிடிக்க ரூ.4 கோடி லஞ்சம்: வீடியோவுக்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க. நோட்டீஸ்

துடில்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.ஆனால் சில நாட்களிலேயே காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் நீண்ட நாட்களாக டில்லி சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டது.இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று அம்மாநில கவர்னர் நஜீப் ஜங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்துள்ளார்.கவர்னரின் இம்முடிவுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது.

பா.ஜ.க., குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாக தற்போது ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. இது தொடர்பான வீடியோவை நாளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.பா.ஜ.க. தலைவர்களான ஷேர் சிங் தாகர், ரகுபீர் தாஹியா ஆகியோர் டில்லியில் தங்கள் கட்சியின் ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வான தினேஷ் மொஹானியாவிடம் ரூ. 4 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். அப்போது மற்றொரு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வான விவேக் யாதவ் உடனிருந்துள்ளார். இந்த வீடியோ காட்சி ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
வீடியோ காட்சி போலியானது:இந்த வீடியோ காட்சி போலியானது என்று டில்லி பா.ஜ.க. துணைத் தலைவர் ஷேர் சிங் தாகர் மறுத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி கூறும் குற்றச்சாட்டு தொடர்பாகவும், வெளியாகியுள்ள வீடியோவின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி டில்லி பா.ஜ.க.தலைவர் சதிஷ் உபாத்யாய் ஷேர் சிங் தாகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். dinamalar.com

கருத்துகள் இல்லை: