புதன், 10 செப்டம்பர், 2014

நிருபர்களை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் நியமனம் : பா.ஜ., தி.மு.க., காங்., கடும் கண்டனம்

சென்னையில் பத்திரிகை நிருபர்களை கண்காணிக்க, போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதற்கு, பா.ஜ., காங்., மற்றும் தி.மு.க., கடும் கண்டனம் தெரிவித்து ள்ளன. இது தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், இந்திய பத்திரிகை கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னையில், ஆங்காங்கே கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அதை கண்காணிக்க வேண்டிய போலீசார், தற்போது, இந்த செய்திகளை சேகரிக்கும், 'கிரைம்' பிரிவு நிருபர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருப்பது, அனைத்து தரப்பிலும், பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.   இந்த அரசு அமைவதற்காக பத்திரிகைகள் பரப்பிய பொய்யுரைகள் எத்தனை எத்தனை. வெறிநாயை வளர்த்து விட்டால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிக்க வரும் என்பதை பத்திரிகை உலகம் உணராமல் போனது ஏன்? இன்று குத்துதே குடையுதே என்றால் அதற்கு சொந்தமாக தீட்டி வைத்துக் கொண்ட ஆப்பு தான் காரணம்.
இது என்ன புது வேலை என்று கேட்கலாம்; ஆனால், ஏற்கனவே, சென்னை, நுண்ணறிவுப் பிரிவு போலீசில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை கண்காணிக்க, தனியாக ஆட்கள் நியமிப்பதுண்டு.அதே நேரம், சென்னை போலீஸ் தொடர்பான செய்திகளை அளிக்கவும், நிருபர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுத் தரவும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளார்.இவர்களையும் மீறி, இரண்டு மூன்று பத்திரிகை நிருபர்களுக்கு என, தனியாக, 'பிரஸ் இன்சார்ஜ் ஆபீசர்' என்ற பெயரில், ஒரு துணை கமிஷனர் அல்லது உதவி கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரிகளை நியமித்திருப்பது தான், தற்போது கிளம்பிஉள்ள சர்ச்சை.பொதுவாக, இவர்கள் உயரதிகாரிகளாக இருப்பதால், இவர்கள் கீழ் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் போலீசார் என, அனைவருக்கும், நிருபர்களை கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம், பத்திரிகை நிருபர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதுடன், அவர்களின் தனிப்பட்ட பிரச்னையிலும், போலீசார் தலையிடும் சூழல் ஏற்படும் என்கிறது, பத்திரிகையாளர்கள் தரப்பு.கடந்த சில தினங்களுக்கு முன், பத்திரிகையாளர்கள் பெயர், கண்காணிப்பு அதிகாரி பெயர்கள் அடங்கிய பட்டியல், சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது அறிந்ததும், அனைத்து பத்திரிகையாளர்களும் கொதித்து போய் உள்ளனர்.இது தொடர்பாக, சென்னை பத்திரிகை யாளர் சங்கம், தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து போலீஸ் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

அபாயகரமான போக்கு:

இந்நிலையில், இந்த பிரச்னையை, இந்திய பத்திரிகை கவுன்சில் கவனத்திற்கு, சென்னை பத்திரிகையாளர் சங்கம் கொண்டு சென்றுள்ளது.

இதுகுறித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:நிருபர்களை கண்காணிக்க, தனித்தனியாக போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருப்பது, அவர்களுடைய தகவல் தளங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இது மிகவும் அபாயகரமான போக்கு. பத்திரிகையாளர்கள் அறியாமலேயே, அவர்கள் போலீஸ் அதிகாரியின் கண்காணிப்பிற்கு உள்ளாகுவது என்பது, பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் மோசமான மிரட்டல்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், அரசியல் கட்சிகளும், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜின் இந்த நடவடிக்கைக்கு, கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து, பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:பா.ஜ., இந்த கண்காணிப்பு குழுவிற்கு, கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இந்த நடவடிக்கை, பத்திரிகை சுதந்திரத்தை உளவு பார்ப்பதாக அமைந்துள்ளது.அவர்கள், பத்திரிகையின் உண்மை செய்திகள் குறித்து பயப்படுகின்றனர். பத்திரிகைகள் ஒரு விஷயம் குறித்து விசாரிக்க துவங்கி விட்டால், அது அரசிற்கு, எதிர்மறையான தாக்கத்தை தந்துவிடுமோ என்று நினைக்கின்றனர். இதற்காக தான், இந்த கண்காணிப்பு குழுவை நியமித்துஉள்ளனர். இந்த நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு விரோதமானது; சுதந்திரத்தை நெருக்குவதாக அமையும். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டு, குறிப்பிட்ட செய்திகளை அவர்கள் வெளியிடக் கூடாது என்று, தடுக்கப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்துகிறது. இந்த கண்காணிப்புக் குழு, உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தனியார் 'டிவி' சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த, தி.மு.க., செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:கமிஷனர் ஜார்ஜின் இந்த உத்தரவு, அவர் கீழ் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் சுதந்திரமான பணிக்கு, தடை ஏற்படுத்துவதாக அமையும். அவர், குற்றங்களை ஊக்குவிக்கிறாரா என்பது தெரியவில்லை.பத்திரிகைள் செய்தி வெளியிடுவதை தடுக்கக் கூடாது. அவர்கள் மூலமாக தான், பல குற்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, பத்திரிகை களை தடுக்கக் கூடாது. போலீசார், தகவல்களை நேர்மையான வழியில் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

மோசமான விஷயம்:

காங்., கட்சியும், கமிஷனர் ஜார்ஜின், பத்திரிகை கண்காணிப்புக் குழுவிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.கமிஷனரின் நடவடிக்கையை கண்டித்து உள்ள, முன்னாள் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், மணீஷ் திவாரி, தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எந்த ஒரு மோசமான விஷயமாக இருந்தாலும், அதை தைரியமாக எதிர்ப்பது, இந்திய பத்திரிகைகள் தான். பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் இந்த நடவடிக்கையை, எதிர்த்து போராடும் பத்திரிகையாளர்கள் பக்கம், நான் எப்போதும் இருப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையில், பத்திரிகையாளர் சங்கங்களை அழைத்து பேச, கமிஷனர் ஜார்ஜ் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தன் நடவடிக்கையை நியாயப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பி.ஆர்.ஓ.,விடம் மட்டுமே செய்தி கிடைக்கும்-சென்னை போலீஸ் அறிவிப்பு:பத்திரிகை நிருபர்களை கண்காணிக்க, சென்னை போலீஸ் சார்பில், அதிகாரிகள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நேற்று மாலை, சென்னை போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை மாநகர காவல் துறையில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த, காவல் உதவி ஆணையர் ராமநாதன், பதவியில் இருந்து ஓய்வு பெற்றதால், காலியாக இருந்த இப்பணியிடத்திற்கு, காவல் உதவி ஆணையர் முருகதாஸ், 5ம் தேதி முதல், பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இவருக்கு உதவியாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குனர் பாண்டியன் செயல்படுவார். சென்னை காவல் துறை தொடர்பான அனைத்து செய்திகளும், மக்கள் தொடர்பு அதிகாரி மூலமாக, அவர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படும்.மேலும், ஊடகங்களுக்கு செய்திகளும், வெளியீடுகளும், மக்கள் தொடர்பு அதிகாரி மூலமாக, அவரது அலுவலகத்தில் இருந்து மட்டுமே, வெளியிடப்படுமே அன்றி, சில ஊடகங்களில் வெளியிட்டது போல், வேறு எந்த அதிகாரிகளாலும் வெளியிடப்படாது.மேலும், சில ஊடகங்களில் வெளியானது போல் எந்த விதமான உத்தரவுகளோ, சுற்றறிக்கையோ பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு வெளியாகும் செய்திகள், முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

நமது நிருபர்  dinamalar.com

கருத்துகள் இல்லை: