சனி, 5 அக்டோபர், 2013

பாரதிராஜாவின் 16 வயதினிலே மீண்டும் வருகிறது ! என்றும் பதினாறு !

"16 வயதினிலே' படத்தின் டிரெய்லரை சென்னையில் வெள்ளிக்கிழமை
வெளியிடும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். உடன் (இடமிருந்து) நடிகர் சத்யஜித், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன். பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம் என்றார் நடிகர் ரஜினிகாந்த். 1977-ஆம் ஆண்டு வெளியான "16 வயதினிலே' திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யஜித், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா முன்னிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது:
36 ஆண்டுகளுக்கு பின் இந்த மாதிரி ஒரு விழா நடப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை இன்று வரைக்கும் பலர் பேசி வருகிறார்கள். தயாரிப்பாளர் ராஜ்கண்ணு கமலுடன் நெருக்கமாக இருப்பார். என்னிடம் நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அவர் நல்ல மனிதர். "விஸ்வரூபம்' பட பிரச்னையின்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ""16 வயதினிலே' படத்தை புதுப்பித்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கமலுக்கு கொடுத்து அவருடைய நட்டத்தை ஈடு செய்வேன்'' என கூறியிருந்தார். தான் சிரமத்தில் இருந்தாலும், ஒரு ஹீரோவுக்கு சிரமம் என்ற நிலையில் உதவ முன்வந்த ராஜ்கண்ணுவை பார்த்து நெகிழ்ந்து போனேன். அந்தளவுக்கு கண்ணியமான மனிதர் ராஜ்கண்ணு. பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது மிகவும் சிரமம். ஆனால் யாருக்கும் கஷ்டம் நிரந்தரமானது அல்ல. வாழ்க்கையில் எல்லாமும் வந்து வந்து போகும் என்றார்.
நண்பர்களே ஊக்க சக்தி - கமல்ஹாசன்
ரஜினி, கமல், ஸ்ரீதேவி என எல்லோரையும் எப்படி இந்தப் படத்துக்காக பாரதிராஜா தேடிக் கண்டுபிடித்தார் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது என்னிடம் வந்து பாரதிராஜா மாதிரி கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன் என்று சொன்னால் பொல்லாத கோபம் வந்துவிடும். லட்சியம் இல்லாமல் சாதரணமாக அவர் புறப்பட்டு வந்துவிடவில்லை. பெரிய தேடல்களும், அனுபவங்களும் அவரை முன் எடுத்து சென்றிருக்கிறது. புட்டணகனகல், கிருஷ்ணநாயர் உள்ளிட்ட மேதைகளிடம் கற்ற பாடமும், அனுபவமும்தான் பாரதிராஜாவின் பயணம். முதலில் இந்தப் படத்துக்கு "மயில்' என பெயர் வைத்திருந்தார். கதை என்னவென்று எனக்கு அப்போதே தெரியும். ஆனால் இந்த கால கட்டம் வரை பேசப்படும் கதையா என்பது இப்போதுதான் தெரிந்திருக்கிறது. 36 வருடங்களுக்கு முன்பே நவீன இசை, அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தை பார்த்து கிண்டல் அடித்தவர்களே அதிகம். வெற்றி பெறும் என சொன்னவர்கள் குறைவு. சினிமா வியாபாரத்தில் எல்லாம் தெரிந்த பண்டிதர் ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசினார். ஆனால் ரசிகர்கள் தங்க கீரிடத்தை வைத்து விட்டார்கள். அந்த தன்னம்பிக்கையின் முதல் நாயகன் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.
அப்பொழுதெல்லாம் ஒரு சில்வர் ஜூப்ளி விழா நடக்கும்போது, மற்றொரு படத்தின் ஷூட்டிங்கில் இருப்போம். ஆனால் இப்போதுதான் நானும், ரஜினியும் வேகத்தை குறைத்துக் கொண்டு விட்டோம். அதற்கு காரணம் வயதல்ல. முதலீடுதான் காரணம். சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கியபோதும் ரஜினி அப்படியேதான் இருந்தார். பத்து வருடங்களுக்கு பின்பும், ஏன் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். பல இடைத்தரகர்கள் இருந்தும் எங்கள் நட்பு இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேரும்தான். எனக்குள் இருக்கிற தன்னம்பிக்கைக்கு, நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள்தான் ஊக்க சக்தியாக இருக்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.
புதிதாக பிறந்த உணர்வு - பாரதிராஜா
காலம் உருவங்களை மாற்றி விட்டது. ஆனால் உள்ளம் மட்டும் இளமையாகவே இருக்கிறது. கார், ஏ.சி, புகழ் எல்லாம் வந்தாலும் வாழ்க்கை மாசு அடைந்து விட்டது. வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் தெளிந்த நீரோடை போல் இருந்தது வாழ்க்கை. "ரஜினி சார், கமல் சார்' என்று சொல்லுவதை விட "ரஜினி, கமல்' என்று சொல்லுவதில்தான் உண்மை இருக்கிறது.
இந்தப் படத்தில் கமலுக்கு ரூ.27 ஆயிரம் சம்பளம். ரஜினி ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் ரூ.3 ஆயிரம்தான் கொடுத்தேன். அதிலும் ரூ.500-ஐ இன்னும் நான் தரவில்லை. நண்பன் இளையராஜா இங்கு வரவில்லை. இந்தப் படத்துக்கு ரத்தமும், நாளமுமாக இருந்தவன். என்னுடன் பயணப்பட்ட பாமரன். இன்றைக்கும் வற்றாத ஜீவ நதி அவன். இது என் முதல் படம். மீண்டும் வெளிவருகிற இந்த சமயத்தில் மீண்டும் புதிதாகப் பிறந்த உணர்வு இருக்கிறது என்றார் இயக்குநர் பாரதிராஜா.dinamani

கருத்துகள் இல்லை: