ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இண்டர்வியுவுக்கு வருபவர்களை பட்டினி போடும் கொடிய காபரேட்கள் கம்பனிகள் இருந்தென்ன தொலைந்தென்ன

கார்ப்பரேட் கலாச்சாரத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஓர் அம்சம்
மனிதம்.
காலை ஒன்பது மணிக்கு வாக்-இன் நேர்காணல் என்று கூப்பிடுவார்கள். உங்களுக்குத் தகுதி இருப்பதாக முன் வரிசை நேர் காணுகிறவர்கள் (பெரும்பாலும் கத்துக்குட்டிகள்) கருதினால், திருப்பதியில் அடுத்த கூடத்துக்கு அனுப்புவது போல் அனுப்பப் படுவீர்கள். அங்கே காத்திருந்து முதல் கட்ட நேர்காணல். அது முடிந்து அடுத்த கூடம்.
அதற்குள் மதியம் ஆகி விடும். நேர்காணுகிறவர்கள் உணவுக்குப் போக, நேர்கண்டு வேலை பெற வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கூட்டத்துக்கு யாரும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள் – ‘போய் சாப்பிட்டு வாங்க.. ரெண்டு மணிக்கு மறுபடி ஆரம்பம்’. இதைச் செய்ய வேண்டிய மனிதவளத் துறை (ஹெச்.ஆர்) பல் குத்திக் கொண்டு ஃபார்ம் அடுக்கிக் கொண்டு சாப்பாட்டுப் பொட்டலத்தை எதிர்பார்த்தபடி இருக்க, முன்னால் வரிசையாக ஒரு பட்டினிப் பட்டாளம் – வந்தவர்கள்.
எனக்கு வேண்டிய் இளம் பெண் ஒருத்தி, இன்று காலையில் ஒரு குவளை பச்சைத் தண்ணீர் குடித்ததோடு இப்படியான நேர்காணலுக்கு வந்திருக்கிறாள். இப்போது மணி மாலை நாலு. ஒரு கவளம் சோறு சாப்பிடவில்லை.
எந்த நேரத்திலும் அழைக்கப்படுவாள் இரண்டாம் சுற்று நேர்காணலுக்கு என்று அமர்த்தி வைக்கப் பட்டிருக்கிறாள். அவள் கணவன் பிஸ்கட் பொட்டலங்கள், பழம் இவற்றோடு கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் மனைவிக்காகக் காத்திருக்கிறான் (உள்ளே நுழைந்து மேலே போக அனுமதி இல்லை).
இன்னும் எவ்வளவு மணி நேரம் காக்க வேண்டுமோ?
மனிதம் தொலைத்த கார்ப்பரேட்கள் இருந்தென்ன தொலைந்தென்ன? eramurukan.in

கருத்துகள் இல்லை: