முதல் ‘ஏ’ சர்டிபிகேட்- முதல் தடை-
சவால்களைக் கண்ட இயக்குநர்கள்
கே.சுப்ரமணியம்
மவுனப்பட
காலத்தில் புதுமைகள் செய்த இயக்குநர் ராஜா சாண்டோவிடம் பயிற்சி பெற்ற
கே.சுப்ரமணியம் இயக்கிய முதல் படம் ‘பவளக்கொடி’(1934). ஏழிசை மன்னர் என
பெயர்பெற்ற தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர்
அறிமுகமானது இந்தப் படத்தில்தான்.
அதன்பின்
கே.சுப்ரமணியம் இயக்கிய படங்களில் சமூகப் பார்வையுடன் கூடிய கதைகள்
அமைந்திருந்தன. சாதி ஏற்றத்தாழ்வு-விதவைகள்படும் துயரம் இவற்றை
அடிப்படையாகக் கொண்ட ‘பாலயோகினி’, பெண்களின் உரிமையை வலியுறுத்தும்
‘சேவாசதனம்’, தீண்டாமை கொடுமையை சுட்டிக்காட்டும் ‘பக்த சேதா’ போன்ற
படங்களை கே.சுப்ரமணியம் இயக்கினார்.
கர்நாடக
இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியை சேவாசதனம் படத்தில் சுப்ரமணியம்தான்
நடிகையாக்கினார். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான சுப்ரமணியம்
அச்சமூகத்தில் நிலவிய பழமைவாதங்களைத் தன் படத்தின் மூலம்
வெளிப்படுத்தினார். எழுத்தாளர் கல்கியின் ‘தியாகபூமி’ படம், கே.சுப்ரமணியம்
இயக்கிய படங்களில் முக்கியமானது. படத்தின் ஃபைனான்சியர் ஆனந்தவிகடன்
நிறுவனர் எஸ்.எஸ்.வாசன். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே இந்தக் கதை,
விகடனில் தொடராக வெளிவந்தது. படக்காட்சிகள் தொடர்பான புகைப்படங்களும்
தொடர்கதையில் இடம்பெற்று, வாசகர்களைக் கவர்ந்தது. (பின்னாளில் பாக்யராஜின்
மவுனகீதங்கள், கமலின் விக்ரம் போன்ற படங்களும் இதே பாணியில்
படப்பிடிப்பின்போதே தொடர்கதைகளாக வெளிவந்தன. இவையிரண்டும் குமுதத்தில்
வெளியாயின).
கே.ராம்நாத்
விக்டர்
யூகோ என்ற புகழ்மிக்க எழுத்தாளரின் நாவல் ‘Less Miserables’. இதைத்
தமிழில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அதை
‘ஏழை படும்பாடு’ என்ற தலைப்பில் படமாக எடுத்தார் இயக்குநர் கே.ராம்நாத்.
1950ல் வெளியான இப்படம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களில் ஒன்று.
தமிழின் முன்னோடி வசனகர்த்தாவான இளங்கோவனின் வசனத்தில் மூத்த நடிகரான
நாகையா கதாநாயகனாக நடித்திருந்தார். ஏழ்மையின் காரணமாக திருடனான ஒருவன் தன்
வாழ்க்கையில் சந்திக்கும் துயரங்கள், மாற்றங்கள் இவற்றை அடிப்படையாகக்
கொண்ட கதை. கொடூரமான இன்ஸ்பெக்டர் ஜாவர் பாத்திரத்தில் இப்படத்தில் நடித்த
சீதாராமன் என்ற நடிகர் ‘ஜாவர்’ சீதாராமன் என்றே பின்னர் அழைக்கப்பட்டார்.
சிறந்த கதாசிரியரான ஜாவர் சீதாராமன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்
பானர்மேன் துரையாக நடித்தவர். பட்டணத்தில் பூதம் படத்தில் அவர்தான்
‘பூதம்’.

டி.ஆர்.ரகுநாத்
வில்லன்
நடிகராக அறியப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் முக்கிய வேடத்தில் நடித்த ‘வண்ணக்கிளி’
படம் டி.ஆர்.ரகுநாத்தின் இயக்கத்தில் அமைந்தது. ‘அடிக்கிற கைதான்
அணைக்கும்’, ‘மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா’ போன்ற
பாடல்கள் இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள். கணவனே கண்கண்ட தெய்வம், யார்
பையன் உள்ளிட்ட படங்களையும் டி.ஆர்.ரகுநாத் இயக்கியுள்ளார்.
தமிழ்த் திரையில் தடம் பதித்த இயக்குநர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.Cinema.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக