வியாழன், 3 அக்டோபர், 2013

மோடி – வாலிப வயோதிக அன்பர்களே. மோடியின் வளர்ச்சி ! சேலம் சிவராஜ் வைத்தியரின் எழுச்சி

மோடிசேலம் சிவராஜ் சிவகுமார் வைத்தியர்;முன் குறிப்பு – இந்த பதிவினால் லாட்ஜ் டாக்டர்கள் மனம் புண்பட்டாலோ அல்லது மோடி பக்தர்கள் மனம் புண்படாமல் போனாலோ அது எங்களை அறியாமல் செய்த பிழையாக கருதி மன்னிக்கவும்.
சில நாட்களாக நாம் வாசிக்கும் பெரும்பாலான பத்திரிக்கைகள் மோடி புகழ்பாடுவதையே வேலையாக வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மோடி அலை வீசுவதாக தந்தி டிவியில் ஒருவர் செய்தி சொல்கிறார். பஸ் ஸ்டாண்டு கக்கூசில் நாற்றம் வீசுகிறது என்பதை அந்தப் பக்கம் போன உடனே கண்டுபிடிக்கிறோம் அல்லவா. அதுபோல மோடியை திருச்சியில் பார்த்தவுடன் அந்த செய்தியாளர் மோடி அலை வீசுவதை கண்டுணர்ந்துவிட்டார்.

மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது
மோடி திருச்சிக்கு வந்த அன்று நான் தஞ்சைக்கு கிளம்பியிருக்க வேண்டும். அன்றைய தந்தி டிவி செய்தியில் மூன்று லட்சம் பேர் திருச்சிக்கு வந்திருப்பதாக சொல்லிவிட்டார்கள். அத்தனை பேர் திருச்சிக்கு வந்திருந்தால் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட அங்கு வழி கிடையாது. அதனால் ஊர் நாறியிருக்குமோ எனும் அச்சத்தில் பயணத்தை ரத்துசெய்ய வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் மோடி போனாலும் நாற்றம் போகவில்லை என ஃபேஸ்புக்கில் எழுதி தெய்வ நிந்தனை குற்றத்துக்கு ஆளாகியிருப்பேன்.
மோடியை உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என அவரது ஆதரவாளர்களிடம் கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றன சில துர்சக்திகள் (ஷக்தி என உச்சரித்தல் ஷேமகரமானது). வோடஃபோன் நாயைக் கூடத்தான் பலருக்கு பிடிக்கிறது, அவர்களிடத்தில் போய் உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என கேட்பீர்களா?
லாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள்? வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அது போலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள். லாட்ஜ் டாக்டர்கள் வளர்ச்சியை சாதிப்போம் என கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம் சொந்தக் காசில் ஓயாமல் கூவுகிறார்கள். மோடியாருக்காக வைத்தியசாலையில் முதலாளிகள் கூவ வைக்கிறார்கள்.
எழுச்சியையும் சக்தியையும் எங்ஙனம் சாத்தியமாக்குவோம் என லாட்ஜ் டாக்டர்கள் ஒருபோதும் சொல்வதில்லை, அது ரகசியம். உங்களுக்கு சக்தி வேண்டுமென்றால் வைத்தியத்துக்கு போவதுதான் வழி. அதுபோலவே மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது. ஒன்று அவர் முக்திக்கு வழிகாட்டும் சாமியாராவார் அல்லது சக்திக்கு வழிகாட்டும் டாக்டராவார் என மறுபடியும் ஒரு ச்சீசீ.. தலைவராவார் என அவரது ஜாதகத்திலேயே இருக்கிறது (நன்றி – தினகரன் வசந்தம்). ஆகவே மோடியாராலும் சக்தியை மீட்டுத் தர முடியும், என்ன பாதிப்புக்கு தக்கவாறு மூன்று மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை ஆகலாம் (ஒரே மாதத்தில் குணமாக்குவதாக சொல்லும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்).
வெளிநாட்டில் இருப்போர் இணைய வழியாகவும் சக்தியைப் பெறலாம்.
லாட்ஜ் டாக்டர்கள் தங்களைப் பற்றி தாங்களேதான் பேசுவார்கள், தங்களது கேள்விகளை தங்கள் ஆட்கள் வாயிலாக கேட்க வைத்து பதில் சொல்வார்கள். அவர்கள் பொது விவாதத்துக்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள் அல்லர். அந்த நேரத்தில் இன்னுமிரண்டு நோயாளிகளின் தூக்கத்தில் சக்தி வீணாகும் பிரச்சனையை சரி செய்யலாமே எனும் நல்லெண்ணம்தான் காரணம். அதுபோலத்தான் மோடியாரும்… அவர் சிங்கிளாகவே சவால் விடுவார். அவர் விரும்பும் கேள்விகளைக் கேட்கும் அர்ணாப் கோஸ்வாமியிடம் மட்டும் பேட்டி தருவதும், குஜராத் கலவரம் என ஆரம்பிக்கும் கேள்வியை கரண் தாப்பர் கேட்டால் தெறித்து ஓடுவதும் இந்த அடிப்படையில்தான். அதனை கோழைத்தனம் என கருதலாகாது.
உலகில் ஆயிரக்கணக்கான வியாதிகள் இருக்க, இந்த லாட்ஜ் டாக்டர்கள் ஆண்மைக் குறைவுக்குக்கு மட்டும் வைத்தியம் செய்வார்கள். சேலம் சிவராஜ் சிவக்குமார் டிவியில் அதட்டி, கெஞ்சி, அழுது மன்றாடுவது எதற்காக? இந்த பாழாய்போன மனிதப் பிறவிகள் கரப்பழக்கத்தால் தங்கள் வாழ்வை வீணாக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தானே!! அவரிடம் “நீங்கள் ஏன் மலேரியாவுக்கு வைத்தியம் செய்வதில்லை” என உங்களால் கேட்க இயலுமா? அதுபோலத்தான் மோடியும், அவர் பாகிஸ்தானுக்கு சவால் விடுகிறார் என்றால் அவர்கள் அதற்காகவே பிறவியெடுத்தவர்கள். “பலன் பெற்றோர்” பாராட்டுகிறார்களா என்று மட்டும் பாருங்கள், அதை விட்டு விட்டு அவர் ஏன் இதைப் பேசவில்லை அதைப் பேசவில்லை என குற்றம் சொல்லாதீர்கள்.
ராஜ் டிவியில் சிவராஜ் வைத்தியர் பேசும்போது மிரட்டலாக பேசுவார். சுய இன்பம், வயது மூத்த பெண்களிடம் உறவு இன்னபிற சமாச்சாரங்களை வைத்து அப்படி செய்பவர்களை பயங்கரவாதிகளாக மாற்றிவிடுவார். மோடியோ பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து மிரட்டுவதன் மூலம் பார்க்கும் முசுலீம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக மாற்றிவிடுவார். பயமும், அச்சமும் எந்த அளவுக்கு இவர்களால் ஊதப்படுகிறதோ அந்த அளவுக்கு லாட்ஜ்களிலும், இணையத்திலும் கியூ வரிசை சாதனை படைக்கும்.
சேலம் சிவராஜ் சிவகுமார் வைத்தியர்
லாட்ஜ் டாக்டர்களுக்கும் மோடியாருக்கும் இவ்வளவு ஒற்றுமையிருக்கும்போது தமிழாட்டில் மோடியை மட்டும் ஏன் இந்த கம்யூனிஸ்டுகள் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. உங்களைப் பார்த்து கேட்கிறேன், உங்களில் யாராவது ஒருவர் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிராக போராடியிருக்கிறீர்களா?? பேப்பரைத் திறந்தால் ஸ்ரீ மருத்துவமனை சாதனை, டாக்டர் ராஜதுரை சாதனை என தினசரி விளம்பரம் வருகிறது. அது என்ன சாதனை என ஒரு குழுவாவது ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா? அந்த நியாய தர்மத்தை மோடியிடமும் காட்டவேண்டாமா… குஜராத்தில் வளர்ச்சியை சாதித்தார் என்றால் நம்பித் தொலையாமல் அதென்ன புள்ளி விவரத்தை நோண்டும் கெட்ட பழக்கம்? உள்ளூர் எழுச்சி நாயகர்களுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத உங்களுக்கெல்லாம் தேசிய வளர்ச்சி நாயகனுக்கு எதிராக குரல் கொடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
கொஞ்சம் தமிழ் ஊடகங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள்தான் பழனி டாக்டர் காளிமுத்துவை வளர்த்து விட்டார்கள், சேலம் சிவராஜ் சிவகுமாரையும் வளர்த்து விட்டார்கள். இப்போது மோடியை வளர்க்கப் போராடுகிறார்கள். என்ன, அப்போது செய்தியை விளம்பரமாக வெளியிட்டார்கள். இப்போது விளம்பரத்தை செய்தியாக வெளியிடுகிறார்கள். மற்றபடி அவர்கள் கடமையில் இருந்து கடுகளவும் தவறவில்லை. அவர்கள் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிரான செய்திகளை எப்படி வெளியிடாமல் இருந்தார்களோ அப்படியே மோடிக்கு எதிரான செய்தியையும் அமுக்கி வைக்கிறார்கள். அந்த நியாய உணர்வு உங்களிடம் இல்லையே?
இப்படியே இழுத்துக் கொண்டிருந்தால் மோடியாரை லேகிய டாக்டர்களுக்கு இணையானவராக நீங்கள் கருதிவிடக்கூடும். அந்த பாவம் எனக்கெதற்கு? ஆகவே அவர் அந்த டாக்டர்களை விட எப்படி உயர்ந்தவர் என விளக்கி விடுகிறேன். லாட்ஜ் டாக்டர்களது விளம்பரங்களைப் பாருங்கள். இருபதாண்டுகளாக அவர்களது விளம்பர ஸ்டைல் மாறவேயில்லை. தஞ்சையில் மகாலிங்கம் எனும் மூல பவுந்திர மருத்துவர் இன்னமும் சுவரெழுத்தை நம்பியே காலம் தள்ளுகிறார். நான் வார இதழ்கள் வாசிக்க துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை விளம்பரத்தில் சிவராஜ் சிவகுமார் படம் மாறவேயில்லை. இவ்வளவு ஏன், பேருந்து நிலையங்களில் ஒட்டப்பட்டிருக்கும் விரை வீக்க நோட்டீஸ் படமாவது கடந்த முப்பது ஆண்டுகளில் மாறியிருக்கிறதா? ஆனால் மோடியைப் பாருங்கள், காக்கி டவுசரில் ஆரம்பித்த அவரது ஆடையலங்காரம் இப்போது வந்தடைந்திருக்கும் நவீனத்தைப் பாருங்கள். தலைமுடி மாற்ற அறுவை சிகிச்சை தந்த இளமை, தாடியில் இருக்கும் தேஜஸ் இதெல்லாம் நூறு காளிமுத்து வந்தாலும் ஈடு செய்ய முடியாதது.
சிவராஜாவது டிவியில் அவ்வப்போது கோபப்படுகிறார். ஆனால் மோடியோ தனக்கு விசா கொடுக்காத அமெரிக்கா மீதோ இங்கிலாந்து மீதோ எப்போதாவது கோபப்பட்டதை பார்த்ததாக எவனாவது சொல்லமுடியுமா? தன் உயிர் தொண்டர் மாயா கோட்னானியின் தூக்கு தண்டனைக்கு அப்பீல் செய்து சட்டபூர்வமாகவும், இங்கிலாந்து கம்பெனிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சலுகை கொடுத்து அகிம்சா வழியிலும்தானே தன் விசாவுக்காக அவர் போராடுகிறார்? அந்த தியாக தீபத்தை ஆதரிக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை? உள்ளூர் லேகிய டாக்டரெல்லாம் எல்லா மாவட்டத்துக்கும் கம்பீரமாக விஜயம் செய்யும்போது தேசிய நாயகனுக்கு அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போக வழியில்லாதிருப்பது உங்களுக்கு மனசாட்சியை உலுக்கவில்லையா?
நாயை சுருக்கு வைத்து பிடிப்பதுபோல குழந்தைகளை பிடித்து கொன்றார்கள், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து எடுத்த குழந்தையை வெட்டிக்கொன்றார்கள், வீட்டுக்குள் மின்சாரம் பாய்ச்சி குடும்பத்தையே கொன்றார்கள் என இன்னமும் பத்து வருடத்துக்கு முன்னால் நடந்த கதையையே சொல்லிக் கொண்டிருக்காமல் இந்தியாவின் “எக்ஸ்ட்ரா பவருக்கு” என்ன வழி என்று பாருங்கள். வீரியத்தை விரும்புபவன் சிட்டுக் குருவிக்காக கவலைப்படலாமா?
ஆகவே வாலிப வயோதிக அன்பர்களே உங்கள் ரகசிய வியாதிகளுக்கு அணுகவேண்டிய முகவரி,
டாக்டர் நமோ,
சனாதனா கிளினிக்.
(டாக்டரின் ஊர்வாரியான விஜயத்தைப் பற்றி அறிய பிரபல தினசரி மற்றும் வார இதழ்களைப் பாருங்கள். எங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லா பிரபல டிவிக்களிலும் காணத்தவறாதீர்கள்).
- வில்லவன்vinavu.com 

கருத்துகள் இல்லை: