செவ்வாய், 1 அக்டோபர், 2013

கோவை சட்ட மாணவர்கள் பயங்கர மோதல்: போர்க்களமாக மாறிய கல்லூரி வளாகம்

சட்டக்கல்லூரி மாணவர்கள் வருங்கால சட்ட நிபுணர்களாக அல்ல வருங்கால ரவுடிகளாக மாறி கொண்டிருக்கிறார்கள் ..கோவை அருகே, அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், இரு
கோஷ்டிகளாக பிரிந்து, பயங்கர ஆயுதங்களுடன் நேற்று மோதிக்கொண்டனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை, வடவள்ளியிலுள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்களிடையே, கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. சற்குணம் - நிஷாந்த் கோஷ்டி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இருதரப்பைச் சேர்ந்த 14 மாணவர்கள் மீது, வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கல்லூரியில் ஆயுதங்களை பதுக்கி, தாக்குதலில் ஈடுபடுவதாக நிஷாந்த் அளித்த புகாரின் பேரில் சற்குணம், ஆனந்தராஜ், அழகுராஜ், ஈஸ்வரன் உள்ளிட்ட 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோன்று, ஜாதி பெயரைக்கூறி திட்டியதாக நிஷாந்த், பிரசாந்த் உள்ளிட்ட 18 பேர், கடந்த 28ம் தேதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சற்குணம் தரப்பு மாணவர்கள், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 2.30 மணியளவில் வீச்சரிவாள், கத்தி, இரும்பு ராடு, உருட்டுக் கட்டை, குழாய்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், ஆம்னி வேன் ஒன்று கல்லூரிக்குள் நுழைந்தது. அங்கு தயாராக நின்றிருந்த நிஷாந்த் தரப்பு மாணவர்கள், வேனில் இருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு விடுதியை நோக்கி ஓடினர். இதைக்கண்டு, விடுதியில் இருந்த சற்குணம் தரப்பு மாணவர்கள், கதவை மூடி உள்ளே பதுங்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த நிஷாந்த் கோஷ்டியினர், விடுதி முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, மைதானத்தில் வைத்து எரித்தனர். மேலும் இரு பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.


அதன்பின், மீண்டும் விடுதியை நோக்கி வந்து பாட்டில், கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். அறையின் கதவை உடைத்து புகுந்து, அங்கிருந்த மாணவர்களையும் சரமாரியாக தாக்கினர். விடுதியில் இருந்த மாணவர்களும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், விடுதியில் இருந்த மாணவர்கள் ஆனந்தராஜ், முருகேசன், அழகுராஜ், கதிரேசன் ஆகியோரும், எதிர்தரப்பைச் சேர்ந்த ஜெயபால் உள்ளிட்ட ஐந்து பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனையில் அட்மிட் ஆகினர்.

கோவை எஸ்.பி., சுதாகர், கூடுதல் எஸ்.பி., முத்துராஜ், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார், கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து, வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யக்கோரி, விடுதி மாணவர்கள், கல்லூரி முதல்வர் அறையில் புகுந்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மோதல் காரணமாக, அரசு சட்டக்கல்லூரிக்கு இன்று (1ம் தேதி) விடுமுறை விடப்படுவதாக, முதல்வர் சுதிர் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து போலீசார் கூறுகையில், " மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக, கல்லூரி விடுதி அறைகளில் ரத்த கறைகள் படிந்துள்ளன. கூலிப்படை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆயுதங்களை வெளியில் இருந்து கொண்டு வந்து, திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன' என்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: