ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தமிழக கட்சிகள் மோடியைபற்றி யோசிக்க தொடங்கிவிட்டனவா ? கருமம் கருமம் ? முதல் ஆள் வைகோ?

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருச்சியில், ‘இளந்தாமரை மாநாடு’க்கு வந்து சென்றபின், தமிழகத்தில் அக் கட்சிகப்கு ஒருவித உத்வேகம் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கணக்குகளில், தமிழகத்தில் இதுவரை ‘கண்டுகொள்ளப்படாமல்’ விடப்பட்டிருந்த பா.ஜ.க.வை மற்றைய கட்சிகள் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ கட்சி மாநாடுகளை தமிழகம் கண்டிருக்கிறது. பிரியாணி, குவார்ட்டர், கைசெலவுக்கு பணம், அழைத்து வர வாகனம் என, லட்சக்கணக்கில் செலவு செய்துதான், அநேக கட்சிகள் மாநாடு நடத்துவது வழக்கம். அதற்கு நேர்மாறாக, தலா, 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்க ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்தனர் என்ற மாநாட்டுக்கு முந்தைய நாள் தகவலே, தமிழக கட்சிகளை மோடி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., மோடியின் வருகையை பெரிதாக ரசிக்கவில்லை. காரணம், ‘வருங்கால பிரதமர்’ என்ற கனவில் உள்ள ஜெயலலிதா, மோடி அமோக வெற்றி பெறும் சாத்தியத்தை விரும்ப மாட்டார் என்பதை சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம். தவிர, 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, 40 தொகுதிகளிலும் ஜெயிப்பது என்ற கனவில் உள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அப்படியான நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பெறுவதை அவர் விரும்பப் போவதில்லை.

இதை மிக சுலபமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல்களில், மோடியின் திருச்சி மாநாட்டுக்கு முக்கியத்துவம் தராததில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
அதை மோடியும் உணர்ந்தே இருக்கிறார் என்பது, அவரது பேச்சில் புலப்பட்டது. ஹைதராபாத் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியைப் புகழ்ந்த மோடி, திருச்சியில், அ.தி.மு.க. ஆட்சி பற்றி நல்ல விதமாக ஏதும் கூறவில்லை.
மற்றொரு விஷயத்தையும் கவனியுங்கள்.
திருச்சி மாநாட்டில், மத்திய அரசின் ஊழல் விவகாரங்களை கடுமையாக விமர்சித்த மோடி, மத்திய அரசில் முன்பு பார்ட்னராக இருந்த தி.மு.க.வை சீண்டவில்லை. நாளைக்கே தேவை ஏற்பட்டால், பா.ஜ.க., தி.மு.க.வை தேடிச் செல்லலாம் என்பது போன்ற ஒரு தோற்றம் இதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க.வுக்குள் ‘செல்வாக்கு’ உள்ள இளைய தலைமுறையினர் (பச்சையாக சொன்னால், கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த சிலர்) தி.மு.க.வை மோடியை நோக்கி திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள் என்று தெரிகிறது. அவர்களது முயற்சி வெற்றி பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
தே.மு.தி.க.வும் தற்போது, பா.ஜ.க. பக்கம் ஆர்வமாக பார்க்க தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். திருச்சி மாநாட்டின் வெற்றி, விஜயகாந்துக்கு பா.ஜ.க. மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் வைகோவுக்கு இருந்தது. அ.தி.மு.க. தனித்து போட்டியிட செய்யும் ஏற்பாடுகளை பார்த்த வைகோ, இப்போது 3-வது அணி பற்றிய யோசனையில் உள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
திருச்சியில் பா.ஜ.க. மாநாடு நடந்தபோது அந்த ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்த வைகோ, தனக்கு அருகே இருந்தவர்களிடம் தமது மகிழ்ச்சியை வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டாராம். அதன் அர்த்தம், கூட்டணி பற்றிய ம.தி.மு.க.வின் குட்-புக்கில் தற்போது உள்ள கட்சி, பா.ஜ.க. என்பதுதான்.
ஆனால், பா.ஜ.க. பக்கம் தி.மு.க. பார்வையை திருப்பினால், வைகோ என்ன முடிவு எடுப்பாரோ!

கருத்துகள் இல்லை: