செவ்வாய், 16 ஜூலை, 2013

கருப்பர் இன சிறுவனைக் கொன்றவர் விடுதலை !. அமெரிக்காவில் பெரும் போராட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் 17 வயது கருப்பர் இன சிறுவன் டிராய்வன் மார்ட்டின் என்பவனை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாட்ச்மேன் ஜார்ஜ் சிம்மர்மேன் மீதான கொலை வழக்கிலிருந்து அவரை கோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருவதால் அமெரிக்காவில் பதட்டம் எழுந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்தது. அப்போது புளோரிடாவின் சான்போர்ட் நகரில் ஒரு இடத்தில் வாட்ச்மேனாக பணியில் இருந்தார் சிம்மர்மேன். அப்போது அங்கு வந்த மார்ட்டினுக்கும், சிம்மர்மேனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து ஆயுதம் ஏதும் இல்லாத நிராயுதபாணியான மார்ட்டினை தனது துப்பாக்கியால் விரட்டிச் சென்றார் சிம்மர்மேன். அந்த சிறுவனை விரட்டி விரட்டி சுட்டார். இதில் மார்ட்டின் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனவெறி தாக்குதல் இது என்று அமெரிக்காவில் குரல்கள் வெடித்தன. சிம்மர்மேனின் தந்தை வெள்ளையர், தாயார் பெருவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது புளோரிடா கோர்ட்டில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது சிம்மர்மேன் வேண்டும் என்றே கொலை செய்யவில்லை. தற்காப்புக்காகவே அவர் இதை செய்துள்ளார். எனவே இது கொலையாகாது என்று கூறி புளோரிடா கோர்ட் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை முற்றிலும் பெண் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்துள்ளது. இது நாடு முழுவதும் கருப்பர் இன மக்களிடையே பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நகரங்களிலும் கோர்ட் தீர்ப்பை எதிர்த்தும், விமர்சித்தும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, வாஷிங்டன், அட்லாண்டா, பிலடெல்பியா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று சிவில் உரிமைத் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறுகையில், வன்முறையைத் தவிர்க்க வேண்டும். இது மேலும் பல விபரீதங்களுக்கு வித்திட்டு விடும். இப்போது அமைதியும், கட்டுப்பாடும் காக்க வேண்டிய தருணம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் கோர்ட் தீர்ப்பு அமெரிக்க மக்களின் முகத்தில் விழுந்த அடி என்று தொண்டு நிறுவன ஆர்வலர் அல் ஷார்ப்டன் விமர்சித்துள்ளார். வன்முறை மூளுமா...? இதற்கு முன்பு 1991ம் ஆண்டு ரோட்னி கிங் என்ற கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் வெள்ளையர் கும்பலால் லாஸ் ஏஞ்சலெஸில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான கண்காணிப்புக் கேமரா வீடியோ காட்சி வெளியாகி அமெரிக்காவில் வன்முறை மூண்டது. பல நாட்கள் இந்த கலவரம் நீடித்தது. அப்போதும் தவறு செய்த வெள்ளையர் இன போலீஸார் விடுதலை செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: