பங்குச் சந்தைஎன்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான விவகாரம் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ), தமிழ்நாட்டு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவன்பின்) ஆகியன மத்திய அரசு விற்கவிருக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் 5% (சுமார் 8.38 கோடி பங்குகள்) பங்குகளை வாங்கலாம் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்திருக்கிறது.
எனது தலைமையிலான அரசின் நடவடிக்கை மூலம் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், எனது தனிப்பட்ட முயற்சிக்கும், தொழிலாளர்களின் போராட்டத்துக்கும், ஒற்றுமைக்கும், தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்”
என்று மூன்று வாக்கியங்களில் மூன்று ‘எனது’ போட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் அறிக்கையையும் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார். ஆமாமா, இது ஜெயலலிதாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தனது தலையங்கத்தில் புகழாரம் பாடுகின்றது தினமணி.
உண்மையில் நடந்திருப்பது என்ன?

மிருகங்கள் மோதும் சந்தை பங்குச் சந்தை.
தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக் கூடாது என்பது புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படை கோட்பாடு. பாதுகாப்பு, நாணயம், நிதிக் கொள்கை போன்ற மேற்பார்வை பணிகளைத் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் சந்தைகளின் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டும் என்பது அதன் சுருக்கமான வரையறை. அதாவது பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கைப்பற்றி வைத்திருக்கும் முதலாளிகளும், அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் சாதாரண மக்களும் சந்தையில் சுதந்திரமாக போட்டி போடுவதில் அரசு தலையிடக் கூடாது.
இந்த அடிப்படையில் பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கைகள் நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் தொடங்கி அடுத்து வந்த தேவ கவுடா, குஜ்ரால் கிச்சடி ஆட்சிகளில் தொடர்ந்து, வாஜ்பாயி தலைமையிலான ஆட்சியில் தனியார்மயத்துக்கு என தனி அமைச்சகத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்கள் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு மலிவு விலையில் விற்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக என்எல்சி நிறுவனத்தின் 6.44% (10.8 கோடி) பங்குகள் விற்கப்பட்டு என்எல்சி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனம் ஆக்கப்பட்டது. இப்போது என்எல்சியின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் சுமார் ரூ 59 விலையில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகின்றன. என்எல்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி வளத்தையும், அதன் மின் உற்பத்தியையும் கைப்பற்றுவதற்கு தனியார் முதலாளிகள் ஆர்வமாக இருக்கின்றனர்.
தாராள மய கொள்கைகளின் இன்னொரு கோட்பாடு, தனியார் நிறுவனங்களையும் அவற்றின் சந்தை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு நாடாளுமன்றத்திடமோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமோ இருக்கக் கூடாது, மாறாக அந்தத் துறை வல்லுனர்களால் நிர்வகிக்கப்படும் ஒழுங்குமுறை ஆணையங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பங்குச் சந்தையை கண்காணிக்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்று வரிசையாக அணி வகுத்து நிற்கும் இது போன்ற அமைப்புகள் அனைத்தும் பெயரளவு இருந்த ஜனநாயக கண்காணிப்பையும் ஒழித்துக் கட்டி முழுக்க முழுக்க தனியார் முதலாளிகளுக்கான ஆட்ட விதிகளின்படி இந்தத் துறைகளை இயங்க வைக்கின்றன.
இந்த வாரியங்கள் அல்லது ஒழுங்குமுறை ஆணையங்கள் ஏற்படுத்தும் விதிமுறைகளை அரசும் பின்பற்ற வேண்டும் என்பது உலகளாவிய நிதிச் சந்தையின் எழுதப்படாத சட்டம். பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10% பங்குகளை பொது மக்களிடம் (அதாவது, தனியார் முதலாளிகளிடம்) விற்றிருக்க வேண்டும் என்ற விதியை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் 2010-ம் ஆண்டில் உருவாக்கியது.
அந்த விதிக்கு கட்டுப்பட்டு, வேறு வழியில்லாமல் என்எல்சியின் 5% பங்குகளை விற்கப் போவதாக அரசு சொன்னது. அதாவது, என்எல்சியின் பங்கு விற்பனையை தொடங்கி வைத்து பங்குச் சந்தையில் பட்டியலிட்ட அதே அரசு, தானே ஏற்படுத்திய வாரியத்தின் விதிக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று என்எல்சி தனியார் மயத்தை செயல்படுத்துகிறது. 2006-ம் ஆண்டு இத்தகைய விதிகள் ஏதும் இல்லாத நிலையிலும் கூட 10% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டது என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம். அப்போது அந்த விற்பனை முயற்சி விடாப்பிடியான தொழிலாளர் போராட்டங்களுக்கு பிறகு தோற்கடிக்கப்பட்டது.
பிறகு வரி தள்ளுபடிகளாலும், ஊழல்களாலும் சூறையாடப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிலையை சீர் செய்ய ரூ 500 கோடி அளவில் நிதி திரட்ட வேண்டும்; பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதற்கு பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; என்ற இரட்டை நோக்கத்துடன் இப்போதைய 5% பங்குகள் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தொடக்கத்தில் பங்குகளை பங்குச் சந்தையில் ஏல முறையில் தனிநபர்கள், மியூச்சுவல் நிதி நிறுவனங்கள், அன்னிய நிதி முதலீட்டாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மற்றும் பிற தகுதியுள்ள நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்குகளை விற்கத் திட்டமிட்டிருந்தது அரசு.
ஜெயா, மன்மோகன்
மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி – கார்ப்பரேட் தரகர்களின் ஆட்சி
இதற்கு நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் முட்டுச் சந்தில் நின்றது மத்திய அரசு. அதற்கு ஒரு வழி காண ஜெயலலிதாவால் தந்திரமாக முன் வைக்கப்பட்ட திட்டம்தான் பங்குகளை தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் வாங்குவது. ஆரம்பத்தில் அதை அவ்வளவாக கண்டு கொள்ளாத மத்திய அரசு, தீவிரமாகும் தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்து வேண்டா வெறுப்பாக அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. உண்மையில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில் எதிர்ப்புகளை சமாளிக்க இப்படி ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி தந்ததற்காக மன்மோகன் சிங்கே ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
முதலாவதாக, பங்குகளை வாங்கும் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அவற்றை சந்தையில் விற்கவோ, ஒரு ஆண்டுக்குப் பிறகு சந்தையிலோ வேறு ஒரு நிறுவனத்துக்கோ விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை என்எல்சி நிர்வாகம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
இரண்டாவதாக, தமிழ்நாட்டு மக்களின் நிலத்தை கைப்பற்றி, தமிழ்நாட்டு மக்களின் உழைப்பில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் என்எல்சி உற்பத்தி செய்த மின்சாரம், ஆண்டு தோறும் ஈட்டிய லாபம் இவற்றின் மூலம் மத்திய அரசு ஆரம்ப முதலீட்டை விட பல மடங்கு சம்பாதித்து விட்டிருக்கிறது. இந்த நிலையில் அதன் பங்குகளை வாங்குவதற்கு தமிழ் நாட்டின் நிதியிலிருந்து மத்திய நிதிக்கு ரூ 500 கோடி மாற்றுவது என்பது மோசடியானதாகும். அதாவது மக்கள் சொத்துக்களை மக்களின் பணத்தால் மீண்டும் வாங்குவது என்பதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாளையே ஜெயா அரசு நிதிப்பற்றாக்குறை என்று மறைமுகமாக இந்தப் பங்குகளை விற்பனை செய்தால் யாரும் தடுக்க முடியாது.
மூன்றாவதாக, பங்குகள், பரிவர்த்தனை வாரியத்தின் விதிக்கு கட்டுப்படுவதாக பங்கு விற்பனை என்று அரசு சொன்னாலும், 3.33 சதவீதம் விற்காமல் 5 சதவீதம் விற்பது அரசின் உண்மையான நோக்கத்தை காண்பிக்கிறது. அப்படி எந்த விதியும் இல்லாத 2006-ம் ஆண்டு 10% பங்குகளை விற்க முண்டியதும் இதே மத்திய அரசுதான்.
நான்காவதாக, 10% தானே விற்கிறார்கள், கட்டுப்பாடு இன்னமும் பொதுத்துறை கையில்தானே இருக்கும் என்று வாதாடப்படுகிறது. ஆண்டுக்கு ரூ 1400 கோடி லாபம் சம்பாதிக்கும் என்எல்சியிடமிருந்து ஆண்டுக்கு ரூ 140 கோடியை ஈவுத் தொகையாக தனியார் சம்பாதிக்க வழி செய்து கொடுப்பது என்ற அளவில் கூட இது பகல் கொள்ளை நடவடிக்கை ஆகும்.
மேலும், படிப்படியாக பங்குகளை விற்று என்எல்சியின் கட்டுப்பாட்டை தனியார் கையில் ஒப்படைப்பதற்கு வழி வகுத்துத் தந்திருக்கிறது மத்திய அரசு. ஆகவே, இந்தப் பிரச்சினை இத்தோடு முடியப் போவதில்லை. என்எல்சியை முழுமையாக தனியார் கையில் ஒப்படைப்பது வரை தனியார் முதலாளிகளின் பிரதிநிதியான மத்திய அரசு ஓயப் போவதில்லை. ஜெயலலிதாவின் மாயையில் சிக்காமல் தொழிலாளிகள் இந்த சதியைப் புரிந்து கொண்டு போராட வேண்டும். vinavu.com
- அப்துல்