செவ்வாய், 16 ஜூலை, 2013

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம் குலுக்கல் முறையில் வழங்கப்படும்

சென்னை:வார்டு தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், கைவிட்டது.இதையடுத்து, வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை, பள்ளி மாணவர்கள் மூலம் சேகரிக்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்தது. அதிலும், குறைவான அளவு பிளாஸ்டிக் தான் சேகரிக்க முடிந்தது. தற்போது, பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, வார்டு அலுவலகங்களில் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.


குப்பை கொடுத்தவருக்கு, ஒரு டோக்கன் வழங்கப்படும். இப்படி சேர்க்கப்படும் டோக்கன்களில், அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க, மாதம் ஒரு முறை மண்டல உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படும்.அதில், முதல் பரிசாக அரை கிராம் தங்கம் வழங்கப்படும். 2வது பரிசாக ஐந்து பேருக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்படும். இதற்காக, தங்கத்திற்கு3 லட்சம் ரூபாய், கைக்கடிகாரத்திற்கு 3 லட்சம் ரூபாய் என, மாதம் 6 லட்சம் ரூபாய் செலவாகும். அதன் அடிப்படையில், முதல் மூன்று மாதங்களுக்கான 18 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மூன்று மாதங்கள் இந்த திட்டம் நடக்கும். மக்களின் வரவேற்பை பொறுத்து, திட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மாதம் நடைபெறும், மண்டலக்குழு கூட்டத்தில், இந்த திட்டம் ஒப்புதலுக்காக வைக்கப்படும். வரும் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, உடனே இந்த திட்டம் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: