சனி, 9 பிப்ரவரி, 2013

கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட ராஜஸ்தான் சிறுமி கவலைக்கிடம் : டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

புதுடெல்லி: ராஜஸ்தானில் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் வசித்து வந்த 11 வயது சிறுமியை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 6 பேர் கும்பல் கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடிவயிற்றில் 6 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவளது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை சிறுமியை டெல்லிக்கு கொண்டு சென்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் தனிவார்டில் சேர்த்தனர். அவளது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பரிசோதனைகளுக்கு பிறகு அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் எம்ய்ஸ் டாக்டர்கள் தெரிவித்தனர். பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து அவளது குடும்பம் பிழைப்பு தேடி ராஜஸ்தானின் சிகாருக்கு வந்தனர். சிறுமிக்கு 6 சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். பலாத்காரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் ஜாமீனில் வந்து விட்டனர். ‘கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகள் பணபலத்தால் தப்பிவிட்டனர்’ என சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: