வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

T.Nagar ரங்கநாதன் தெரு மேலும் 8 வாரம் திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை தியாகராயர் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளைத் திறந்து வைப்பதற்கான அனுமதியை மேலும் 8 வார காலத்துக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்று 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பமாக அனுமதியின்றி கட்டப்பட்ட 25 கட்டிடங்களை முதல் கட்டமாக இடிக்க கடந்த் நவம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்த 25 கட்டிடங்கள் நவம்பரில் சீல் வைக்கப்பட்டன.
இதனை அகற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வியாபாரிகள் மேல்முறையீடு செய்தனர். இதில் பொங்கல் உள்ளிட்ட பண்டிக்கைக்காக கடைகளை 6 வாரம் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த அனுமதியை மேலும் 8 வார காலத்துக்கு நீட்டித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோகன் குழு
விதிமீறிய கட்டிடங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டிருந்த மோகன் குழு, 2007-ம் ஆண்டுக்கு முன்பு விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை நிபந்தனையுடன் இயங்க அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மோகன் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க தமிழக அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளிப்பதாகக் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: