புதன், 15 பிப்ரவரி, 2012

முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை ஏமாற்றிய ஆஞ்சநேயன்

நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த திடீர் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடோடிகள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் இந்த திருமணம் தற்போது பெரும் பிரளயத்தை சந்தித்துள்ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவராம். தனது முதல் திருமணத்தை மறைத்து விட்டார். இதையடுத்து அனன்யாவின் குடும்பம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து தனது மகளை ஏமாற்றிய ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல் திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்தபோது தனக்கு ஏற்கனவே திருமணமானதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

திருமணம் செய்து கொண்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்றிருந்த அனன்யா மனமுடைந்து நொறுங்கிப் போயுள்ளாராம்.

கருத்துகள் இல்லை: