![]() |
minnambalam : பாஸ்கர் செல்வராஜ் பாகம் 9 : கொரோனா முடக்கம் ஏற்கனவே இந்தியச் சில்லறை சந்தையில் இருந்த வியாபாரிகளைப் பெருமளவு வியாபாரம் செய்ய விடாமல் தற்காலிகமாக முடக்கியது. இந்த காலத்தில் அவர்களின் இடத்தை இணைய வர்த்தகத்தின் வழியில் பிடித்த பெருநிறுவனங்கள் இப்போது அதிரடியாக அந்த இடத்தை விரிவுபடுத்தி வியாபாரிகளை நிரந்தரமாக வெளியேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் இடத்தை அமேசான், வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட், ஜியோ – கூகுள் - முகநூல் ஆகிய மூன்று பெருநிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு கைப்பற்றி வருகின்றன. 1.2-1.4 கோடி கடைகள் செயல்பட்டு வரும் இந்தச் சந்தையை இந்த மூவரும் கட்டுப்படுத்தும் வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி சில நிறுவனங்களிடம் சந்தை ஒருமுகப்படும்போது இந்த சந்தை உள்ள நிலப்பரப்புக்குள் பொருட்களை உற்பத்தி செய்யவும், கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் எந்த தடையுமற்ற கட்டமைப்பைக் கோருகிறது. நடைமுறையில் இருக்கும் எல்லா தடைகளையும் நீக்க சொல்கிறது.














