Sridhar Subramaniam : ஐஐடியில் ஒரு அறிவீனம்!
. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும் முத்துசுவாமி தீட்சிதரின் 250ஆவது நிகழ்ச்சி ஐஐடி மெட்ராஸில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி பேசி இருக்கிறார். அந்த உரையைக் கேட்டேன்.
'நியூட்டனின் அறிவியல் பார்வை' எழுத்தறிவற்ற பார்வை என்றுதான் ஆரம்பிக்கிறார். ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்! அடுத்ததாக ஐன்ஸ்டைனின் ரிலேடிவிடி தியரியை எடுத்துக் கொள்கிறார். அந்த ஃபார்முலாவில் ஐன்ஸ்டைன் ஒரு மாபெரும் தவறு செய்திருக்கிறார். காரணம், இந்தப் பிரபஞ்சத்தை ஐன்ஸ்டைன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, என்கிறார்.
இப்படியே அவரது உரை போகிறது. பல்வேறு வரலாற்று அறிஞர்கள், விஞ்ஞானிகள் என்று பலரையும் சாட்சிக்கு அழைக்கிறார். எதற்கு? வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் சொன்னவைதான் சாட்சாத் சத்திய உண்மை! இந்தப் பிரபஞ்சம் குறித்த உபநிடதப் பார்வைதான் உண்மையான பார்வை! இதைத்தான் உலகின் பெரிய அறிவியல் அறிஞர்கள் எல்லாருமே சொல்கிறார்கள்! இந்த விக்ஸ்சைத்தான் 35 நிமிடங்கள் சுற்றிச் சுற்றிப் பேசுகிறார்.
சரி, அவர் சொல்வதில் என்ன பிரச்சினை? பார்ப்போம்:
உபநிடதங்கள் சிலவற்றில் இந்தப் பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம் குறித்த மாபெரும் ஆச்சரியப் பார்வைகள் இருக்கின்றன, என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. சொல்லப் போனால் தோற்றம் குறித்து உலகெங்கும் பண்டைய சமூகங்கள் உருவாக்கிய வேறு எந்தக் கதையையும் விட உபநிடதங்கள் சொல்லும் கதைகள் மேம்பட்டவை. Consciousness எனப்படும் தன்னுணர்வு குறித்தும் உபநிடதங்கள் சொல்லும் சில விஷயங்கள் சிலாகிக்கத்தக்கவை. தன்னுணர்வு குறித்த நவீன அறிவியல் பார்வையே, சுமார் 18,19ம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி இயக்க சிந்தனையாளர்கள் மூலம் துவங்கியது. ஆனால் அதற்கு சுமார் 2000 ஆண்டுகள் முன்பே அது பற்றி உபநிடத சிந்தனையாளர்கள் யோசிக்கத் துவங்கி இருக்கின்றனர். இந்த ஆச்சரியங்கள் குறித்து எனது 'கடவுள் எனும் ஸ்பைடர்மேன்' புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறேன்.
ஆனால் அவை வெறும் ஆச்சரிய சிந்தனைகள் என்ற அளவில் மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டியவை. Contemplative Wisdom என்று சொல்லுவார்கள். மானுட ஆழ் சிந்தனையில் உருவான கருத்தாக்கங்கள். இந்த கருத்தாக்கங்கள் சில ஆச்சரியமாக இருந்தாலும் அவற்றை அறிவியல் என்று சொல்ல முடியாது. காரணம் சிந்தனைகளில் நல்ல விஷயங்களும் வரும். மொக்கை விஷயங்களும் வரும். குரூர விஷயங்களும் வரும். தோற்றம் குறித்த அனுமானங்கள், அகிம்சை, என்று சில நல்ல விஷயங்களுடன் கூடவே சாதி, பிராமண உயர்வுவாதம், பெண்ணடிமைத்தனம், தலித் ஒடுக்குமுறை என்று பல குரூரங்களுக்கும் வேதிய பிராமணியம் காரணமாக இருந்திருக்கிறது.
பண்டைய இந்தியா குறித்து சிலாகிப்பதில் இதுதான் பிரச்சினை. நான் அடிக்கடி எழுதுவது போல, ஓரளவுக்கு வாழ்வதற்குத் தகுதியானதாக பண்டைய இந்தியா இருந்தது இரு தரப்பினருக்கு மட்டும்தான்: பிராமணர்கள், சத்திரியர்கள். அதிலும் ஆண்கள்தான். மீதி அனைவருக்குமே இந்தியா ஏறக்குறைய நரகமாகத்தான் இருந்தது. அந்த நரகத்தில் இருந்து சும்மா ஒரு ஐந்தாறு பேர் ஏதோ ப்ரில்லியண்ட்டாக சொன்ன சில வரிகளை எடுத்துக் கொண்டு பேசுவதற்கு ஒன்று அறிவிலியாக இருக்க வேண்டும். அல்லது சிந்தனை முழுவதும் குரூரம் நிரம்பி இருக்க வேண்டும்.
அது ஒரு புறம் இருக்க, அறிவியல் குறித்து குருமூர்த்தி சொல்வதிலும் கூட அண்டா சைஸ் ஓட்டைகள் உள்ளன.
உதாரணத்துக்கு ஐன்ஸ்டைன் தனது சமன்பாட்டில் செய்த தவறு பற்றிப் பேசுகிறார். அது cosmological constant எனும் ஒரு மாறிலியைக் கொண்டு வந்தது. அந்த மாறிலி குறித்து ஐன்ஸ்டைன் பேசும்போது 'Greatest blunder of my life' என்று சொன்னார். அது முப்பதுகளில். அப்போது கரும் ஆற்றல், Dark Energy, பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இன்று தெரியும். எனவே நவீன அறிவியல் அந்த மாறிலியை உள்வாங்கிக்கொண்டே இயங்குகிறது. அதாவது ஐன்ஸ்டைன் தவறு என்று சொன்னது தவறே அல்ல. ஐன்ஸ்டைன் சொன்ன அந்த வரி பற்றி நீல் டிக்ராஸ் டைசன் பேசுகையில் 'Einstein's greatest blunder was calling the formula a blunder in the first place!'
ஆனால் இந்தப் பின்ணணி குறித்து எதுவுமே தெரியாமல் நியூட்டன் தப்பு செய்து விட்டார், ஐன்ஸ்டைன் தப்பு செய்து விட்டார். அந்தத் தப்புகளை எல்லாம் நமது பண்டைய ரிஷிகள்தான் வந்து சரி செய்து கொடுத்தார்கள் என்ற ரேஞ்சுக்கு குருமூர்த்தி அளக்கிறார். கூடவே பிக் பேங் நடந்த போது எழுந்த ஒலி 'ஓம்' போலக் கேட்டது, என்றும் சொல்கிறார். அதை நிரூபிக்க ஒரு ஆடியோ போடுகிறார். ஏதோ சித்தார் இசை போலக் கேட்கிறது அது. பிக் பேங்க் நடந்த போது பண்டித் ரவிஷங்கர் அங்கே இருந்தாரா என்று கேட்கத் தோன்றியது.
ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் இப்படி உளறுவது ஒன்றும் புதிதல்ல.
சூரியனில் இருந்து வரும் ஒலியை நாசா ரெகார்ட் செய்திருக்கிறது; அது 'ஓம்' என்று கேட்கிறது, எனும் ஒரு போஸ்டரை முன்பு ஒரு முறை கிரண் பேடி பதிந்திருந்தார். அதைப் பலரும் கலாய்க்க ஆரம்பிக்கவே டிலீட் செய்து ஓடி விட்டார். ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிடி தியரி குறித்த குறிப்புகள் ரிக் வேதத்திலேயே இருக்கின்றன என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பண்டைய இந்தியாவின் அறிவியல் திறமை பற்றி பாஜக, ஆர்எஸ்எஸ் ஆட்களின் உளறல்களைத் தொகுத்தால் ஆயிரம் பக்க புத்தகம் போடலாம். அந்த அளவுக்குப் போகவில்லை எனினும் எனது 'ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்' புத்தகத்தில் ஒரு அத்தியாயம் முழுக்க அவை பற்றிப் பேசி, அவற்றின் அபத்தங்களை விளக்கி இருக்கிறேன். (அத்தியாத் தலைப்பு: ரிக் வேதத்தில் ரிலேடிவிடி)
கடைசியாக, தனிப்பட்ட முறையில் அந்த உரை பார்க்கப் பார்க்க ரொம்பப் பரிதாபமாக இருந்தது. எண்பதுகளின் இறுதியில் திருவல்லிக்கேணியில் இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அகப்படும் சிறுவர்களிடம் எல்லாம் பண்டைய இந்தியா பற்றி நீள நீளமாக அளப்பார்கள். ஏழாம் நூற்றாண்டுக்கு முன் ஒரு பொற்காலம் இங்கே நிலவியது. முஸ்லிம்களும், நேருவும், காங்கிரசும் வந்து அதை எல்லாம் நாசம் செய்து விட்டார்கள் என்று அங்கலாய்ப்பார்கள்.
அதை எல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போய்க் கொண்டிருப்போம். இன்றும் அதே டெய்லர், அதே வாடகைதானா என்பது ஆயாசமாக இருந்தது. அதாவது நான் பார்த்தே 35 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சில் எந்த அறிவு வளர்ச்சியும் நடக்கவில்லை என்பது தெரிகிறது. சொல்லப் போனால் 100 ஆண்டுகளிலும் அவர்களின் அறிவு ஒரு சதவிகிதம் கூட வளரவில்லை என்பதைத்தான் குருமூர்த்தி இந்த உரையில் நிரூபித்திருக்கிறார்.
மண்புழுக்கள் கேட்பதற்குக் கூடத் தகுதியில்லாத உரையைப் பேசுவதற்கு ஐஐடி மெட்ராசிலேயே மேடை போட்டுக் கொடுக்கப்படுகிறது. பேசுவது ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அதை விட முக்கியமாக, பிராமணர் என்பதைத்தவிர அவருக்கு வேறு என்ன சிறப்புத் தகுதி இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஐஐடி மெட்ராசுக்கு வன்மையான கண்டனங்கள். இந்த அறிவீனக் கொடுமையில் இருந்து நவீன இந்தியா மீண்டு வரட்டும். மீண்டு செக்யூலரிசம், அறிவியல், மற்றும் மானுடவியல் பாதைக்குத் திரும்பி முன்னேறட்டும்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
(பி.கு. அந்த அறிவீன உரையின் லின்க்கைப் பகிர விரும்பவில்லை. ஆர்வமிருப்பவர்கள் 'Thuglak Editor S Gurumurthy Speech | 250th Anniversary of Muthuswami Dikshitar | IIT Madras IKS' என்று யூடியூபில் தேடிப் பார்த்து ரசிக்கலாம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக