திங்கள், 30 மார்ச், 2026

நடிகர் கருணாஸ் சிவகங்கை அதிருப்தியாளர்களை சமரசப்படுத்த முயற்சி!

 hindutamil.in  :  சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் நடிகர் கருணாஸ் ஈடுபட்டுள்ளார்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியை இந்த முறை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களது தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
திமுகவில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் உள்ளிட்டோரும், காங்கிரஸில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்டோரும் சீட் பெற முயற்சித்தனர்.



இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸூக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டதால், திமுகவினர், காங்கிரஸார் ஏமாற்றமடைந்தனர். இதனால், அதிருப்தியடைந்தவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் கருணாஸ் ஈடுபட்டுள்ளார்.

அவர் ஒவ்வொரு நிர்வாகியாக செல்போனில் தொடர்புகொண்டு சென்னையிலிருந்து சிவகங்கை வந்ததும் சந்திப்பதாகவும், திமுக சார்பில் நிற்பதால் தன்னையும் திமுககாரராக நினைத்து தேர்தல் பணி மேற்கொள்ளுமாறும் கேட்டு வருகிறார்.

இதுகுறித்து திமுகவினர் சிலர் கூறுகையில், ‘கட்சித் தலைமை யாரை அறிவித்தாலும் வேலை செய்யத் தயாராகத்தான் இருக்கிறோம். தற்போது கருணாஸை அறிவித்துள்ளனர். அவரும் திமுக சின்னத்தில்தான் நிற்கிறார். அதனால் அவரது வெற்றிக்குப் பாடுபடுவோம்’ என்றனர்.

கருத்துகள் இல்லை: