தினமலர் : காரைக்குடி: காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள திருமாவளவன் அதில் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
சிதம்பரம் எம்பியாக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் சட்டசபை வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறார்? அந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது எனக்கு தெரியாது. ஒருவர் இரு தொகுதிகளில் போட்டி போடுவதை நான் எதிர்த்தேன். வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த போது, கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்றார்.
கன்னியாகுமரி எம்பி தொகுதியில் நிற்பதற்கு உங்கள் கட்சியில் வேறு ஒருவரே இல்லையா என்று நான் கேட்டேன். ஒருத்தர் இரு பதவிக்கு போட்டி போடும்போது ஜனநாயகத்தில் இன்னொருத்தருக்கு அந்த வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
2 பதவியில் இருக்கும் போது ஒரு பதவியை வைத்துக் கொண்டு மற்றொரு பதவியில் இருந்து விலகும் போது வலுக்கட்டாயமாக ஒரு தேர்தல் திணிக்கப்படுகிறது. இந்தியா மாதிரி ஒரு வளரும் நாடு, ஏழ்மை நாடு, 28 சதவீதம் பேர் சாப்பாடு இல்லாமல் தினமும் தூங்குகின்றனர். இந்த நாட்டில் வலுக்கட்டாயமாக ஒருதேர்தல் நடத்தப்படுகிறது, மக்கள் மீது சுமை திணிக்கப்படுகிறது.
தேர்தல் கமிஷன் மக்களின் காசில் இருந்து இடைத்தேர்தலை நடத்துகிறது. இது ஏற்புடையதாக இல்லை. அப்படியே பதவிக்கு ஆசைப்பட்டு நீங்கள் எம்பியாக இருந்து எம்எல்ஏவாகவோ அல்லது எம்எல்ஏவாக இருந்து எம்பியாகவோ போக வேண்டும் என்றால் இடைத்தேர்தல் நடக்கும் செலவை செலுத்திவிட்டு நீங்கள் பதவியேற்றுக் கொள்ளுங்கள்.
ஒருவேளை திருமாவளவன் எம்எல்ஏ வென்றுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது சிதம்ரபம் எம்பி என்பதில் இருந்து விலகுவார்... வலுக்கட்டாயமாக ஒரு இடைத்தேர்தல் வரும். இப்போது அந்த செலவை யார் ஏற்பார்?
நான் என்ன பரிந்துரைக்கிறேன் என்றால், அந்த தொகுதியில் தேர்தலில் 2வது இடத்தை பிடித்து இருப்பவருக்கு மக்கள் அளித்த ஓட்டுகளுக்கு மதிப்பளித்து, மீதம் இருக்கும் இரண்டரை ஆண்டுகாலம் அவர் எம்பியாக தொடருவார் என்று பதவியேற்க வைத்துவிட்டீர்கள் என்றால் செலவு மிச்சம்.
இதுதான் அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம். அப்படி இல்லை என்றால்.. யார் பதவிக்காக போனார்களோ அவரிடம் காசை வாங்கிக் கொண்டு தேர்தலை நடத்து. மக்கள் காசில் நடத்தாதே. அப்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக